search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற அனைத்து தொழிற்சங்கத்தினர் 250 பேர் கைது
    X

    மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற அனைத்து தொழிற்சங்கத்தினர் 250 பேர் கைது

    • காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.



    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தமும், காளை மாடு சிலை அருகில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி, எம்.எல்.எப், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில் மறியலுக்காக திரண்டு நின்றனர்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்லிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தொ.மு.ச. கவுன்சில் பேரவை மாவட்ட செயலாளர் கோபால், தலைவர் தங்கமுத்து, ஏ.ஐ.டி.யுசி. சின்னுசாமி, எச்.எம்.எஸ். சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டி.எஸ்.பி. சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்து சென்றனர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், 50 பெண்கள் என 250-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×