search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்   இடி, மின்னலுடன் கனமழை
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை

    • கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
    • பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தருமபுரி,

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று காலை முதலிலேயே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் தருமபுரி நகர் பகுதி, அன்னசாகரம், நெசவாளர் காலனி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, பென்னாகரம், செட்டிகரை, சோளைக்கொட்டாய், ஒடசல்பட்டி, கடத்தூர், மொரப்பூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் பேருந்துகளுக்கு செல்லும் மக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் கடும் வெப்பம் வீசி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    நேற்று தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி 1.70 சென்டிமீட்டர் மழையும், பாலக்கோடு 8.62 சென்டிமீட்டர் மழையும், மாரண்டஅள்ளி 4.60 சென்டிமீட்டர் மழையும், பென்னாகரம் 0.70 சென்டிமீட்டர் மழையும், அரூர் 5.20 சென்டிமீட்டர் மழையும், பாப்பிரெட்டிபட்டி 4.90 சென்டிமீட்டர்மழையும், மாவட்டத்தில் மொத்தம் 26.72 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த தொடர் மழையால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, மத்தூர், ஓசூர், சூளகிரி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டியது.

    Next Story
    ×