மதுபோதையில் அரசு பஸ் ஓட்டி வந்த டிரைவர் சிக்கினார்

சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் அரசு பஸ் ஓட்டி வந்த டிரைவர் சிக்கினார்
Published on

நாகர்கோவில்:

விபத்தில்லா மாவட்டம் என்ற இலக்கை அடைய, குடிபோதை மற்றும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி சூப்பிரண்டு லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் ஆரல்வாய்மொழி நாக்கால்மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

வெளியூர்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் துணை டிரைவர்களை மதுபோதையில் செல்கிறார்களா என பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வந்தது. அந்த பஸ்சை போலீசார் சைகை காட்டி நிறுத்தினர். பின்னர் டிரைவர் மதுபோதையில் உள்ளாரா என கண்டுபிடிப்பதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வழியாக குடிபோதையில் டெம்போ ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன டிரைவர்களின் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து போலீசாரால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com