என் மலர்
திண்டுக்கல்
- எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.
- பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
நமது வாழ்க்கை முறையில் நமது ஆயுட்காலத்தை கணக்கிட்டு பார்த்தால் நமது முன்னோர்கள் அனைவரும் குறைந்தது 95 முதல் 102 வயது முடிந்தே இறந்தனர். நமது தாத்தா பாட்டியின் ஆயுட்காலம் 70 முதல் 90 வயது வரை இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 50 வயதை கடந்தாலே சாதனை என பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70.19 ஆக உள்ளது. தமிழக மக்களின் சராசரி ஆயுட்காலம் 71.4 ஆண்டுகள். இதில். ஆண்களுக்கு 68.5 வயதும், பெண்களுக்கு 74.8 வயது என ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆனால் திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 105 வயது முதியவர் வாலிபரைப்போல் அங்கும் இங்கும் துணை ஏதும் இல்லாமல் நடைபோட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ரெட்டியார் சத்திரம் யூனியன் கன்னிவாடி அருகே உள்ள பாப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (105). கோவில் பூசாரியான இவரது மனைவி மாரியம்மாள் (90). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆனந்த ராஜ் என்ற மகனும், ராமாயி, மல்லாயி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோரும் உள்ளனர்.
ஊரில் சிறிய தகர செட் அமைத்து முத்து மாரியம்மன் சிலை வைத்து முத்து பூஜை செய்து வருகிறார். அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி ஆசி வழங்குகிறார். இவரது வாக்கு பலிப்பதாக பக்தர்கள் தேடி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் காணிக்கையே இவருக்கு சிறிய வருமானமாக உள்ளது. இவருக்கு மகன், மகள்கள் மற்றும் பேரன், கொள்ளு பேரன்கள் இருந்த போதிலும் யாருடைய உதவியும் இன்றி வயதான தம்பதியர் தளராது உழைத்து வாழ்ந்து வருகின்றனர்.
தள்ளாத வயதிலும், தளராமல் உறவுகள் துணையின்றி வசித்து வரும் முத்து பூசாரி கூறுகையில், நான் கடந்த 1920ல் பிறந்தேன். 19-வது வயதில் திருமணம் முடிந்தது. விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வந்தேன். 40 வருடங்களுக்கு மேல் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறேன். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை உதவி கரம் கேட்காமல் நாங்கள் இருவரும் வசித்து வருகிறோம் என்றார்.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கசவனம்பட்டி மவுனகுரு நிர்வாண சுவாமிகளை நான் சிறு வயதாக இருக்கும்போதே பார்த்துள்ளேன். ஆடையின்றி நிர்வாணமாக யாரிடமும் பேசாமல் மவுனமாக சுற்றுவார். அவரிடம் நான் ஆசி பெற்றுள்ளேன். அதேபோல் காந்தி கிராமத்திற்கு வந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, நேரு, சுந்தராம்பாள் ஆகியோரை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.
திண்டுக்கல்லுக்கு முதல் முறையாக 1971ம் ஆண்டு வந்த எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.
ஜவஹர்லால் நேரு, குல்ஜாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாய், தேவே கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 15 பிரதமர்களை பார்த்துள்ளேன்.
அதேபோல் தமிழகத்தில் பி.டி. ராஜன், பொப்பிலி ராஜா, கர்மா வெங்கட ரெட்டி நாயுடு, ராஜ கோபாலச்சாரி, தெங்குட்டுரி பிரகாசம், ஓ.பி. ராமசாமி, பி.எஸ். குமாரசாமி, காமராஜ், எஸ். பக்தவத்சலம், வி.ஆர்.நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் என 21 முதலமைச்சர்களையும் பார்த்துள்ளேன் என்றார்.
தள்ளாத வயதில் தளராது நடந்து வருகிறார் முத்து பூசாரி. இதுவரை அரசிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்காமல் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முதியோர் உதவித்தொகை கூட இதுவரை அவர்கள் பெறவில்லை. மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை கூட ஒரு மாதம் மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு அதுவும் வரவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலம் விழுதுகள் போல் சொந்தம் 1000 இருந்தென்ன, வேரென நீயிருந்தால் நான் வீழ்ந்து விடாமல் இருப்பேன் என்ற வரிகளுக்கு ஏற்ப மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருவதை தற்கால தம்பதிகள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
- ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
- இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.
மதுரை:
மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.
மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.
விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.
எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.
இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.
அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.
நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.
- பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது.
- பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் பொன்ஜனகன் (வயது 17).இவர் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவன் பொன்ஜனகன் மாலையில் டியூசன் முடித்து விட்டு நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பணப்பை கிடந்தது. அந்த பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது. இதை பார்த்த மாணவன் அதனை நிலக்கோட்டை நால் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
உடனடியாக பள்ளி மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்திடம் இது குறித்து போலீசார் தெரிவித்தனர். மாணவனின் இந்த செயலை பாராட்டிய நிலகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். மேலும் தவற விட்ட பணப்பை மற்றும் செல்போன் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் துரைசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரும் பள்ளி மாணவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார்.
- ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த கண்ணன்-அனுப்பிரியா தம்பதியின் மகள் தன்மயா (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது சிறு வயது முதலே தமிழ் ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இதற்காக யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார். பிரான்ஸ், பிரட்டிஷ், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை இலக்கணப் பிழையின்றி எழுதி படிக்க கற்றுக் கொண்டார். உச்சரிப்பு, எழுத்து, வாக்கியம், இலக்கணம் ஆகியவற்றை வீடியோ வடிவிலும், பி.டி.எப்., டெக்ஸ்ட் வடிவிலும் புதிர் கேள்விகள், வினாடி வினா மூலம் கற்றுத் தேர்ந்தார்.
