என் மலர்
காஞ்சிபுரம்
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 38). கூலித் தொழிலாளி. நேற்று காலை அவர் கேளம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அருளை அடித்து கொன்றது அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான ஹரிஷ்குமார், ரேவந்த் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் அருளை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று 11-வது நாளாக அத்திவரதர் காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் திரைப்படம் வெற்றி பெறவேண்டி படப்படிப்பிற்கான ‘கிளாப் போர்ட்டை’ அத்திவரதரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணி அளவில் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகிறார். அவரது வருகையையொட்டி, காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று அத்திவரதரை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. மாநிலத்தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் மயில்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு எழில்நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கே பிளாக்கில் 6வது மாடியில் வசித்து வரும் பிரகாஷ் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து பீரோவில் இருந்த 5.5 சவரன் தங்க நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும், ஒரு உண்டியலை உடைத்தும் கொள்ளையடித்துள்ளனர்.
பிளாக்கில் 1-வது மாடியில் வசித்து வந்த ராஜா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த 5 பட்டு புடவைகளை திருடி சென்றுள்ளனர்.
இதேபோல் முதல் தளத்தில் வசிக்கும் கிரிஸ்டீனா என்பவர் வீட்டின் ஜன்னலை திறந்து ஜன்னல் வழியாக ஒரு செல்போனை திருடி இருக்கிறார்கள்.
முதல் தளத்தில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் எதுவும் கிடைக்காததால் பீரோவை சேதப்படுத்தி, கண்ணாடியையும் உடைத்து சென்றுள்ளனர்.
2-வது தளத்தில் வசிக்கும் மதுரை என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளனர்.
எப்.பிளாக்கில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வரவும் இல்லை, அதேபோல் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் யாரும் வந்து தடயங்களை பதிவு செய்யவில்லை என இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தாங்கள் வசிக்கும் பகுதி குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்டது என்பதால் குற்றப்பிரிவு போலீசார் எங்களை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.
இதுவே வசதி படைத்தவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தால் காவல்துறை உயர் அதிகாரிகள், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் என முக்கியத்துவம் கொடுத்து புலன் விசாரணை மேற்கொண்டிருப்பார்கள்.
இனியாவது குற்றவாளிகளை கண்டு பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருபானந்தன்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவராக உள்ள அ.தி.மு.க. பிரமுகர் முரளிதரனுக்கு ரூ.5½ லட்சம் கடன் கொடுத்து இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருபானந்தன் பணத்தை திருப்பி கேட்ட போது அவரை முரளிதரன் தாக்கியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த கிருபானந்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க. பிரமுகர் முரளிதரனுக்கு எதிராகவும், அவரை பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முரளிதரன் மீது சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது கொலை மிரட்டல், சாதி பெயரை கூறி திட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடையும் ஜனாதிபதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். அன்று மாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்கிறார்.
மாலை 5 மணியளவில் சென்னை திரும்பும் அவர் அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை அருகே உள்ள கரசங்கால் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மதன்.இவரது மகன் புஷ்பராஜ் (19).
நேற்று முன்தினம் இரவு அவர் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மர்ம கும்பல புஷ்பராஜை தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியியை சேர்ந்த செந்தில், நைனி ஆகிய 2 பேரை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கொலையுண்ட புஷ்பராஜின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.
உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது போதையில் வந்த மர்ம வாலிபர் ஒருவர் அரிவாளுடன் சாவு ஊர் வலத்துக்குள் புகுந்தார். திடீரென அவர் அரிவாளால் அருகில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினார்.
சாவு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினர். அரிவாள் வெட்டில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவப்பிரகாசம்(40) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மணிமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ், படப்பையை சேர்ந்த ஏழுமலை, இறந்து போன புஷ்பராஜின் தந்தை மதன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அரிவாளால் வெட்டிய மர்ம வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த 3 பேருக்கும் படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலைவெறியில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடந்த கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடகாவின் முதல்-அமைச்சர் குமாரசாமி பலமாக அரசியல் செய்யும் பொழுது ரங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து ஆண்டவன் தண்ணீர் கொடுத்தால் தமிழகத்திற்கு கொடுக்கிறேன் என்று சொன்னவர்.
ஆனால் தற்போது தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது ஆரோக்கியமான சூழ்நிலை தான். இதில் எந்தவித அரசியலும் உட்புக கூடாது. ஒருவேளை குமாரசாமி தனது பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை.
தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் வழிமுறை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

தினகரன் ஆதரவு நாளேட்டில் எங்கள் கட்சியை பற்றி சொல்வதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. முதலில் தினகரன் கட்சி முழுமையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சதாசிவ் (வயது76). உடல்நலம் சரியில்லாத இவர் கடந்த 4-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்த அவர் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது. விமானநிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போரூர்:
வளசரவாக்கம் ஆற்காடு சாலை மின்சார சுடுகாடு அருகே கடந்த 4-ந்தேதி இரவு “திருடன் திருடன்” என்று குரல் ஒலித்தது.
அப்போது ஓடிய வாலிபர் ஒருவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் காதில் ரத்தம் வழிந்து படுகாயங்களுடன் மயங்கினார்.
மதுரவாயல் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் அருண் (வயது20) என்பது தெரிந்தது. அவர் போரூர் அருகே நண்பர் ஒருவருடன் தங்கி இருந்து பருப்பு வியாபாரம் செய்து உள்ளார்.
இதற்கிடையே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அருணை அவரது சகோதரர் அஜித் மற்றும் தாய் லைலா ஆகியோர் வேலூர் அழைத்து சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 6-ந் தேதி வீடு திரும்பிய அருண் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த நிலையில் அருணின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் அஜித் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவம் நடந்த 4-ந் தேதி அருண் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு கடையில் மது குடித்து உள்ளார். அவருடன் வந்த நபர் யார்? இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திருடன் திருடன் என்று கூச்சலிட்டாரா, என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
கிழக்கு தாம்பரம், அனந்தபுரம் ஆறுமுகனார் தெருவில் வசித்து வருபவர் உதயகுமார். டெய்லர். இவரது மகன் மணிகண்டன் (வயது 24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்.
மணி கண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது குடித்து வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனை தந்தை உதயகுமார் கண்டித்தும் கேட்கவில்லை. இதுதொடர்பாக தந்தை- மகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவும் மணிகண்டன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை கண்டித்த தந்தையுடன் மோதலில் ஈடுபட்டார். பின்னர் மணிகண்டன் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டார்.
தினந்தோறும் மகன் மதுகுடித்து வந்து ரகளையில் ஈடுபடுவது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மகனை கொலை செய்ய முடிவு செய்தார்.
நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்த உதயகுமார் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி மகன் மணிகண்டனின் தலையில் போட்டார்.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மணி கணிடனின் தாய் மற்றும் தம்பி அருண் ஆகியோர் எழுந்தனர். அவர்கள் மணிகண்டன் கொலையுண்டு கிடப்பதை கண்டு கூச்சலிட்டனர்.
இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். கொலையுண்ட மணிகண்டன் மீது சேலையூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






