search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுக்கோட்டையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பெண்கள் கைது

    புதுக்கோட்டையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தை சேர்ந்தவர் உமையாள் ஆச்சி (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் வெளியூர்களில் வசித்து வருவதால், உமையாள் ஆச்சி விராச்சிலையில் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்த 3 பெண்கள், உமையாள்ஆச்சியை கட்டிப்போட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். உமையாள் ஆச்சியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது உமையாள்ஆச்சி கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக கயிற்றை அவிழ்த்து நடந்த விவரத்தை கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே கொள்ளையில் ஈடுபட்ட 3 பெண்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அந்த பெண்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் உமையாள் ஆச்சியை கட்டிப் போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

    பின்னர் 3 பேரையும் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி கருப்பாயி (35), ஆவணிபட்டியை சேர்ந்த வீரப்பன் மனைவி தெய்வானை (40), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஸ்ரீவித்யா (34) என தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்து, உமையாள் ஆச்சியிடம் கொள்ளையடித்த நகை- பணத்தை மீட்டார். மேலும் இதுபோன்று எங்காவது திருட்டில் ஈடுபட்டார்களா? என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×