search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அகதி"

    • முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை ஆன இலங்கைத் தமிழர் சாந்தன் (வயது 55) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    சிறை விடுவிப்புக்குப் பின்னர், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் அவர் உயிரிழந்தார் என கூறி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

    தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை திரும்பப் பெற்றார். முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இன்று 3-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடிக்கிறது. முஜிபுர்ரகுமான் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.

    அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை.

    இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில்
    • போலீஸ்காரரை இலங்கை அகதி இரும்பு கம்பியால் தாக்கினார்

    திருச்சி:

    இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராசா என்கிற லோகேஷ் (வயது 42 ). திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டுனருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் சென்று எனக்கு தண்டனை காலம் முடிந்து விட்டது. பிறகு ஏன் என்னை முகாம் சிறையில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இலங்கை அகதி அங்கு இருந்த இரும்பு கம்பியால் போலீஸ்காரர் துரையை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்து போலீஸ்காரர் துரை கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இலங்கை அகதி லோகேஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இலங்கை அகதி லோகேஷ் மீது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அகதி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் வின்சென்ட் மெரிண்டா (வயது46). இவா் மண்டபத்தைச் சோ்ந்த சோனை முத்துவின் விசைப்படகின் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்தநிலையில், வின்சென்ட் மெரிண்டா உள்ளிட்ட சிலா் கடலுக்குள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினா்.

    இதையடுத்து மீன்பிடிக்க சென்ற வின்சென்ட் மெரிண்டா, மோரிஸ், காா்த்திக், பரமசிவம், பாபு ஆகிய 5 பேருக்கும் படகு உரிமையாளரான சோனைமுத்து பணம் கொடுத்தார். அதை 5 பேர் பிரித்து எடுத்துக்கொண்டனர். ஆனால் கார்்த்திக் கூடுதலாக பணம் கேட்டு தகராறு செய்தார்.

    அப்போது கார்த்திக், அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் பாட்டிலால் வின்சென்ட் மெரிண்டாவை தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாா் வழக்குப்பதிவு செய்து மீனவா்கள் காா்த்திக், சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தாா்.

    • இலங்கை வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் கோடீஸ்வரன், இவரது மனைவி கஸ்தூரி கர்ப்பிணியாக உள்ளார்.
    • கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களிடம் முதல்-அமைச்சரர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த இலங்கை தமிழர்கள் பலர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

    இலங்கை வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் கோடீஸ்வரன் (வயது 27), இவரது மனைவி கஸ்தூரி கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். தொடர்ந்து உரிய விசாரணைக்கு பின் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களிடம் முதல்-அமைச்சரர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் பேசிய கஸ்தூரி, என் குழந்தை தமிழகத்தில் பிறக்க உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். அதற்கு முதல்-அமைச்சர், நீங்கள் குழந்தையை நல்லபடியாக பிரசவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று தனது கர்ப்பிணி மனைவிக்கு இந்திரகுமார் மண்டபம் முகாமில் உள்ள நாவல் மரத்தில் பழங்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சீருடை அணியாமல் மது போதையில் வந்த போலீஸ்காரர் ஒருவர் இந்திரகுமாரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    மேலும் அந்த போலீஸ்காரர், அவரை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கர்ப்பிணியான கஸ்தூரியையும் அந்த போலீஸ்காரர் திட்டியுள்ளார்.

    சொந்த நாட்டை விட்டு தமிழகத்திற்கு வந்தால் மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அகதியிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் இந்திர குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுடன் தனித்துறை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை அகதி‌ மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த மாதம் 29-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர்.
    • கணவர் பெரியண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    இதையடுத்து அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அதிகளாக வந்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அவர்கள் யார்? என்று விசாரித்தபோது இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பதும், இலங்கையில் கூலிவேலை பார்த்து வந்த வயதான தம்பதி இருவரும், அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இரவு நேரத்தில் கடல் நீரில் அதிக நேரம் நின்றபடி இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்தனர். இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 29-ந்தேதி முதல் அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மூதாட்டி பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். அவரது கணவர் பெரியண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக கணவருடன் வந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×