என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
    • காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களை வழிமறித்து சாப்பிட உணவு உள்ளதா என்று தேடி பார்த்து வருகிறது. இந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் சாப்பிட்டு வருகிறது.

    யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து உணவு உள்ளதா என்று தேடி பார்த்தது.

    இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டினர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது தாளவாடி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளை செல்போனில் படம் எடுக்கின்றனர். இது பெரும் ஆபத்தில் முடியும். வாகன ஓட்டிகள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம். மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • மூலப்பட்டறை அருகே மாரியம்மன் என்ற கோவில் உள்ளது.
    • அம்மனின் கண்கள் மூடி திறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ரோட்டில் எல்லை மாரியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.

    சாலையோரம் கோவில் அமைந்துள்ளதால் எல்லை தெய்வமாக நினைத்து மக்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பெண்கள் மற்றும் சிறுமிகள் அந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அந்த அம்மனின் கண்கள் மூடி திறந்தது.

    இதைக்கண்டு அந்த சிறுமி பக்தியில் உறைந்தார். இதை பற்றி அந்த சிறுமி அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.

     இதையடுத்து அவர்கள் அம்மா, தாயே, மாரியம்மா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இது பற்றி தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் சிறுமிகள் என கூட்டம், கூட்டமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிய தொடங்கினர்.

    நேரம், செல்ல, செல்ல மக்களின் கூட்டம் கோவி லில் அதிகளவில் குவிந்த னர். நள்ளிரவு 12 மணி வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து பக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்
    • சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெள்ளி திருப்பூரை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான மாத்தூர், வட்டக்காடு, செல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வட்டக்காடு பகுதியில் மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தினர்.

    இதில் அவர் கையில் வைத்திருந்த உரசாக்கில் மொசுகோந்தி வகை குரங்கின் தோல் உரித்த நிலையில் இரண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

    மேலும் விசாரணையில் அவர் சங்கராபாளையம் அருகே உள்ள காக்காயனூரை சேர்ந்த மாதன் என்கிற துரையன் (45) என்பதும், சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    மேலும் சாணிமடுவு வனப்பகுதியில் மொசுக்கோந்தியை சுட்டதாகவும் அதற்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்களை அங்குள்ள ஒரு மறைவான பகுதியில் வைத்துள்ளதாகவும், அதனை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கியதாகவும் மாதன் தெரிவித்தார்.

    இதை அடுத்து மாதனை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    • பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
    • திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி (24). பி.இ. பட்டதாரி.

    அந்தியூர் அடுத்த சமத்துவபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன், சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன் (30). டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், சிவரஞ்சனி- பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியை சுற்றி தலமலை, திம்பம், ஆசனூர் உள்பட பல்வேறு வன கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் திம்பம், தாளவாடி மற்றும் பண்ணாரி வனப்பகுதி எப்போதும் பசுமையாகவே இருந்து வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு ஜில்லென குளிர்ந்த காற்று வீசி கொண்டே இருக்கும். மேலும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கும்.

    இந்த வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சத்தி மற்றும் சுற்று வட்டார மலை கிராம பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் அடித்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனி பொழிவு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. அதே போல் இரவு நேரங்களில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனி பொழிவு இருந்தது.

    இதனால் இந்த பகுதி முழுவதும் பனி துளிகள் படர்ந்து பசுமையாக காட்சி அளித்தது. மேலும் இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் மலை கிராம பொதுமக்கள் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்த படியே சென்று வருகிறார்கள்.

    மேலும் பனி பொழிவு காரணமாக இன்று காலை வரை வனப்பகுதி சாலைகள் இருட்டாகவே காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இன்று அதிகாலை மற்றும் காலை நேரத்திலும் முகப்பு விள க்குகளை எரியவிட்டப்ப டியே சென்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.
    • தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை.

    ஈரோடு:

    வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.

    இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம், ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம், வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.

    ஜி.எஸ்.டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜி.எஸ்.டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

    ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது.

    சோலார் பயன்படுத்து பவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

    இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில் சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம்.

    தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை. விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேயர் நாகரத்தினம் தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்தார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையைச் சேர்ந்த கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரான நிலையில் இருவரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

    அதற்கு அவர்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து கிளை மேலாளார் அவர்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து கிளை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இருவரிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது அதிகாலை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் எங்கள் மீது அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கே வழிவகுக்கும்.

    இது நாங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் ஏறும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இத்தகைய போக்கை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது.
    • மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது. யானைகள் சில சமயம் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகிறது. இந்நிலையில் ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து சாலையில் நடுவில் நின்றது.

    இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. யானை கூட்டத்தை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம்-கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது.

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக கரும்புக்கட்டுகள், காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலை நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    இதையடுத்து வாகனங்களை வழிமறைத்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள், உணவு ஏதாவது உள்ளதா? என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி அலைந்தது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் இருந்த பயணிகள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
    • மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர்களில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தினமும் சுமார் 4 டன் முதல் 5 டன் மல்லிகை உள்பட பல பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் பூ மார்க்கெ ட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் விஷேசம், திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்படும். அதே போல் வெளி மாநில திருவிழா காலங்களிலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகளவில் நடக்கும்.

    இதனால் விஷேசம் மற்றும் முகூர்த்த நாட்களில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகும். இதே போல் சாதாரண நாட்களில் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.500-க்கும் ஏலம் விற்பனையாகும்.

    இந்த நிலையில் தற்போது தை மாதம் பிறந்ததால் முகூர்த்த நாட்கள் தொட ர்ந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கோவில் விழாக்களும் நடந்து வருகிறது. இதனால் மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மல்லிகை உள்பட பூக்களின் அறுவடை குறைந்து வருகிறது. இதனால் தற்போது குறைந்த அளவே மல்லிப்பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் மல்லிகைப்பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ 1160-க்கும், முல்லை 600-க்கும் காக்காடா ரூ.550-க்கும் சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பனி பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் மல்லி கைபூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் மல்லிகை ரூ.1900 உயர்ந்து ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் மல்லிகை பூக்களின் விலை ரூ.3,460 வரை உயர்ந்து உள்ளது.

    இதே போல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.2,160-க்கும், முல்லை ரூ.1,445-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்றும் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை ரூ.4,620-க்கும், கனகாம்பரம், ரூ.850-க்கும், முல்லை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் முன் கூட்டியே வந்து மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் உடனடியாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் ஈரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை மற்றும் மற்ற பூக்களின் விலை அதிகரித்தது.

    மேலும் வரும் நாட்களில் கோவில் விழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
    • நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.

    இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.

    ×