search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • கும்பப்பூ பருவ நெற்பயிருக்கான இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.34,351 ஆகும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்கிறது.

    2022-ம் ஆண்டில் குமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவத்தில் நெற்பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    நடப்பு பருவத்தில் குமரி மாவட்டத்தில் 11 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டு பயிர் காப்பீட்டு நிறுவனமாக அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.

    கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டுத்தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.515 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

    விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன் மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். கும்பப்பூ பருவ நெற்பயிருக்கான இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.34,351 ஆகும்.

    குமரி மாவட்டத்தில் 2016 ஆண்டு முதல் 2021 ராபி பருவம் (கும்பப்பூ) வரை 13,635 விவசாயிகள் பதிவு செய்து 11,032 விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகையாக ரூ.703.59 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு அறிவிக்கைப்படி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டுவிட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது என்பதால் விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகையினை உடனடியாக செலுத்தி தங்களது நெல் பயிரை முன்கூட்டியே காப்பீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×