search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு

    • இருச்சக்கர வாகனங்களாலேயே அதிக விபத்துக்கள் நடக்கிறது
    • மாணவர்கள் போட்டிப்போட்டு ஓட்டக்கூடாது

    நாகர்கோவில், மே.10-

    நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    சாலை விபத்துகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டு வந்துள்ளனர். இதுபோன்ற இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

    தங்களது பகுதியிலுள்ள பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக சாலை பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களாகிய நீங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் எடுத்திருக்க வேண்டும்.

    இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். கல்லூரி மாணவர்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு இரு சக்கர வாகனங்களே காரணம். அதிக அளவு வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

    குறிப்பாக நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால் விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை, வட்டார போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் முன்வர வேண்டும்.

    இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். விபத்துகளை தவிர்க்க பேருந்துபடிகட்டுகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் போட்டிப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை கல்லூரி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் பொறியியல் கல்லூரி வளாக த்தில் கலெக்டர் ஸ்ரீதர் மரக்கன்றுளை நட்டார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமரலிங்கம், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பாஸ்கரன், கோணம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் நாகராஜன், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) சசிகலா, ஓய்வுபெற்ற இணை இயக்குநர் (சாலை போக்குவரத்து நிறுவனம்) ஜோஸ் பேட்ரிஸ், உசூர் மேலாளர் சுப்பிரமணியம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×