என் மலர்tooltip icon

    மதுரை

    • தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
    • தமிழக அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மேலவளவில் பலியான சம்பவத்திற்கு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997-ல் படுகொலை நடந்தது. கள்ளச்சாராயம், நச்சு சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வு பூரண மது விலக்கு மட்டுமே. டாஸ்மாக் கடையிலும் பாதிப்பு உள்ளது. தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

    மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மது விலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால், பூரண மது விலக்கு என்பதே தீர்வு.

    பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவு. அயோத்தி கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

    நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை கோபப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன். அதில் பிழையும், உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.

    கள்ளுக் கடைகள் திறப்பதன் மூலம் கள்ளச்சாராய சாவுகள் தடுக்கப்படுமா? காந்தியடிகள் கள் உள்பட எந்த மதுவும் வேண்டாம் என்று தான் கூறி உள்ளார். தமிழக அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.

    கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான். முதல்வர் டாஸ்மாக் கடையை மூடினால் மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயரும் ஏற்படும்.

    ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தகைள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று கட்சி சார்பில் மிகப் பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

    கள் விற்பனை, டாஸ்மாக் மது உள்பட எந்த வகை மதுவும் வேண்டாம். பூரண மது விலக்கு என்பதே தீர்வு, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
    • விளக்கம் அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கும் படம் இந்தியன்-2. இந்த திரைப்படம் ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது.

    இதற்கிடையே மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனுவில், லைகா புரெடக்ஸன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது, அந்த படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத் தப்பட்டது. அதற்காக எனது பெயரும் அந்த படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது, இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

    அதில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தின் வர்மக் கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பாக எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்த வில்லை. எனவே படத்தை எந்த தளம் வாயிலாகவும் வெளியிடக்கூடாது. குறிப்பாக திரையரங்குகள் மற்றும் ஓ.டி.டி. தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட நிரந்தர தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை மதுரை மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி செல்வ மகேஸ்வரி வழக்கு விசாரணைக்கு உகந்ததாக கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக எதிர் மனுதாரர்களான கமல்ஹாசன், இயக்குனர் சங்கர், லைகா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன் ஆகியோர் மனு குறித்து தங்களது ஆட்சேபனையை நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாக அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
    • பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பி.ராமநாதபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 1, 3, 5 ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கூட. சிறுமிகள் முறையே 3 மற்றும் 5-ம் வகுப்புகளும், சிறுவன் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த 3 மாணவர்களுக்கும் அருகில் பாப்பையாபுரத்தில் உள்ள பள்ளியில் இருந்து காலை உணவு திட்டம் மூலம் உணவு சமைத்துக் கொண்டு வரப்படுகிறது. மதிய உணவு அருகில் உள்ள சிலைமலைபட்டியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் 150 பேர் வசித்து வருகிறோம். ஆனால் பெரும்பாலானோர் வேலைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் குறைந்த அளவே மக்கள் வசித்து வரும் நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகம் இல்லாததால் சேர்க்கை குறைவாக உள்ளது" என்றனா்.

    • மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.
    • கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 55 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதையொட்டி பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்களும் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராய சம்பவத்தில் 55 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதேபோல் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த சூழலில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்பட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளூர் சிலை அருகே பா.ஜ.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் இறந்தவரை தூக்கி செல்லும் பாடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசை கண்டித்து சிலர் பாடையை எடுத்து வந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜ்குமார், கருட கிருஷ்ணன், நவீன், வேல்முருகன், ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நிர்மலாதேவி கூறியிருந்தார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழி நடத்த முயன்றதாக புகார் எழுந்தது.

    இந்த விவகாரம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். ஆனாலும் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர், பேராசிரியர்கள், மாணவிகள், அவர்களின் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 29, 30-ந்தேதிகளில் அளிக்கப்பட்டது.

