என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
    • ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.


    பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

    நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.

    இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.

    சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.

    மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.

    இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    • அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன்.
    • 'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார்.

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ்மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.

    கிருஷ்ணகுமாரி என்பவரை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் தமிழிசை சவுந்தரராஜன், இன்று டாக்டர், அரசியல்வாதி, தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னர் என பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றி வருகிறார்.

    அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    முன்னதாக பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் நாடாளுமன்றத்தில் கால்பதித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினார்.

    'காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கிய இவர், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி அவர் வசமே நின்றது.

    தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது

    இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிக் கனிகளை சுவைத்தார்.

    பின்னர் முழுமையாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1996 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் அவருக்கானதாக அமையவில்லை. இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே அவரை வந்து தழுவியது. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.

    குமரி அனந்தன் 5 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.

    பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.

    அரசியலில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது வாழ்க்கை பயணம், அரசியலில் கால்பதிக்கும் புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது.

    • காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்திய கூட்டணி கட்சிகள் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்.
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினேன்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தான் பங்கேற்ற நிகழ்ச்சகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மூலம் இஸ்லாமிய சமூகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு எதிராக, நேற்று தமிழகம் வந்த நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்திய கூட்டணி கட்சிகள் நேற்று நாகர்கோவிலில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன். 

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிருக்குக்கான பேச்சுப்போட்டி திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினேன். 

    இந்தியாவின் மிக பழமை வாய்ந்த நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி 132 வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருவிழாவில் மின் அலங்காரத்திற்கு ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கியது.
    • அரசு சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 1- ம் தேதி, தேவாலய திருவிழாவில் மின் விளக்குகள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விஜயன் வயது 52, ஜஷ்டஸ் வயது 33, சோபன் வயது 45, மைக்கேல் பின்டோ வயது 42 ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனார்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவரணி மாநில செயலாளர் ஏற்பாட்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    மீனவரணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீனவர் நல்வாரிய உறுப்பினர் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவர் எஸ். கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளர் அனனியாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    • திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
    • குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.

    • குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்தநிலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் நேற்று மாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது.

    கனமழையின் காரணமாக பீச்ரோடு, இருளப்பபுரம், வைத்தியநாதபுரம், வடலிவிளை, புன்னைநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவு அதை சரி செய்து மின் இணைப்பை வழங்கினர்.

    கோழிப்போர்விளை பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 195 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை அணைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, களியல், குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30 அடியாக இருந்தது. அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 125.4, பெருஞ்சாணி 37.6, சிற்றாறு 1-60.2, சிற்றாறு 2-56.6, கொட்டாரம் 2.2, மயிலாடி 1.2, நாகர்கோவில் 44.6, கன்னிமார் 7.6, ஆரல்வாய்மொழி 3.6, பூதப்பாண்டி 5.2, முக்கடல் 18, பாலமோர் 38.2, தக்கலை 49, குளச்சல் 14, இரணியல் 74, அடையாமடை 128.4, குருந்தன்கோடு 23, கோழிப்போர்விளை-195, மாம்பழத்துறையாறு 57, ஆணைக்கிடங்கு 55.6, களியல் 46.4, குழித்துறை 32.4, சுருளோடு 61.4, திற்பரப்பு 5.4, முள்ளங்கினாவிளை 16.6.

    • 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
    • ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்று வருகிது. விழாவில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவரும், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதாவது:-


    தமிழக வெற்றி கழகம் என்றதும் மாணவர்கள் மத்தியிலுள்ள ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்களது வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி விழா என்பதால் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் சொல்லாமல் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தேன். ஆனால் விழாவில் விஜய் என்று கூறியதும் மாணவர்கள் மத்தியில் கடும் எழுச்சி தெரிகிறது.

    தமிழகத்தில் எத்தனையோ கட்சி உள்ளது. 2026 ஆட்சி விஜய்யின் ஆட்சியாக அமையும். மாணவர்களின் எழுச்சி எனக்கு உற்சாகத்தை தருகிறது. இந்த கல்லூரி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லூரி ஆகும். ஆண், பெண் பாகுபாடு இன்றி இந்த கல்லூரி உள்ளது. தரமான கல்வியை இந்த கல்லூரி வழங்கி வருகிறது என்றார்.

    இதை தொடர்ந்து மாண வர்களுடன் அவர் கலந்து ரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆதவ் அர்ஜூனா பேசிய தாவது:-

    நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு டன் படித்தேன். பொலிட்டி க்கல் சைன்ஸ் படித்ததுடன் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாடும் மண்ணும் முன்னேற நல்ல தலைவர்கள் வேண்டும்.

    அரசியல் என்பது சயின்ஸாகும். தலித் மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளார்கள்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி யில் நானும் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டோம். அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பிறகு தான் நான் விஜய் உடன் இணைந்து பயணிக்க விரும்பினேன்.

    அவரிடம் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் என்ன வென்றால் எல்லோரும் சமம் என்று கூறுகிறார். மதத்தால் ஜாதியால் அனைவரும் ஒன்றே என்று விஜய் கூறி வருகிறார். இளைஞர்களை நம்பி மாற்றத்தை உருவாக்கும் கட்சியாக விஜய் கட்சி உருவெடுத்து உள்ளது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அமைதியாக இந்த கட்சி உருவாகி வருகிறது.

    விஜய் என்று கூறியதும் இளைஞர்கள் மத்தியில் அவரது குரல் எதிரொலிக்கிறது. இந்த கல்லூரியில் பார்க்கும் போதும் மாணவர்களின் குரல் ஒலிப்பதை பார்க்க முடிகிறது. நம்முடைய தாய்மொழி தமிழை எல்லோரும் படிக்க வேண்டும்.

    வணிக ரீதியான மொழி, வெற்றியடைய கூடிய மொழி, உலகம் முழுவதும் உள்ள மொழி ஆங்கிலம் ஆகும். இந்தி என்பது தேசிய மொழி கிடையாது.

    ஒரு நாட்டிற்கு சென்றால் ஒவ்வொருவரும் அவரவர் மொழியையே பேசி வருகிறார்கள். அந்த மொழியை எடுத்து வந்து நம்மிடம் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எல்லா மொழிகளையும் வரவேற்போம்.

    ஆனால் நம்மிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது. முதல்வர், அமைச்சர் பதவியை விட கொள்கை ரீதியான பயணத்தை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.

    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊழல் செய்து விட்டு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுப்பது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. மக்களின் சமூக கொள்கையை நோக்கி எனது பயணம் இருக்கும்.

    2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. நிச்சயமாக வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை. 2 மாதம் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாணவர்கள் இறங்கினால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

    கனிமவளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் தனியார் வசம் இருப்பதை தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கப்படும். அதன் மூலமாக வரும் வருவாய் ஏழை-எளிய மக்களுக்கு பயன்படுத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    டாஸ்மாக் மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும். நீங்கள் த.வெ.க உறுப்பினராக வேண்டும். த.வெ.க. தலைவர் , நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது எத்தனை வருடமாக இவர் நம்முடன் பயணம் செய்தவர்? யார் என்பதை அறிந்து தான் அவர்களுக்கு பதவி வழங்கியுள்ளார்.

    விஜய் கட்சியில் சென்னை மாவட்ட தலைவர், ஆட்டோ டிரைவராக உள்ளார். நீங்கள் அனைவரும் த.வெ.க.வில் உறுப்பினராக சேரலாம். பிரதமரிடம் கூட நீங்கள் கேள்வி கேட்கலாம். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
    • சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
    • அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

    இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

    நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.

    தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை கூட்டம் நடத்தப்படுவது தேவையற்றது என பா.ஜ.க. குறை கூறி வருகிறது. இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவரது வீட்டின் முன்பும், மாநில செயலாளர் மீனாதேவ் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள தனது வீட்டின் முன்பும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் மற்றும் பலர் கருப்புக்கொடியுடன் பங்கேற்றனர்.

    மாவட்ட பொருளாளர் முத்துராமன், வெள்ளாடிச்சி விளை வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

    மாநகராட்சி கவுன்சிலர்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ராஜாக்கமங்கலம், அகஸ்தீசுவரம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    • குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
    • விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது

    நாகர்கோவில்:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.

    காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதன்பின் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதையடுத்து தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×