search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒற்றுமை-விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அ.தி.மு.க.வினருக்கு தேவை - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    ஒற்றுமை-விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அ.தி.மு.க.வினருக்கு தேவை - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    • 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது
    • ரூ.1000 கொடுக்காததால் பெண்கள் ஆத்திரத்தில் உள்ளனர்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நாகர்கோவில் மாநகர உறுப்பினர் சேர்க்கை முகாம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது.

    கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அக் ஷயா கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் நகர செயலாளர் சந்துரு, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன், அவை தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    12 மணி நேர வேலையை அ.தி.மு.க. கொணடு வந்தபோது எடப்பாடி பழனிசாமி, தொழி லாளர்களை சுரண்டுவதாக அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது அந்த மசோதாவை தி.மு.க. கொண்டு வந்தது. இதை பார்த்த மக்கள் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம் என்று நினைக்க தொடங்கினர். இதனால் உடனே அந்த மசோதாவை வாபஸ் பெற்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை போல நடிப்பதற்கு வேறு எந்த முதல்-அமைச்சராலும் முடியாது. சென்னையில் மதுபானம் வாங்க எந்திரம் வந்துள்ளது. பணத்தை செலுத்தினால் போதும் அதுவே மதுபானத்தை கொடுத்துவிடும். இது தான் தி.மு.க. அரசின் சாதனை ஆகும்.

    எடப்பாடி பழனிசாமி சிரமப்பட்டு சட்ட சிக்கல்களை தாண்டி பொது செயலாளர் பதவியை ஏற்று இருக்கிறார். அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்தினால் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். இது தான் தொழிலாளர்களின் ஒற்றுமை. நாம் அனைவரும் தொழிலாளிகள். நாம் வேலை செய்தால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்க முடியும்.

    அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொழிலாளியும் உழைத்தால் தான் நாடு முன்னேறும். நமக்குள் ஒற்றுமை தேவை. விட்டு கொடுக்கும் மனப்பான்மை தேவை. இந்த ஆட்சியை மக்கள் திட்டி வருகிறார்கள். நாளை தேர்தல் நடந்தால் கூட ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    தற்போதைய சூழ்நிலை யில் நாட்டை ஆளும் தகுதி பிரதமர் நரேந்திரமோடிக்கு மட்டும் தான் உள்ளது. எங்கள் ஆட்சியில் எங்காவது ஊழல் நடந்துள்ளதா? என்று நரேந்திரமோடி கேட்கிறார். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. பிரதமர் மோடி திறமை படைத்தவர். மீண்டும் இந்த நாட்டை ஆளப்போவது பா.ஜனதா தான். காங்கிரஸ் பல துண்டுகளாக உடைந்து கிடக்கிறது. நான் பேசுவதை வைத்து நான் பா.ஜனதா பக்கம் போய்விட்டதாக கூற கூடாது.

    தி.மு.க. அரசுக்கு 2 ஆண்டுகளில் கெட்ட பெயர் தான் ஏற்பட்டுள்ளது. ரூ.1000 கொடுக்காததால் பெண்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாணவரணி செயலாளர் மனோகரன், அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அனிலா சுகுமாறன் மற்றும் வில்லியம்கஹரின், மணிகண்டன், கர்ணன், சுந்தர் ராஜன், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×