    இதில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் நிர்மலா தேவியை மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    இந்த தண்டனையை எதிர்த்து பேராசிரியை நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு எனக்கு வழங்கிய தண்டனை சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ, ஜாமீன் வழங்கவோ முடியாது என் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது.
    • சட்டமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்.

    மதுரை:

    விடாமுயற்சி கொண்ட ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து தனது 'எக்ஸ்' வலைதளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து நான் கவர்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அவரது இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் இவரது கருத்து விவாதிக்க தொடங்கியது. அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் இந்த பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சில நாட்களில் அந்த பதிவை செல்லு ராஜூ திரும்ப பெற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இ-சேவை பிரிவை தொடங்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, மீண்டும் ராகுல் காந்திக்கு புகழாரம் சுட்டியுள்ளார். அப்போது மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அந்த வகையில் விடாமுயற்சி கொண்ட ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுக்கும், எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். எதற்காக இந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது.

    இடைத்தேர்தல் என்றாலே புது புது யுத்திகளை தி.மு.க. சட்டத்திற்கு புறம்பாக செய்யும். பணம் ஆறாக ஓடும், மக்களை எந்த வகையில் கவர்வதற்கும் தி.மு.க.வினர் செயல்படுவார்கள். பா.ம.க.வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள்.

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மனம் இல்லை என்று கூற முடியாது. ராகுல் காந்தி விடாமுயற்சி கொண்டவர். காங்கிரசை கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    தி.மு.க.வினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியும் இல்லாமல் தி.மு.க. தனித்து நிற்க தயாரா? அ.தி.மு.க. போல் தி.மு.க. தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும். மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா? ஜெயலலிதா போன்று இன்றைய முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க. தலைவர்களும் முடிவெடுப்பார்களா? சட்டமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை.
    • எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகா தேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் லஜபதிராய், வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ஊட்டியில் புலிகள் காப்பகத்துக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்யும் நடவடிக்கையின்போது வனத்துறை சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுபோல மாஞ்சோலையையும் புலிகள் காப்பகத்துக்காக கையகப்படுத்தப்படுவதால், அங்குள்ள தொழிலாளர்களுக்கும் வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினர்.

    மேலும், மனுதாரர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து தருவது அவசியம் எனவும் கோரினர். இதை பதிவு செய்து கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை மாஞ்சோலையில் இருந்து அவர்களை வெளியேற்ற தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

    • ராகுல் காந்தியின் முயற்சி, விடா முயற்சி, காங்கிரசை கட்டிக் காக்க நினைக்கிறார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார்.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த இளம் தலைவரோடு பிறந்தநாள்... என்று கூறியதற்கு செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மாற்றத்தான் தோட்டத்துக்கு மல்லிக்கைக்கும் மணம் உண்டு. ஆக, எதிரி தோட்டத்தில் பூத்த மல்லிகைக்கு வாசம் இல்லை என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. ராகுல் காந்தியின் முயற்சி, விடா முயற்சி, காங்கிரசை கட்டிக் காக்க நினைக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர்.

    இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் தங்கை ஆவர்.

    நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.

    இவருடன் காரில் பயணித்த கணவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரை மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஜெனோவா இவாஞ்சலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

    தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.
    • அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    52 ஆண்டுகள் மிகப்பெரிய வரலாறு கொண்ட மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம், முதல் ஆளாக நின்று மக்கள் தொண்டாற்றிய இயக்கம் என்றால் அது அ.தி.மு.க. தான்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சாதகமாக நடைபெறாது என்று புறக்கணித்த காரணத்தை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளார். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 21 சதவீதம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டியுள்ளார்.

    விக்கிரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்ற அடிப்படையில் அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    இந்த இடைத்தேர்தலால் எந்த மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு பிரதான எதிர்க்கட்சி ஏன் புறக்கணிக்கிறது என்று மக்கள் விவாதிக்கிறபோது இப்போது தி.மு.க. தேர்தலை அணுகுகிற படைபலம், பணபலம், அதிகார பலம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் ஜெயலலிதா இளையான் குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும், அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையை உருவாக்கினார்.

