என் மலர்tooltip icon

    ஈரோடு

    • யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது.
    • யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிர் செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சதீஷ் தோட்டத்துக்குள் புகுந்து தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்ற விவசாயிகளை ஒன்று திரட்டி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.

    அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.

    சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
    • பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

    பவானி:

    தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.

    2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


    பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    • காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
    • காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களை வழிமறித்து சாப்பிட உணவு உள்ளதா என்று தேடி பார்த்து வருகிறது. இந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் சாப்பிட்டு வருகிறது.

    யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து உணவு உள்ளதா என்று தேடி பார்த்தது.

    இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டினர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது தாளவாடி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளை செல்போனில் படம் எடுக்கின்றனர். இது பெரும் ஆபத்தில் முடியும். வாகன ஓட்டிகள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம். மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • மூலப்பட்டறை அருகே மாரியம்மன் என்ற கோவில் உள்ளது.
    • அம்மனின் கண்கள் மூடி திறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ரோட்டில் எல்லை மாரியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.

    சாலையோரம் கோவில் அமைந்துள்ளதால் எல்லை தெய்வமாக நினைத்து மக்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பெண்கள் மற்றும் சிறுமிகள் அந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அந்த அம்மனின் கண்கள் மூடி திறந்தது.

    இதைக்கண்டு அந்த சிறுமி பக்தியில் உறைந்தார். இதை பற்றி அந்த சிறுமி அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.

     இதையடுத்து அவர்கள் அம்மா, தாயே, மாரியம்மா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இது பற்றி தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் சிறுமிகள் என கூட்டம், கூட்டமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிய தொடங்கினர்.

    நேரம், செல்ல, செல்ல மக்களின் கூட்டம் கோவி லில் அதிகளவில் குவிந்த னர். நள்ளிரவு 12 மணி வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து பக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்
    • சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெள்ளி திருப்பூரை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான மாத்தூர், வட்டக்காடு, செல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வட்டக்காடு பகுதியில் மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தினர்.

    இதில் அவர் கையில் வைத்திருந்த உரசாக்கில் மொசுகோந்தி வகை குரங்கின் தோல் உரித்த நிலையில் இரண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

    மேலும் விசாரணையில் அவர் சங்கராபாளையம் அருகே உள்ள காக்காயனூரை சேர்ந்த மாதன் என்கிற துரையன் (45) என்பதும், சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    மேலும் சாணிமடுவு வனப்பகுதியில் மொசுக்கோந்தியை சுட்டதாகவும் அதற்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்களை அங்குள்ள ஒரு மறைவான பகுதியில் வைத்துள்ளதாகவும், அதனை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கியதாகவும் மாதன் தெரிவித்தார்.

    இதை அடுத்து மாதனை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    • பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
    • திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி (24). பி.இ. பட்டதாரி.

    அந்தியூர் அடுத்த சமத்துவபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன், சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன் (30). டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், சிவரஞ்சனி- பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியை சுற்றி தலமலை, திம்பம், ஆசனூர் உள்பட பல்வேறு வன கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் திம்பம், தாளவாடி மற்றும் பண்ணாரி வனப்பகுதி எப்போதும் பசுமையாகவே இருந்து வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு ஜில்லென குளிர்ந்த காற்று வீசி கொண்டே இருக்கும். மேலும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கும்.

    இந்த வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சத்தி மற்றும் சுற்று வட்டார மலை கிராம பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் அடித்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனி பொழிவு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. அதே போல் இரவு நேரங்களில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனி பொழிவு இருந்தது.

    இதனால் இந்த பகுதி முழுவதும் பனி துளிகள் படர்ந்து பசுமையாக காட்சி அளித்தது. மேலும் இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் மலை கிராம பொதுமக்கள் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்த படியே சென்று வருகிறார்கள்.

    மேலும் பனி பொழிவு காரணமாக இன்று காலை வரை வனப்பகுதி சாலைகள் இருட்டாகவே காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இன்று அதிகாலை மற்றும் காலை நேரத்திலும் முகப்பு விள க்குகளை எரியவிட்டப்ப டியே சென்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.
    • தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை.

    ஈரோடு:

    வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.

    இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம், ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம், வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.

    ஜி.எஸ்.டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜி.எஸ்.டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

    ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது.

    சோலார் பயன்படுத்து பவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

    இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில் சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம்.

    தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை. விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேயர் நாகரத்தினம் தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்தார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×