என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகை ரசித்தார்.

    இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதற்கிடையே, தேர்தல் முடிவுற்ற நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.

    இதற்காக, கடந்த மே மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு, படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

    பின்னர், மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று தனது தியானத்தை தொடங்கி இரவு வரை ஈடுபட்டனார். பிறகு, அன்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

    பிறகு மே 31ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.

    பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு, கையில்

    கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார்.

    மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார்.

    பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

    சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

    பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.

    விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார்.

    இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.

    அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

    இந்திய அளவில் சக்தி வாய்ந்த தலைவராகவும், சர்வதேச அளவில் மதிப்புமிக்கவராகவும் திகழ்ந்து வரும் பிரதமர் மோடி இங்கு தியானம் செய்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபம் சர்வதேச அளவிலான கவனத்தை பெற்றது.

    • நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன.
    • படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக 3 படகுகள் காலை 8 மணி முதல் இடைவிடாது இயக்கப்பட்டு வருகின்றன.

    சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியின்போது கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருவதால் படகு போக்குவரத்து தொடங்குவதில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இன்று காலையும் கடல் சீற்றமாக இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய மழையும் நீடித்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    தற்போது பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். மேலும் விவேகானந்தர் நினைவிடம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்திருந்தனர்.

    அவர்கள் இன்று காலை 6 மணியில் இருந்தே படகு குழாமில் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து கூட்டத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
    • மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * குமரி முனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலைக்கு வெள்ளி விழா. தமிழின் பெருமையை குறளின் அருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சியை அடைந்த நாள் இன்று.

    * வான் புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்தது. வெள்ளிவிழா கொண்டாடிய பெருமை எனக்கு. அப்பா என்ன வைத்துவிட்டு போனார் எனக்கேட்போருக்கு தமிழகத்தின் குமரிமுனையில் உள்ள வள்ளுவர் சிலை பதில் சொல்லும்.

    * வள்ளுவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் ஆனதற்கு பெரிய விழா எடுக்க வேண்டும் என்பதை சொன்னதற்கு விமர்சனம் எழுந்தது. அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்பினர்.

    * திருவள்ளுவர் தமிழகத்திற்கும், திருக்குறள் தமிழரின் பண்பாட்டுக்கும் அடையாளம் என்பதால் கொண்டாடுகிறோம். வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடி கொண்டே இருப்போம்.

    * அய்யன் வள்ளுவர் சிலை வெள்ளி விழா, விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைத்து கொண்டே இருப்பது வாழ்நாள் கடமை.

    * ஆட்சிக்கு வரும் முன்னரே சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி. திருக்குறளாகவே வாழ்ந்தார் கலைஞர் கருணாநிதி.

    * நமது மதம் குறள் மதம் என்றும் நமது நெறி குறள் நெறி என்றும் பெரியார் சொன்னார்.

    *காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் பெயரில் படகுகள் வாங்கப்படும்.

    * குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.

    *மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

    *கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்றார். 



    • நேற்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந்தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.

    இதையடுத்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இன்று 2-வது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாட்டினார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பரிசு வழங்கி வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

    • முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
    • கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை.

    நாகர்கோவில்:

    புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரட்டது. அப்போது ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது காக்கி கவரில் 8 பார்சல் இருந்தது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் செரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.

    அந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பதும், அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
    • வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-வது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாடுகிறார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார். 

    • திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி கடலில் படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு, திருவள்ளுவரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திருவள்ளுவர் சிலை அருகே Statue of wisdom தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.

    பின்னர் அனைவரும், கண்ணாடி இழை பாலத்தின் மீது நடந்து சென்றனர்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
    • சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போ தைய முதல்-அமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.


    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.

    அவர் மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்தினை பார்வையிடுகிறார். அதன் பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்கிறார்.

    தொடர்ந்து திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைத்து ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


    அதன் பிறகு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அவர், திருவள்ளுவர் பாதமலருக்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு மற்றும் வீடியோ படக்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் அக்காட்சி நடைபெற இருக்கிறது.

    தொடர்ந்து மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் நடைபெறும் சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார். திருக்குறளால் அதிகம் நன்மை பயப்பது தனி மனி தருக்கா? சமுதாயத்திற்கா? என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடக்கிறது.

    தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசு கின்றனர். சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.

    மறுநாள் (31-ந்தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா பந்தலுக்கு வருகிறார். விழாவில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைர முத்து உள்ளிட்டோர் பேசு கின்றனர்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்ன ரசு தலைமையில் கருத்த ரங்கம் நடைபெறுகிறது. சமகாலத்தில் வள்ளுவர் என்ற தலைப்பில் பேரா சிரியர் கருணானந்தன் பேசுகிறார். திருக்குறளும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பேசுகிறார்.

    வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் புலவர் செந்தலை நாம் கவுதமன், திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு என்ற தலைப்பில் வக்கீல் அருள்மொழி, வள்ளுவம் காட்டும் அறம் என்ற தலைப்பில் கரு. பழனி யப்பன், திருக்குறளில் இசை நுணுக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்ற னர்.