    அன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்த அளவுக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.

    மக்களை சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தடையாக தி.மு.க. அரசு தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாடுகளை மீறி, வரம்பு மீறி செயல்படுவார்கள் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிற முடிவை அறிவித்த உடனே எங்கள் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வும் புறக்கணித்துள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார். அது பகல் கனவு, அது நிச்சயமாக ஒரு நாளும் நடக்காது. மக்கள் தி.மு.க.வுக்கு அது போன்ற ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

    அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அ.தி.மு.க. பெற்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க. 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று தி.மு.க.விற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற கட்சிகளை வரவேற்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் உரிமையை மீட்க, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவார், தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.

    52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை, எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகின்றார்.

    எங்களை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை களத்தில் நிறுத்தி நாங்கள் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
    • கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்ட பழமையான மதுரை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக்காடுகள் சரகம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

    இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோவில் மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்றாலும் மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் வசிக்கின்றன.

    கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்களும், பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மர்மமான முறையில் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இது தொடர்பான தகவலை அறியும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் கடந்த 2015 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை எத்தனை வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது? எத்தனை வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது? எத்தனை வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது? என்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை வனக்கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்தது.

    இது தொடர்பாக அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை வன கோட்டத்தை பொறுத்தவரை மயில், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், குரங்கு உட்பட 28 அரிய வகை உயிரினங்கள், பறவைகள் ஊர்வன வகைகள் உயிரிழந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக மயில் 435 உயிரிழந்ததுள்ளது. அதேபோல் புள்ளிமான் 258, காட்டு மாடு 71, காட்டுப்பன்றி 43, குரங்கு 40 என மொத்தமாக சுமார் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 93 வன உயிரினங்கள் சாலை விபத்தின் மூலம் மட்டும் உயிரிழந்துள்ளது.

    மதுரை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் வன விலங்குகளுக்கு விஷம் வைத்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வன உயிரினங்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனக்கோட்ட அலுவலகம், வயல்வெளிகளில் மயில்களுக்கு விஷம் வைத்தல், சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வெளிகளில் வனவிலங்குகள் சிக்கி பலியாகிறது.

    அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகள் வேட்டையாடிய அதன் இறைச்சி மற்றும் விலங்குகள் கறி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்வெளிகளில் நெற்பயிரை உண்ண உணவு தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவம் மதுரை அதை சுற்றியுள்ள பகுதியில் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக உயிரினங்கள் வேட்டையாடுதல் மற்றும் வன உயிரினங்கள் குற்றம் தொடர்பாக கண்காணிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு கீழ் நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டல வாரியாக வன காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடும் முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர்பாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் வன அதிகாரிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மதுரையில் சிவப்பு பகுதி என்று அறியக்கூடிய பகுதிகளில் அதிக வனவிலங்குகள் உயிரிழந்த பகுதிகளாக மதுரை ரெயில் நிலையம், சூர்யா நகர் ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்டவற்றில் அதிக அளவு மயில்கள் இறந்துள்ளது. சிவரக்கோட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதியில் புள்ளி மான்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளது. உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, உள்ளிட்ட பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழப்பு அதிகம் உள்ளது.

    மேலும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், படிப்படியாக வனவிலங்குகள் மீது தாக்குதல் மற்றும் வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்வியல் முறைகள்,வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளது.

    இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் எந்திர மயமாகி விட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.

    அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்புகள் நல்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் தருண்குமார் கூறுகையில், வறட்சி காலங்களில் சாலை விபத்து மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் அருந்தும் வகையில் உணவுகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வன விலங்குகளை உயிரிழக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வன விலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-தார்வார், மங்களூரு-கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயில், திருச்சி (7.15/7.20), சேலம் (9.55/10.00) வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம் (5.00/5.05), திருச்சி (8.20/8.25) வழியாக இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    ×