என் மலர்
கன்னியாகுமரி
- கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
- இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த கண்ணாடி பாலத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள கைப்பிடி சுவரில் "திடீர்" என்று சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகும் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
- ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது.
கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் தொடர்பாக தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
- நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது.
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் கூறியிருப்பதாவது:-
முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்திருக்கிறார். இஸ்ரோவிற்கு அடுத்த கட்டமாக முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதை செயல்படுத்துவேன்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளார்கள். அதே போல் நானும் பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள்.
- திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலைமை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறை மூலம் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை அமைத்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்தை கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் இந்த பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு தற்போது படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு விவேகானந்தர் பாறையில் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கரைக்கு திரும்பி வந்து விடுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் அதே பாலம் வழியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து அங்கிருந்து படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்கள்.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
- கண்ணாடி பாலம் வழியாகவும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு நடந்து சென்று பார்வையிட்டு வந்தனர்.
- சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புதகாட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பினர். கண்ணாடி பாலம் வழியாகவும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு நடந்து சென்று பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகிய இருவர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1 லட்சத்து அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அமாவாசையையொட்டி இன்று 5-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தடையை மீறி கடலில் இறங்குபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக்கடல் பகுதி மற்ற கடல் பகுதியை விட அதிகமான அளவில் சீற்றமாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பியபிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் படகு குழாமில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதே போல திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீன் பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
- தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ரஹ்மத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 58). இவரது மகன் மஸ்கட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகனை பார்ப்பதற்காக கடந்த வாரம் சலீம் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டுக்கு சென்றார்.
சலீம் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வைத்திருந்தார். கடந்த 31-ந்தேதி நள்ளிரவு வெளிநாட்டில் இருந்தபடியே தனது செல்போனில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சலீம் ஆய்வு செய்தார்.
அப்போது மர்மநபர்கள் 2 பேர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த சலீம் இது குறித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருடன்... திருடன்... என கூச்சலிடவே அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக பதிவாகி இருந்தது.
அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் இருந்த ஒருவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சேர்மத்துரை என்பது தெரியவந்தது. இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஜெயலில் இருந்து வெளியே வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. மற்றொருவர் பணகுடியை சேர்ந்த முத்து (37) என்பது தெரியவந்தது.
இவர் மீது 5 திருட்டு வழக்குகள் உள்ளது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிலும் வெளியே ஒருவரும் நின்று கொண்டிருந்தது சி.சி.டி.வி.யில் தெரியவந்ததையடுத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் பணகுடியை சேர்ந்த வெட்டும் பெருமாள் (45) என்பதும் தெரியவந்தது. இவர் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.
போலீசார் 3 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாங்கள் ஜெயிலில் இருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த சேர்மதுரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சேர்மதுரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் திட்டி நாகர்கோவிலுக்கு வந்தோம். நாகர்கோவிலில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முடிவு செய்தோம். சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
இதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் திருட முயன்றோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தபடகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 20 லட்சத்து 13 ஆயிரத்து 211 பேர் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளையில் கடந்த 2023-ம் ஆண்டு 19 லட்சத்து 4 ஆயிரத்து 221 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்துள்ளனர். இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 990 பேர் அதிகமாகும்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு மாதம் வாரியாக பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஜனவரி 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 பேர், பிப்ரவரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 802 பேர், மார்ச் 1 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர், ஏப்ரல் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர், மே 1 லட்சத்து 80 ஆயிரத்து 318 பேர், ஜூன் 1 லட்சத்து 49 ஆயிரத்து 472 பேர் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர்.
ஜூலை 1 லட்சத்து 22 ஆயிரத்து 974 பேர், ஆகஸ்ட் 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர், செப்டம்பர் 1 லட்சத்து 51 ஆயிரத்து 803 பேர், அக்டோபர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 489 பேர், நவம்பர் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர், கடந்த டிசம்பர் 1 லட்சத்து 93 ஆயிரத்து 942 பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 1½ வருடங்களாக திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி பாலப்பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
- கன்னியாகுமரியில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
- சுற்றுலா வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பாலசுப்பிரமணியம் (50) என்பவர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை பாலசுப்பிரமணியம் நடைப்பயிற்சி செல்லும் போது சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
அவரும் சாலையின் நடுவே நின்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2024-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2025-ம் ஆண்டு மலர்ந்தது. இந்தப் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. ஆனால் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. இதனால் ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று புத்தாண்டு கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது. மேக மூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்திற்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
- கண்காட்சியை ஒரு வார காலம் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி விழா நடந்த மைதானத்தில் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு மற்றும் திருக்குறள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் திருவள்ளுவர் சிலையின் மர சிற்பத்திலான மாதிரி தோற்றம், திருக்குறள் ஓலைச் சுவடிகள், திருக்குறள் எழுதப்பட்ட பட்டு சேலை, புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு பற்றிய புகைப்படங்கள், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஒரு வார காலம் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.






