search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவு
    X

    ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவு

    • துப்பாக்கிச்சூடு குறித்தும் விசாரிக்க மனித உரிமை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கோவை:

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியா பாண்டி. கோவையில் தங்கியிருந்து ரவுடிசத்தில் ஈடுபட்ட இவரை கடந்த மாதம் 12-ந் தேதி 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.

    இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து இருந்தனர். முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். சஞ்சய் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சத்தியாபாண்டியை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக சஞ்சய் ராஜா தெரிவித்தார். இதனால் கடந்த 7-ந் தேதி காலை அவரை கரட்டுமேடு பகுதிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சஞ்சய்ராஜா போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றார். போலீசார் தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கியால் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் சஞ்சய்ராஜாவின் காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட சஞ்சய் ராஜா துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை தமிழக மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. சஞ்சய் ராஜா எதனால் சுடப்பட்டார் என்பது உரிய விசாரணை நடத்தி ஐ.ஜி. அந்தஸ்த்தில் உள்ள போலீஸ் அதிகாரி 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை, மதுரை, திருச்சி, தூத்தூக்குடி, திருவாரூர் போன்ற இடங்களில் ரவுடிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்தும் விசாரிக்க மனித உரிமை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல கோவையில் நடத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை கோர்ட்டு அருகே கடந்த மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடி கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து வந்தனர்.

    கைதானவர்களில் கவுதம், ஜோஸ்வா ஆகியோர் நடுவழியில் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 2 பேர் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×