search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி வியாபாரி வீட்டில் கொள்ளை
    X

    ஆரல்வாய்மொழி வியாபாரி வீட்டில் கொள்ளை

    • வங்கியில் பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசையா?
    • போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய் மொழி மாதவலாயம் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருபவர் ரஹ்மத்துல்லா (வயது 68). இவரது வீடு சோழபுரம் கைகாட்டி மெயின் ரோட்டில் உள்ளது.

    ரஹ்மத்துல்லா தனது மனைவி சீனத் பீவியுடன் மகள் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்த மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பதும் பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது, ரூ. 3 லட்சம், 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக ரஹ்மத்துல்லா தெரிவித்தார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். இதனால் அதனை நோட்டமிட்ட யாரோ சிலர் தான் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களான பெருமாள்புரம், வடக்கு பெருமாள்புரம், தோவாளை, மாதவலாயம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வரு வது அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர் சம்பவங்களை தடுக்க அந்தப் பகுதி இளைஞர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டம்கூட்டமாக தெருக்களைச் சுற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் பைக் திருடிய வாலிபர்களை பிடித்து போலீசிடம் தகவல் கூறிய போது, நாங்கள் என்ன செய்ய முடியும் நீங்களே அழைத்து வாருங்கள். கொள்ளையர்களுக்கு காயம் ஏற்பட்டால் உங்கள் மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதாகவும் இதனால் திருடர்களை பிடிப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் சைக்கிள் திருடிய வாலிபர்களை பிடித்து நேரடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த போதும்கூட எந்த நடவடிக்கையும் இல்லை. என பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளார்கள்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் எல்லா போலீஸ் நிலையங்க ளிலும் தனிப்படை அமைத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×