என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடை காலம்"

    • தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.
    • சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும்.

    இந்தநிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.

    இதனால் காசிமேட்டில் விற்பனைக்காக பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, தேங்காய் பாறை, சங்கரா, தோல் பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. விசைப் படகுகளில் இருந்து கூடை கூடையாக ஏல முறையில் மீன்களை விற்பனை செய்தனர். இதனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இன்று காசி மேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்ததால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலை குறைவாகவே காணப்பட்டது. சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது. மொத்த வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சில்லறை விலையில் விற்பனை செய்யும் மீனவர்களும் காசிமேட்டில் அதிக அளவில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். சில்லறை விற்பனை கடைகளும் இன்று அதிகமாகவே காணப்பட்டது.

    காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம்-ரூ.800 முதல் 900

    ஷீலா-ரூ.500

    பால் சுறா-ரூ.500

    சங்கரா -ரூ.400

    பாறை -ரூ.400

    இறால்-ரூ.300

    நண்டு -ரூ.300

    நவரை -ரூ.300

    பண்ணா-ரூ.300

    காணங்கத்தை -ரூ.300

    கடுமா-ரூ.300

    நெத்திலி-ரூ.200

    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன.
    • உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்துவிடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள்.

    இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவில்லை. இந்த உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் நேற்று வரை (14-ந்தேதி) 61 நாட்கள் இருந்தது. தடை காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கரை திரும்ப ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், தண்ணீர்கேன் என அனைத்தையும் தங்களது விசைப்படகுகளில் ஏற்றிக்கொண்டு அதிகாலை முதல் புறப்பட்டனர்.

    முன்னதாக காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் கூறும்போது, மீனவர்கள் அனைவரும் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகவும், பெட்ரோல் -டீசல் விலை உயர்வு காரணமாகவும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு எங்களது வாழ்வாதாரம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தொழிலுக்கு செல்வதற்கு முன்னதாக கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டோம். காசிமேட்டில் மொத்தம் 1200 விசைப்படகுகள் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 300 விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று உள்ளன என்றார்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து உள்ளதால் வரும் நாட்களில் மீன்விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
    • அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் 820-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 15-ந்தேதி முதல் சுழற்சி முறையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அதேபோல் நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    தங்கச்சிமடத்தை சேர்ந்த பாதுவைராஜன் என்பவரது விசைப்படகில் சென்றிருந்த பிரகாஷ், எபிரோன், பாண்டி, டல்லஸ், முனியசாமி, எமரிட் ஆகிய 6 மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்துள்ளது.

    அப்போது அவர்களது படகு கடல் அலையில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. படகில் இருந்த பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதனை அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக அங்கு வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டனர். விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்ததை சக மீனவர்கள் உடனடியாக பார்த்ததால், அந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை சக மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

    கடல் சீற்றத்தில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது குறித்து ராமேசுவரம் மீன்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

    அவர்கள் தங்களது புகாரில், தாங்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களும் விசைப்படகுடன் கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறி உள்ளனர்.

    ×