search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவைத் தேடி வாகனங்களை வழி மறிக்கும் காட்டு யானை கூட்டங்களால் பரபரப்பு
    X

    உணவைத் தேடி வாகனங்களை வழி மறிக்கும் காட்டு யானை கூட்டங்களால் பரபரப்பு

    • காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
    • காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களை வழிமறித்து சாப்பிட உணவு உள்ளதா என்று தேடி பார்த்து வருகிறது. இந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் சாப்பிட்டு வருகிறது.

    யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து உணவு உள்ளதா என்று தேடி பார்த்தது.

    இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டினர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது தாளவாடி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளை செல்போனில் படம் எடுக்கின்றனர். இது பெரும் ஆபத்தில் முடியும். வாகன ஓட்டிகள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம். மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×