search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செல்போன்களில் வரும் அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம்- ஈரோடு மாவட்ட மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
    X

    செல்போன்களில் வரும் அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம்- ஈரோடு மாவட்ட மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

    • பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    ஈரோடு:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.

    இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.

    தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

    பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×