இது குறித்து ஆன்லைன் மூலம் நடந்த தேர்விலும் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார். இவரது திறமையை கண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இவர் மொழித் திறன் பயிற்றுவிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார். 5 வெளிநாட்டு ஆங்கில மொழியை அந்த நாட்டின் நளினத்தில் உரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கம் மற்றும் கூச்சம் இருக்க கூடாது என்று கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கு கல்லூரி பேராசிரியர்கள் கூட பேசுவதற்கு திணறி வருகின்றனர் என்பது கூடுதல் விஷயமாகும்.
தமிழகத்தில் பிற மொழிகளை கற்கக்கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்திய மொழிகளைக் கடந்து அயல்நாட்டு மொழிகளையும் கற்று அதனை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து 8ம் வகுப்பு மாணவி அசத்தி வருவதோடு இந்த காலத்திலேயே வருவாயும் ஈட்டி வருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.
- நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவிலில் ஒரு தரப்பினர் தங்கள் சமூகத்திற்கு மண்டகப்படி வழங்க வேண்டும் என கேட்டு கடந்த 19-ந்தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அதன் பிறகு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாததால் மீண்டும் கடந்த 27-ந்தேதி முதல் கோவில் வளாகத்திலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.
கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் இன்று ஊர்வலமாக புறப்பட்டு சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கையில் கருப்புக் கொடி ஏந்தியும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்களை ஏந்தியபடியும் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
- எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
- பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.
தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.
இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது.
- அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை.
திண்டுக்கல்:
நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. படித்தால் வேலை கிடைக்கும் என நம்பி பட்டப்படிப்புகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பின்னர் அதனை புதுப்பித்து வேலை கிடைக்காத நிலையில் கிடைத்த வேலையை செய்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த படிப்பு படித்திருந்தாலும் வேலை கிடைக்காத நிலையில் ஓட்டல், டீக்கடைகளுக்கு வேலைக்கு செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் 66 காலியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வியே தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து இளநிலை, முதுநிலை, எஞ்ஜினீயரிங், டிப்ளமோ, பி.ஹெச்.டி படித்த மாணவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.

விண்ணப்பம் செய்திருந்த 6167 பேர்களில் தினசரி 1200 பேர் வீதம் நேர்காணல் தேர்வு வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த இடமே கடும் போக்குவரத்து நெரிசலானது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் தலைமையில் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருந்தனர். செய்முறை தேர்வாக சாணி அள்ளுதல், மாடுகளுக்கு ஊசி போடுதல், நோய்தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்தல், மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கயிறு மூலம் இழுத்து கட்டுதல் ஆகியவையே போதுமானது. மேலும் மாடுகளின் பால் கறக்கும் மடிகளில் புண்கள் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பணிகளை கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களே எளிதாக செய்ய முடியும்.
ஆனால் வேலை இல்லாத காரணத்தால் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இருந்த போதும் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு முடிந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.
இதுகுறித்து நேர்காணலுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் தெரிவிக்கையில்,
படித்த படிப்புக்கு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறோம். வேலை இல்லாததால் திருமணம் கூட நடைபெறவில்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை. பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிட ஏதேனும் ஒரு வேலையை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதுவும் இந்த பணி அரசு வேலை என்பதால் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பையும் நினைக்காமல் வந்துள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு கட்டுபடியான சம்பளம் என்பதால் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுபவம் இல்லையென்றாலும் போகப்போக சரியாகிவிடும் என நினைக்கிறோம் என்றனர். ஆண்கள் மட்டுமின்றி பட்டதாரி பெண்களும் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும்.
- தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ம் தேதி வள்ளிதெய்வானை முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இரவு வெள்ளி ரதத்தில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய
நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 25ம் தேதி நடைபெற்றது. மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
27-ம் தேதி இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளினார். 10ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வள்ளி முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால் தெய்வானை கோபித்துக்கொண்டு செல்ல தூதரான வீரபாகு சென்று சமாதானம் செய்து கோவில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தெப்பகுள மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.
- எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் இழைத்தார்.
- விரைவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க உருவாகும்.
திண்டுக்கல்:
தொண்டர்கள் உரிமை மீட்பு பயணமாக திண்டுக்கல் நகருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது,
எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகத்தின் முழு உருவமாவார். தவழ்ந்து சென்று பதவியை பிடித்த அவர் அதற்கு காரணமானவர்களை ஒதுக்கி வைத்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தார். அப்போது நான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரை சந்தித்தோம். அப்போது சசிகலா, தினகரன் உள்பட அனைத்து அணிகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இன்றுவரை அணிகள் இணைய முட்டுக்கட்டையாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. நான் 3 முறை எனது முதலமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் இழைத்தார். விரைவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
- 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.
அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
- பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
- அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தைப்பூசம், குடியரசுதினம் மற்றும் வார இறுதிநாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகளான மூஞ்சிக்கல், அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இருந்தபோதும் மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காவில் மலர்களையும் அவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
2 மாறுபட்ட சீதோஷ்ண நிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் போதியஅளவு போலீசார் நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
- விண்ணையே பிளக்கும் வகையில் அரோகரா... சரணகோஷம்
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
தேரோட்டத்தையொட்டி முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.
பின்னர் பகல் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருத்தேரில் சாமி எழுந்தருளினார்.
தேரோட்டம்
மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா...!" என்று சரண கோஷம் எழுப்பினர். இதனால் விண்ணையே பிளக்கும் வகையில் சரணகோஷம் முழங்கியது.
தொடர்ந்து நிலையில் இருந்து பெரிய தேர் புறப்பட்டு கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் பின்னால் கோவில் யானை கஸ்தூரியும் நடந்து வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.






