என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார்.

    திருமண வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகவும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பலரது வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், பலரது வாழ்க்கையை சோகமானதாகவும் மாற்றுகிறது. திருமண வாழ்வு இனிதாக இல்லாமல் போவதற்கு கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் இல்லாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது.

    அதேபோல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தவறான தொடர்பும் பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. கணவனோ மனைவியோ, தனது இணை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அவர் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால், அதனை உண்மையாக நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    அது அந்த நபருக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தை தரும் பட்சத்தில் அவர் ஒரு கொலையாளியாகவோ அல்லது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் பரிதாபமான நபராகவோ மாறிவிடுகிறார். இதில் இரண்டாவதாக கூறியதைப் போன்று ஒரு நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து தாங்க முடியாத துக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சோகம் குமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின்(வயது47). இவருக்கும், சுனிதா (45) என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.

    பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் சவுதி அரேபியாவில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதா கொன்னக் குழிவிளையில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து வந்தார்.

    மனைவி சுனிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பெஞ்சமின் அவருக்கு பிடித்த எல்லாம் செய்து கொடுத்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தனது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். பெஞ்சமின் வெளிநாட்டுக்கு சென்று விடும் நிலையில், அந்த வீட்டில் சுனிதா மட்டும் குடியிருந்தார்.

    இந்தநிலையில் சமீப காலமாக சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றும் ஏற்பட்டது. அதனை கண்டுபிடித்த பெஞ்சமின், அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதுகுறித்து தகவல் இருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான சுனிதாவை போலீசார் தேடி வந்தனர்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுனிதா எங்கு சென்றார்? என்று பெஞ்சமின் விசாரித்தார். அப்போதுதான் தனது மனைவிக்கும், திருவந்திக்கரை பகுதியைச் சேர்ந்த சைஜு என்பவருக்கும் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.

    மேலும் தான் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் ஆசையாக கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி சென்றுவிட்டதை அறிந்தார். மிகவும் பாசம் வைத்திருந்த தனது மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மிகவும் பாதித்தது.

    இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதே நேரத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெஞ்சமின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது செல்போனில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.



    அந்த வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார். தனது மனைவியின் இந்த செயலை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஆகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதில் பேசினார்.

    மேலும் தனது தற்கொலைக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, தனது மனைவி சுனிதா, அவரது சகோதரி ஷீலா ஆகியோரே காரணம் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆவேசமாக அதில் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்ட சிறிய நேரத்தில் தனது வீட்டில் வைத்து பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெஞ்சமின் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் பரிதாபமாக இருந்தது. அவரது பேச்சில் அவர் தனது மனைவி மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் தெளிவாக தெரிந்தது. அதனை தாங்க முடியாமல் அவர் தளுதளுத்த குரலில் நடுங்கியபடியும், கதறிய படியும் பேசியது அனைவரையும் பரிதாபப்பட செய்து விட்டது.

    அதே நேரத்தில் பெஞ்சமின் தான் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக கேட்டுக்கொண்டார். இதனால் பெஞ்சமின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பெஞ்சமின் தற்கொலை செய்வதற்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். பெஞ்சமின் மனைவி சுனிதா, மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி ஷீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பெஞ்சமின் மனைவி சுனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னதாகவே சைஜூவுடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    திருமணத்திற்கு பிறகும் சைஜுவுடனான தொடர்பை சுனிதா விடவில்லை. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நேரத்தில் கணவர் பெஞ்சமினுக்கு சந்தேகம் எதுவும் வராதபடி நடந்து கொண்டுள்ளார். அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு சைஜுவுடன் சேர்ந்து சுற்றி திரிந்தபடி இருந்திருக்கிறார்.

    தனது மனைவியின் விவகாரம் அரசல்புரசலாக பெஞ்சமினுக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் சுனிதா தனது போக்கை விடவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் சுனிதா நிரந்தரமாக குடும்பம் நடத்த சென்று விட்டார்.

    இதனை அறிந்த பெஞ்சமின் உடனடியாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். தனது 19 ஆண்டுகால உழைப்பில் கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்துடன் மனைவி மாயமானது அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அப்போது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று சுனிதா கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பெஞ்சமினின் மனைவி சுனிதா போலீசாரிடம் சிக்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுனிதாவின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி சீலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெஞ்சமின் எதுவும் கூறாமல் தற்கொலை செய்து இருந்தால் அவரது சாவு சாதாரண தற்கொலை வழக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அதற்கு காரணமான தனது மனைவி உள்ளிட்டோரை பற்றி மிகவும் தெளிவாக பேசி வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.

    இதன் காரணமாகவே பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு முக்கியமான காரணமாக இருந்த அவருடைய மனைவி சுனிதாவும் சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
    • இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளையை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு சொந்த கிராமத்தில் நேற்று மாலையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனையானது நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் தருணம் இது. இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்திய விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
    • யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கரிக்கோடு அருகே உள் ஊருங்காட்டேரி பகுதியை சேர்ந்த சன்னி என்பவரின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானை ஒன்று தவறி விழுந்துவிட்டது.

    அந்த கிணறு 25 அடி ஆழம் என்பதால் யானையால் மேலே வரமுடியவில்லை. இதுகுறித்து மலப்புரம் வனத்ததுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    அதே நேரத்தல் அந்த பகுதி மக்கள் வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் யானையை மீட்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை வனத்துறையினர் சமரசம் செய்து அனுப்பி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர்.

    யானையை மீட்கும் பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர். யானையை கிணற்றுக்கு வெளியே கொண்டு வருதற்காக கிணற்றின் அருகில் மிகப் பெரிய குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக யானை வெளியே கொண்டு வரப்பட்டது.

    சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இருந்து காட்டு யானை மீட்கப்பட்டது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    • கருப்பசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • ரம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). இவர் நாகர்கோவில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்தார். நாகர்கோவிலில் வாடகை வீட்டில் அவரது மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கருப்பசாமி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்தநிலையில் திருப்பதிசாரம் டோல்கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததில் கருப்பசாமி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்த முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தீயணைப்பு வீரர் கருப்பசாமி தற்கொலை தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலை சேர்ந்த தீயணைப்பு வீரர் கருப்பசாமி ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சம் தொலைத்துள்ளார். இதனால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தங்களது குழந்தைகள், கல்லூரியில் படிக்கலாம், வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம், அவர்கள் ரம்மி விளையாடினால் அதை கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரைகளை கூறவேண்டும்.

    கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ரம்மி விளையாட்டினால் பணத்தை மட்டுமின்றி ஆளை இழக்க நேரிடும். எனவே ரம்மி விளையாடிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளியேவர வேண்டும். உங்களுக்கு பணம் கிடைக்காது. ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க நேரிடும். எனவே ரம்மி விளையாடி கொண்டிருப்பவர்கள் உடனடியாக அந்த விளையாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேசை கைது செய்தனர்.
    • 2 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்ய நடவடிக்கை.

    புளியங்குடி:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42). இவர் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பாக தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அவருடன் சேர்ந்து அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில் (44) என்ற போலீஸ்காரரும் சைலேசுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக இளம்பெண், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.தொடர்ந்து அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின்பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்தார்.

    அதன்படி 2 போலீஸ்காரர்கள் மீதும் போக்சோ வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்ததால் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து புகாருக்கு உள்ளான 2 பேரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.

    இதனிடையே தற்போது ஆலங்குளம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சைலேசுக்கும், சிவகிரியில் பணியாற்றி வரும் செந்திலுக்கும் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டனர்.

    அவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேசை கைது செய்தனர்.

    கைதான சைலேசை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள செந்திலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் 'சஸ்பெண்டு' செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இதனிடையே தன் மீது பொய் வழக்கு போட்டு உயர் அதிகாரிகள் தன்னை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாக சைலேஷ் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.
    • இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நாகர்கோவில் அருகே, ஜான் ஸ்டீபன் என்கிற ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நம்பி ராஜன் என்கிற வாலிபர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கலையரசி என்கிற பெண், பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, ஜோதிடர் ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாததால், தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.

    ஆனால் அவர் பணத்தை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கலையரசி, முகநூல் நண்பரான நம்பி ராஜனுடன் சேர்ந்து ஜான் ஸ்டீபனை கொலை செய்திருக்கிறார். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே கீழப்பெருவிளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64), ஜோதிடர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் ஜான் ஸ்டீபனும் விஜயகுமாரியும் இங்கு வசித்து வந்தனர்.

    வீட்டு வேலைகள் செய்து வரும் விஜயகுமாரி சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வெளியே சென்று இருந்தார். மாலை 5 மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தபோது ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜான் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமாரி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை தொடர்பாக இரணியல் அருகே உள்ள கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43), நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (25) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கைது செய்யப்பட்ட கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்ப்பதற்காக ஜான் ஸ்டீபனிடம் வந்து உள்ளார். அப்போது சில பரிகாரங்களை செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று ஜான் ஸ்டீபன் கூறியதுடன் பணமும் வாங்கியுள்ளார்.

    ஆனால் ஜோதிடம் பார்த்த பிறகு கணவன்- மனைவி இடையேயான தகராறு தான் அதிகரித்தது. இதனை ஜான் ஸ்டீபனிடம் தெரிவித்த கலையரசி, தான் கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விரோதத்தில் தான் ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்ட கலையரசி முடிவு செய்தார்.

    கூலிப்படையை ஏவி கொலை செய்ய அவர் திட்டம் திட்டினார். இதற்காக நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பி ராஜனை தொடர்பு கொண்டு பேசினார். அதற்காக அவருக்கு பணமும் கொடுத்து உள்ளார். ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்டுவதற்காக அவரது வீட்டிற்கு நம்பிராஜன் வந்துள்ளார்.

    வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை துண்டால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்து உள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள கலையரசி மற்றும் நம்பி ராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் போலீசார் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.

    • காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
    • காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனும் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் காணும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மழைமேகம் திரண்டு இருந்ததன் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் போன்றவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொடர் விடுமுறையயொட்டி இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர்.
    • விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் ஆழ்கடல் மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதக்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து திரும்புவது வழக்கம்.

    அப்போது கடல் எல்லையை தாண்டி வந்ததாக வெளிநாடுகளால் கைது செய்யப்படுவதும் உண்டு. இதுபோல தற்போது 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷார்ஜின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி 15 மீனவர்கள் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர்.

    தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் டிக்கோகார்சியா தீவு அருகே ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 15 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார்.
    • சிறப்பு விருந்தினராக நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி கடற்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.

    இயக்கத்தின் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார். காணிமடம் தபஸ்வி பொன். காமராஜ், வள்ளலார் பேரவை தலைவர் பத்மனேந்திர சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.



    முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.

    • பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
    • வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.

    நாகர்கோவில்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலா ளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி டாக்டர் நாராயணன் குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே மேல காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    அவர் வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி நாராயணன் இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து சொந்த ஊரான மேலக்காட்டு விளைக்கு வந்தார். இன்று மாலை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் அவரது பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

    மாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    • 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும், அறம் வளர்த்தநாயகியும், விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.

    பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும், அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, சுவாமி பத்மேந்திரா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரோட்ட விழாவில் புதுமண தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு வந்து தேரோட்ட விழாவில் பலரும் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோரும் தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர். சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (13-ந்தேதி) காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும், இரவில் ஆராட்டும் நடக்கிறது.

    ×