என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கறம்பக்குடி பஸ்நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி பஸ்நிலையத்தில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது, சுகாதார மேற்பார்வையாளர் துரைமாணிக்கம் ஆகியோர் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து அப்பகுதியில் முககவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே மாங்காடு பூச்சி கடை மற்றும் புள்ளான்விடுதி கடைத்தெரு பகுதிகளில் வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதமுத்து, மரியதாஸ் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது புள்ளான்விடுதி மற்றும் மாங்காடு பூச்சிகடை பகுதிகளில் கடைகளில் வைத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக, புள்ளான்விடுதி விடுதிதியை சேர்ந்த சேதுராமன் (வயது 40), மாங்காடு பூச்சிகடையை சேர்ந்த செல்வம் (55) ஆகியோரை கைது செய்தனர்.
    புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மறித்து பிடித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக இருந்து வருகிறது. நோய் தொற்றை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக கழுவ கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அரசு வழங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகமும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அரசின் அறிவுரைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக் கப்படுகிறது.

    முககவசம் அணியாதவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி மாவட்டத்தில் ஆங்காங்கே நடந்து வந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு நகராட்சி சுகாதார பணியாளர்கள் உட்படுத்தினர். இதற்காக ஆங்காங்கே மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் அருகே நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் நேற்று நின்றுக்கொண்டு, சாலையில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும், நடந்தும் வந்த பொதுமக்களை பிடித்து நிறுத்தி கொரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் இருந்து ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து, அவர்களது பெயர், விவரம், செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு சிலருக்கு அபராதம் விதித்து முக கவசங்களை வழங்கினர். காலை 10.30 மணி முதல் பகல் 12.45 மணி வரை மொத்தம் 100 பேரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதேபோல நகரப்பகுதியில் ஆங்காங்கே நடைபெற்றது.

    இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை தூய்மை பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் விரட்டி, விரட்டி பிடித்தனர். இதில் சிலர் தப்பித்து வேகமாக சென்றதை காணமுடிந்தது. அதேநேரத்தில் வாகனங்களில் வந்தவர்கள் வண்டியை நிறுத்திய போது, பின்னால் வந்த வாகனங்கள் நிலைகுலைந்தது. போக்குவரத்தும் நெருக்கடி ஏற்பட்டது. முக கவசம் அணியாமல் வெளியில் வருவது தவறாகும். அதே நேரத்தில் அவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் போது மற்றவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி மன்றம் மற்றும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் இணைந்து மேற்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர். முகாமில் ஏராளமான கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொண்டனர். அதே போல கொத்தமங்கலம் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வாலிபர்கள் முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனைகள் செய்து கொண்டனர். இது குறித்து வாலிபர்கள் கூறும் போது, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் போது கொரோனா பரிசோதனை அவசியமாக கேட்கிறார்கள். கொரோனா இல்லை என்று சான்றிதழுடன் சென்றால் தான் வேலை உறுதி செய்யப்படுகிறது. அதனால் சிறப்பு முகாம்களில் பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.
    புதுக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 20) . இவர் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.
    புதுக்கோட்டையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தை சேர்ந்தவர் உமையாள் ஆச்சி (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் வெளியூர்களில் வசித்து வருவதால், உமையாள் ஆச்சி விராச்சிலையில் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்த 3 பெண்கள், உமையாள்ஆச்சியை கட்டிப்போட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். உமையாள் ஆச்சியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது உமையாள்ஆச்சி கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கயிற்றை அவிழ்த்து நடந்த விவரத்தை கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே கொள்ளையில் ஈடுபட்ட 3 பெண்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அந்த பெண்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் உமையாள் ஆச்சியை கட்டிப் போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

    பின்னர் 3 பேரையும் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி கருப்பாயி (35), ஆவணிபட்டியை சேர்ந்த வீரப்பன் மனைவி தெய்வானை (40), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஸ்ரீவித்யா (34) என தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்து, உமையாள் ஆச்சியிடம் கொள்ளையடித்த நகை- பணத்தை மீட்டார். மேலும் இதுபோன்று எங்காவது திருட்டில் ஈடுபட்டார்களா? என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி(எஸ்.டி.பி.ஐ) சார்பில், மத்திய அரசின் விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம் புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு அக் கட்சியின் நகர தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாத துரை, மாவட்ட செயலாளர் ஜகுபர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு திருமயம் தொகுதி செயலாளர் இஸ்மாயில் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம்.தாஹா, தொகுதி துணை தலைவர் முகமது மைதீன், நகர தலைவர் ஷேக் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டு சட்ட நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் போராட்டக்காரர்கள் கையிலிருந்த சட்ட நகலை கிழிக்க விடாமல் பறித்து சென்றனர்.

    கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா யூனியன் செயலாளர் ஆஷிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணமேல்குடியை அடுத்த அம்மாபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கிளைத் தலைவர் கமருதீன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீமிசல் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைத் தலைவர் ஹனிபா தலைமை தாங்கினார்.

    இதில், கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சாலிஹ் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார்.
    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுக்கோட்டையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் வருகிற 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். 

    ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் விடுதலைக்கனல் (வடக்கு) , சசி கலைவேந்தன்(தெற்கு), முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் முகமது அஸ்ரப்அலி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில், அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
    கீரமங்கலம் அருகே சாக்கு மூட்டையில் மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் கிராமத்தில் வில்லுனி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் கட்டி மணல் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கடத்துவதற்காக 64 சாக்கு மூட்டைகளில் மணல் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனை அவர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (வயது 30), மகேந்திரன் (34), பனங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல் அருகே சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் போலீசார் வீரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரப்பட்டி தம்புரான்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த அரும்பு சுப்பையா (வயது 40), இலுப்பூரை சேர்ந்த செல்வராஜ் (39), பின்னங்குடியை சேர்ந்த மதிவாணன் (50), அன்னவாசலை சேர்ந்த அடைக்கலம் (37), இலுப்பூரை சேர்ந்த ஜாகிர்உசேன் (44), ராசிபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40), கொன்னப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (23), தொட்டியம்பட்டியை சேர்ந்த ராமநாதன் (55) ஆகிய 8 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
    அன்னவாசல்:

    அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே முகாம்அமைத்து இருந்தனர். அப்போது, முககவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி, அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருக்கிறதா? என நடமாடும் மருத்துவகுழு டாக்டர் முருகேசன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் கேட்டறிந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையின் மூலம் கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, புலியூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த 26 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று விரைவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்” என்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை பிடித்து இழுத்து, குளக்கரை பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அந்த சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நழுவ முயற்சித்த போது, 3 பேரில் ஒருவர், சிறுமியை கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

    இதில் அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடினர். சிறுமியை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயற்சித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×