search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் இரவு 9 மணி வரை அரசு பஸ்கள் இயக்கம்- அதிகாரிகள் தகவல்
    X

    ஒகேனக்கல்லில் இரவு 9 மணி வரை அரசு பஸ்கள் இயக்கம்- அதிகாரிகள் தகவல்

    • முதலைப் பண்ணையை கண்டு ரசித்து விட்டு, மாலையில் ஊர் திரும்பி செல்கின்றனர்.
    • மாலை 6 மணிக்குமேல் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இருந்து 6 பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தமிழகத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலம் புகழ் பெற்றது. ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சென்னை, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது கோடை விடுமுறை தொடங்கியதால், ஒகே னக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலையிலேயே ஒகேனக்கல்லுக்கு வந்து அங்குள்ள தொங்கு பாலம் மீது இருந்து கண்டு களித்தும், பரிசல் சவாரி செய்தும், ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும் மகிழ்கின்றனர்.

    பின்னர், பிரசித்தி பெற்ற மீன் சமையலை ருசித்து விட்டு, இங்கு முதலைப் பண்ணையை கண்டு ரசித்து விட்டு, மாலையில் ஊர் திரும்பி செல்கின்றனர்.

    இதனிடையே, மாலை மற்றும் இரவு நேரங்களில் தருமபுரி, பென்னாகரம் பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் மாலை 6 மணிக்கு மேல் இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மாலை 7 மணி வரை ஒகேனக்கல்லை சுற்றி பார்த்து ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள், மிகவும் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தது.

    இது குறித்து தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜீவரத்தினம், அதிகாரி ஜெய பால் ஆகியோர் கூறுகையில், தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம், ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு மேல் மாலை 6.25, இரவு 8.15, 8.30 மற்றும் 9 மணிக்கு தருமபுரிக்கும், மாலை 7 மற்றும் இரவு 8.15 மணிக்கு பென்னாகரத்திற்கும் ஆக மொத்தம் மாலை 6 மணிக்குமேல் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இருந்து 6 பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த பஸ் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.

    Next Story
    ×