என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவட்டார் அருகே அருவிக்கரை மணக்குன்று சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்தில் உள்ள பெரும்குளத்தில் மண் எடுக்க அதே பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

    ராமையனுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இலவச அனுமதி சீட்டு பெறுவதற்கு ராமையன் ஒப்பந்ததாரரான பிரைட்டை அனுப்பி வைத்தார்.

    அப்போது பிரைட்டிடம் பொதுப்பணி துறை ஊழியர் ரசல்ராஜ் இலவச அனுமதி சீட்டு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரைட் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சால்வன்துரை, இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் பிரைட்டிடம் ரசாயன பவுடர் தடவி பணத்தை கொடுத்து அனுப்பினார்கள். ரசல்ராஜிடம் பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரசல்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரசல்ராஜ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன.
    • உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்துவிடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள்.

    இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவில்லை. இந்த உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17). கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அவன், பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்று இரவு சென்று உள்ளான். அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தின் அருகே நள்ளிரவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சந்துரு (21) வந்தார். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். அவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

    அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் நடந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத்தின் விலா மற்றும் பின்பகுதியில் குத்தி உள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ஆத்திரத்தில் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த சந்துரு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது ஆட்டோவில் விஷ்ணு பரத்தை தூக்கி போட்டுக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷ்ணு பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையில் மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர். அப்போது சந்துரு, தனது ஆட்டோவில் விஷ்ணு பரத் உடலைக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    பள்ளி மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் வந்து பலியான விஷ்ணு பரத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு, நாளை நடைபெறும் திருவிழாவிற்கு நீ வரக்கூடாது என விஷ்ணு பரத்திடம் கூறியதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய சந்துருவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் அவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்ய கூடங்குளம் சென்றனர்.

    பின்பு அவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றினை விஜய் வசந்த் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடைக்காவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    குருந்தன்கோடு அருள்மிகு காரிபள்ளி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டார்.


    S. T. மங்காடு, பால்குளம் சி. எஸ். ஐ புதிய ஆலய அர்ப்பணிப்பு விழா மற்றும் சபை நாள் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.


    கொடுப்பைக்குழியில் நடைபெற்ற குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் உட்பட ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
    • வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    இன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. இதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸூக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கிராம மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் துறைமுகங்களில் 8,000 பைபர் படகுகள், 1,800 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.

    நாகர்கோவில்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    • 2014ல் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.
    • நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு அளித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2014ல் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.

    தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு அளித்துள்ளார்.

    • முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் ரோட்டில் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தில் முதலை ஒன்று உலா வந்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடுமலை அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும் போது அமராவதி அணையில் இருந்து முதலைகள் தண்ணீர் வழியாக வந்து ஆற்றில் ஆங்காங்கே இருந்து வருகிறது.

    இதற்கு முன்பு சீதக்காடு, தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில், வீராச்சிமங்கலம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருந்து வந்தது. அப்போது தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றில் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் முதலை தப்பி சென்றது.

    தற்போது முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் முதலை நடமாட்டத்தால் அலங்கியம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கீழே இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு செல்லும்போது அலங்கியம் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அமராவதி ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இது பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அந்த மண்டபத்தில் மதுபோதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் வடசேரி போலீசாருக்கு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கோட்டார் வைத்தியநாத புரத்தை சேர்ந்த விக்னேஷ், செல்வபிரகாஷ், செல்வசூரியாபிரதீப், தெங்கம்புதூரை சேர்ந்த சந்தோஷ், தாழக்குடியைச் சேர்ந்த அஜித், பறக்கையை சேர்ந்த ஆறுமுக முத்துப்பாண்டி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அஜித், செல்வபிரகாஷ், ஆறுமுக முத்துப்பாண்டி, செல்வ சூரியா பிரதீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • கண்ணாடி பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
    • பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

    அன்றைய தினம் முதல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கண்ணாடி பாலத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில் இன்று தொடங்கியது.

    இந்த பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் இன்று கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பராமரிப்பு பணிகள் நடக்கும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணாடி பாலத்தின் நுழைவு வாயி லில் கயிறுகள் கட்டி தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பராமரிப்பு பணிகள் நடப்பது தொடர் பாகவும், அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் பாலத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    • கண்ணாடி நடை பாலம் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது.
    • கண்ணாடி நடை பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்ணாடி நடை பாலம் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது. இந்த கண்ணாடி நடை பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும். இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் இந்த பாலத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த 5 நாட்களும் சுற்றுலாப் பயணிகள் பாலத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

    ×