    மாலையில் அமைச்சர் பெரியசாமி திருக்குறள் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து நினைவு பரிசுகளை வழங்குகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா நன்றி கூறுகிறார்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • முன்விரோதத்தில் தான் மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி ஒழுகினசேரி கன்னிமார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 54), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் வடசேரி எம்.எஸ்.ரோடு பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு லோடுமேன் நாவல்காடு ஷாஜி (28) அங்கு வந்தார். அவர், மோகனிடம் ஏதோ பேச அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனின் வயிறு, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அலறியடித்து ஓடினர். இதற்கிடையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்த மோகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மோகன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கொலை செயலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய ஷாஜி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்ததாக குறிப்பிட்டார்.

    ஆனால் அவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில் பெண் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-

    கொலை செய்யப்பட்ட மோகனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றில் இறந்து விட்டார். மகள், நெல்லையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மகனுடன் வசித்து வந்த மோகனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்தப் பெண்ணிற்கு மோகன், பல்வேறு உதவிகளும் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பர்னிச்சர் கடையின் அருகே உள்ள இரும்புக் கடையில் லோடு மேனாக வேலை செய்த ஷாஜியுடன் அந்தப் பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனை மோகன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் ஷாஜியிடம் தெரிவித்துள்ளார். அவர் மோகனிடம் சென்று பேசியதில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் தான் நேற்று மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தக்கலை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலருடன் இருந்த குமரி மாவட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவலுடன் கூடிய எப்.ஐ.ஆர். வெளியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளன. சென்னை ஐகோர்ட்டும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிமாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய அவர், இயற்கை உபாதை கழிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தக்கலை சேர்ந்த தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அவரது இளைய மகள், கைப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வந்துள்ளார். கடந்த 25-ந் தேதி இவர், உடற்பயிற்சி ஆசிரியை மற்றும் 14 மாணவிகளுடன் கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம் சென்றார்.

    போட்டி முடிந்ததும் அவர்கள் இரவு 9 மணியளவில் குமரி மாவட்டம் திரும்பி உள்ளனர். சக மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்ல தொழிலாளியின் மகள் மட்டும் தனது தந்தை வருகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது இயற்கை உபாதையால் அவதிப்பட்ட அவர், அதற்காக இடம் தேடியுள்ளார்.

    அந்த நேரத்தில் அங்கு அதேபகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது 37) என்பவர் வந்துள்ளார். அவர், மாணவியிடம் நைசாக பேசி உதவி செய்வது போல் நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கழிவறை சென்று வந்ததும், அவரை வீட்டின் அறையில் அடைத்து வைத்து பைசல்கான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

    இந்நிலையில், பைசல்கான் பிடியில் இருந்து தப்பி மாணவி தனது வீட்டிற்கு வந்தார். அவரின் நிலையை பார்த்து பெற்றோர் பதறினர். அப்போது, மாணவி தனக்கு நடந்த பாலியல் கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

    மேலும் பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
    • தோவாளை தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி அருகே பேச்சாங்குளம் பகுதியில் வேம்படிகுளம் உள்ளது. இந்த குளத்தின் இரு கரைகளிலும் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இதில் சுடுகாடு அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் ஒருவர் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த தென்னந்தோப்பிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அவர் தோவாளை தாசில்தாரிடம் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பகுதியில் சுடுகாடு, இடுகாடு மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேச்சாங்குளம் பகுதியில் திரண்டனர்.

    திடீரென நாகர்கோவில்-இறச்சகுளம் சாலையில் பேச்சாங்குளம் பகுதியில் ஊர் தலைவர் கார்த்திக் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், துணை தலைவர் மனோ சிவா, மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. லலித்குமார், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோவாளை தாசில்தார் கோலப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டு அகற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்தும் சீரானது. பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்றினர்.

    • 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
    • தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால் அந்த அலை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    ஆம். 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக கடற்கரை வாழ் மக்களால் மறக்க இயலாது. அன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.

    குமரி மாவட்டத்தில் சுனாமியில் சிக்கி கடலோர கிராமங்களான குளச்சல் , கொட்டில்பாடு, மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    பலர் காணாமல் போனார்கள். குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.


    இதேபோன்று மணக்குடி கிராமத்தில் 119 பேரும், கொட்டில்பாடு பகுதியில் 140-க்கும் மேற்பட்டோரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்ப்பட்டு உள்ளன.

    இந்த நினைவு ஸ்தூபியில் ஆண்டுதோறும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும் அன்றைய தினம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுவாக உள்ள சுனாமி தாக்கி இன்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று காலை சுனாமி நினைவு ஸ்தூபிகளில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரி வேணி சங்கமம் கடற்கரை யில் அமைந்து உள்ள சுனாமி நினைவு சின்ன த்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு. குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் ஆகி யோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி னார்கள்.

    இதில் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணக்குடியில் இன்று காலை 7 மணிக்கு அங்குள்ள புனித அந்தி ரேயா ஆலயத்தில் நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமை யில் நடந்த இந்த திருப்பலி யில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். 119 பேரை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு வந்ததும் அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் இன்று காலை 7 மணி அளவில் சுனாமி காலனியில் இருந்து மவுன ஊர்வலம் பங்குத் தந்தை ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் 199 பேர் அடக்கம் செய்யப் பட்ட கல்லறைதோட்டத்தில் இறந்தவர்களின் நினை வாக மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலை அணிவித்தும். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட ஜவான்களும் கலந்து கொண்டனர்.

    கொட்டில் பாடு புனித அலெக்ஸ் ஆலய பங்குத்தந்தை, ராஜ் பிரார்த்தனை செய்தார். குளச்சலில் இன்று இரவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 

    ×