என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    ஈரோடு:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.

    இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.

    தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

    பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.



    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தமும், காளை மாடு சிலை அருகில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி, எம்.எல்.எப், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில் மறியலுக்காக திரண்டு நின்றனர்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்லிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தொ.மு.ச. கவுன்சில் பேரவை மாவட்ட செயலாளர் கோபால், தலைவர் தங்கமுத்து, ஏ.ஐ.டி.யுசி. சின்னுசாமி, எச்.எம்.எஸ். சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டி.எஸ்.பி. சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்து சென்றனர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், 50 பெண்கள் என 250-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
    • 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம்.

    ஏற்கனவே போடப்பட்டு உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டது. 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29-ந் தேதி இறுதி நாள். மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகை கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம். அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாதம் கணக்கில் அறிவுறுத்தப்பட்டு அதிகமாக கால அவகாசம் வழங்கிய பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.



    ஆனால் எடப்பாடி பழனிசாமி 14 மட்டும் தான் நடக்கவில்லை என்று பட்டியலிட்டு உள்ளார். அப்படி என்றால் மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று தானே அர்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
    • உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

    குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

    சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது. இதனை அடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட அக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஈரோடு ஆர்.கே.வி ரோடு, கிருஷ்ணா தியேட்டரில் இருந்து மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, கச்சேரி ரோடு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

    அப்போது ஆர்.கே.வி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.

    அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.

    • ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
    • கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.

    சென்னிமலை:

    ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.

    மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

    இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார். 

    • நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார்.
    • கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட செல்லும் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் இருந்தால் உடனடியாக அங்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெருந்துறை பெரியவீரசங்கிலி ஊராட்சிக்கு சென்றார். கைக்கோளபாளையத்தில் உள்ள பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகளை பார்த்ததும் உற்சாகம் அடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழக்கம்போல அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மேலும் 10-ம் வகுப்பு அறைக்கு கலெக்டர் சென்றபோது, மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டு இருந்தனர். அங்கு ஒரு புத்தகத்தை வாங்கிய அவர், அவர்கள் படித்துக்கொண்டு இருந்த அறிவியல் பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்டார். மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பதில் அளித்தனர்.

    அப்போது நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார். மேலும் சிறிது நேரம் பாடம் நடத்தினார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பாட்டில் எடுத்து அதை மேஜையில் உருட்டி செய்முறை விளக்கமும் அளித்தார். கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    • கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
    • ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, மேற்கு அம்பேத்கர் வீதியில் 75 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பன்னீர்செல்வம் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனி அமுதன், வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு எஸ்.பி. ஜவகரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடகா, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு தற்போது 400 ரூபாய் அதிகரித்து உள்ளது.

    இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் தாக்கம் ஏழை மக்கள் மட்டும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆண்டில் சராசரியாக தக்காளி, வெங்காயத்தின் விலை ஏற்றம் சந்தித்து வரும் நிலையில் தற்போது பூண்டு, இஞ்சி போன்ற சிறு பொருட்கள் விலை ஏற்றமும் மக்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அத்தியாவசிய சமையல் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும் போது,

    தற்போது பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பூண்டின் விலை படிப்படியாக குறைந்து ரூ.150-க்குள் வந்துவிடும் என்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    கோபி:

    தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஆகிய தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் நிறுவனங்கள் நாள்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்து ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு யூனிட் கிரஷர் மண் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    6 அங்குல அளவுள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே இழப்புகளை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு விலையை உயர்த்தினால் 3 மாவட்டங்களிலும் கட்டுமான தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்பதோடு கட்டிடத்தின் மதிப்பீட்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் செலவு அதிகரிக்கும். இதனால் கட்டிட உரிமையாளர்கள் முதல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக உள்ள கிரஷர் மண், ஜல்லி, சிமெண்டு போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.

    மேலும் இவர்கள் கோபியில் லாரிகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹலோ பிளாக்கல் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முடங்கிப் போய் உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
    • இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    ஈரோடு:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இது கிறிஸ்தவர்களின் துக்க காலமாக உள்ளது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

    இந்த துக்க காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தவக்காலம் இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாம்பல் இன்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    தொடர்ந்து புனித வெள்ளி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதனை முன்னிட்டு இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்கு தந்தையுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ நினைவு தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கி வழிபாட்டை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், கொமரபாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.43 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 267 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.68 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.49 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.

    மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
    • பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இரவு முதல் காலை 6 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர், தாளவாடி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

    அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போன்று தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனியன் தாக்கம் தொடங்கி விடுகிறது. இந்த மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

    ×