search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palanimalai Murugan Temple"

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விழாவான தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.

    தற்போது தைப்பூச திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பாரம்பரிய நடனமாடி பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் கிரி வீதி, அடிவாரம், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
    • விண்ணையே பிளக்கும் வகையில் அரோகரா... சரணகோஷம்

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

    தேரோட்டத்தையொட்டி முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.

    பின்னர் பகல் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருத்தேரில் சாமி எழுந்தருளினார்.

    தேரோட்டம்

    மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா...!" என்று சரண கோஷம் எழுப்பினர். இதனால் விண்ணையே பிளக்கும் வகையில் சரணகோஷம் முழங்கியது.

    தொடர்ந்து நிலையில் இருந்து பெரிய தேர் புறப்பட்டு கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் பின்னால் கோவில் யானை கஸ்தூரியும் நடந்து வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

    • பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது.
    • பழனிக்குப் பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார்.

    போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ம் நூற்றாண்டிலேயே மிகவும் தைரியமாக பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமூகத்தினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனதிலே பிரார்த்தனை செய்து கொண்டார். பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது.

    செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டு தோறும் தன் ஊரில் இருந்து பழனிக்குப் பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார். முருகனின் கருணை வெள்ளத்தில், அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார்.

    இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதற்காக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர். இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது.

    ஒரு குழு, பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்து பழனி வருகின்றனர். இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களில் இருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடிகளுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

    இதேபோன்று பல்வேறு பிரிவினர்களும் காவடி எடுத்துப் பழனிக்கு நடந்து வருவர். வழியில் நாட்டார் காவடிகள் என்றும் நகரத்தார் காவடிகள் என்றும், நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை.

    நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து விட்டு மறுபடியும் பயணம் மேற்கொள்வர். இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும் ஆடியும் நடந்து செல்வார்கள்.

    பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள். அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடி களை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள்.

    இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது. தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் வேறு எந்த கோவிலிலும் பாதயாத்திரைப் பக்தர்கள் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி.
    • திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று தேரோட்டம்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம்நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    வெள்ளிரத உலா

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    இன்று தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மேல் மீன லக்னத்தில் திருத்தேரேற்றமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலை வந்தடைந்த பின்னர் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரதவீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன்.
    • எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான்.

    ஒரு சமயம் அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன். அவன் மிகப்பெரிய பலசாலி, எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான். அகத்திய முனிவரின் வழிபாட்டிற்காக அவன் கயிலை மலைக்குச் சென்று, அங்குள்ள கந்தமலையில் சிவ-சக்தி சொரூபமாக இருக்கும் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும், ஒரு நீண்ட மூங்கிலில் இரு பக்கமும் துலாபாரம் போல கட்டி தன்னுடைய தோளில் வைத்து தூக்கி வந்தான்.

    அப்போது அவனுக்குள், 'நம்மை விட மிகுந்த மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது. அப்படி வரும் வழியில் முருகப்பெருமானின் திருவிளையாடலால். பாதை தெரியாமல் திகைத்து தடுமாறினான். அப்பொழுது முருகப்பெருமான், மிக அழகிய சிறுவனின் தோற்றத்தில் வந்து இடும்பனுக்கு வழிகாட்டினார்.

    திருவாவினன்குடி அருகே வந்தபோது, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "இடும்பா.. இங்கு நீ சற்று ஓய்வு எடுத்து விட்டுச்செல்" என்றார். இடும்பனும் அங்கு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று காவடி போல் சுமந்து வந்த மலைகளை கீழே இறக்கி வைத்தான். ஒய்வு எடுத்த பிறகு அந்த காவ டியை தூக்கியபோது, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    என்ன காரணம் என்று பார்க்கையில், சிவகிரியின் உச்சியில் ஒரு அழகிய சிறுவன் கோவனத்துடன், கையில் ஒரு கம்பை ஊன்றியபடி நிற்பதைக் கண்டான். உடனே கோபம் கொண்ட இடும்பன், சிறுவனைப் பார்த்து "மலையில் இருந்து இறங்கு" எனக் கூற, அந்த சிறுவனோ ``இந்த மலை எனக்கே சொந்தம்" என்றான்.

    இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இடும்பன். சிறுவனை தாக்க முயன்றான். அப்போது சிறுவன் உருவத்தில் இருந்த முருகப்பெருமான். இடும்பனை சாதாரணமாக தள்ள, அவன் கீழே விழுந்து மயக்கமுற்றான். அப்போது அகத்தியரும். இடும்பனின் மனைவியும் முருகப்பெருமானிடம் வந்து இடும்பனுக்கு ஆசி கூறுமாறு வேண்டினர்.

    இதையடுத்து முருகப்பெருமான். இடும்பனை தன்னுடைய காவல் தெய்வமாக நியமித்தார். இடும்பன் இரு மலைகளைத் தூக்கி வந்த நிகழ்வை நினைவுகூரும் ஒன்றாகத்தான் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் வழக்கம் வந்தது.

     தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால் காவடி, பழக்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமான காவடிகளைச் சுமந்தபடி முருகபக்தர்கள், முருகனை தரிசிக்கச் செல்கிறார்கள். இவ்வாறு காவடி எடுக்கும் பக்தர்களுக்கு. இடும்பனுக்கு அருள்செய்தது போல முருகப்பெருமான் அருள்செய்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ×