என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
    • மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    அன்னூர்:

    கோவை அன்னூரில் உளள முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான இறையன்பு பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சாமிகளுக்குள் சண்டையில்லை. மனிதர்களுக்குள் தான் சண்டை. மனிதன் வாழும் வரை மாணவர்கள் தான். வாழ்வின் கடைசி வரை மனிதர்கள் கற்றுக் கொண்டு தான் உள்ளனர்.

    மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது ஒரு கைத்திறணையும் கற்று கொள்ள வேண்டும். இதற்காக கைத்திறண் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படுகிறது. கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.

    தரையில் அமர்ந்து படித்தால் தான் மாணவர்களின் உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் தரையில் அமர்வதை தவிர்ப்பதால் தான். இளைஞர்கள் வரை இந்த வலி வருகிறது.

    ஒரு பள்ளியின் சிறப்பு கட்டிடங்களால் உயர்ந்தது இல்லை. அதன்மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தான் உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள தை மட்டும் படிக்கும் ஒருவர் ஒருபோதும் காலப்போக்கை கற்று கொள்ள முடியாது.

    பள்ளியின் பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படித்தால் தான் சிறந்த அறிவை பெற முடியும். மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள் தான்வெற்றி பெறுவார்கள். இன்றைய சிறுவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் உள்ளது.

    அதற்கு காரணம் இன்றைய நிலையில் செல்போனில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததால் தான். அதனை நீங்கள் சரியான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    அன்றைய மாணவர்களுக்கு நூலகம் இருந்தது. அன்று மாணவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதற்கு யாரும் இல்லை. படிப்பின் மூலம் எந்தெந்த பணிகள் கிடைக்கும் என்று கூட தெரியாது.

    சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதா சீனம் படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்பை கற்று கொடுக்க வேண்டும்.

    அப்போது தான் சராசரி மாணவர்கள் தானாக படிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை கூற வேண்டும். அப்போது தான் அவர்களை மேன்மைபடுத்த முடியும். பள்ளியில் படிக்கும் போது செல்போனுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவரிடம் இருந்து விலகி செல்லுங்கள். இதனால் மாணவர்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் என பேசினார்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
    • கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை நீர் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு உயராமல் காணப்பட்டது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை உயர்ந்தது.

    அதற்கு மேல் நீர்மட்டம் உயரவில்லை. மேலும் மழை பெய்யாததாலும் குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் 7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாலும் சிறுவாணி அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 26 அடி(871 மீட்டர்) ஆக உள்ளது.

    இதுகுறித்து கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பில்லூர் 1 மற்றும்2, ஆழியார் கூட்டுக் குடிநீர்திட்டம், வடவள்ளி-கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கலாம்.

    கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    கோவை:

    கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து இன்று கோவையில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும், கோவை மாவட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அ.தி.மு.க பகுதி, பேரூர், வார்டு செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் குவிந்திருந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு வந்தனர்.

    தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பகுதி, வார்டு, பேரூர், செயலாளர்கள், தொண்டர்கள், மகளிர் அணியினர், சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்குகிறார். இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    • கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.
    • 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.

    தொடர்ந்து வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 25 குழுக்களை சேர்ந்த 140 பேர் கணக்கெடுப்பு பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக அம்சங்கள், எப்படி கணக்கெடுப்பு நடத்துவது ஆகியவை தொடர்பான பயிற்சிகள், கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டன. அடுத்தபடியாக கடந்த 27, 28-ந்தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.


    இதன் ஒரு பகுதியாக வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சிகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம், ஆச்சான்குளம், சாளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திகுட்டை உள்ளிட்ட மொத்தம் 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அங்கு ஒருசில அரியவகை பறவை இனங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக 2 நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 201 பறவை இனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 69 பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 60 இனங்களை சேர்ந்த 7234 நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன.


    இதுதவிர உக்கடம் குளத்தில் 2288, வாளையார் 1797, கிருஷ்ணாம்பதி 1387 ஆகிய நீர்நிலைகளில் அதிக பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளது. மேலும் இருகூர், வேடப்பட்டி, நரசம்பதி உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இருகூரில் 31, வேடப்பட்டியில் 32 என குறைந்த எண்ணிக்கையில் பறவை இனங்கள் பதிவாகி உள்ளன. பெத்திக்குட்டை, கிருஷ்ணாம்பதி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 101 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பறவை இனங்களின் சராசரி 54 முதல் 75 வரை அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்தாண்டு 20 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 9494 ஆக இருந்தது. ஆனால் தற்போது 25 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பறவைகளின் எண்ணிக்கை 16069 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் நத்தைகுத்தி நாரை, கருந்தலை மீன்கொத்தி, நீர்க்கோழி, இந்திய காட்டு காகம், தவிட்டு குருவி, சின்னத்தோல் குருவி, வண்ணநாரை, செந்நாரை, நீலச்சிறகி, சிறு முக்குளிப்பான், தாழைக் கோழி, வெண்கழுத்து நாரை, வயல்கதிர் குருவி போன்ற பறவைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் நிலப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்கான கணக்கெடுப்பு பணி வருகிற மார்ச் மாதம் 1,2-ந்தேதிகளில் நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும்.

    கோவை:

    கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார்.

    2 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை தொடங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

    இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை. இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.

    குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும். இதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.
    • கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம் அருகில் முருகன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் சிறுமுகை வனரக அலுவலர் மனோஜ், வன கால்நடை மருத்துவர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பெண் காட்டு யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அளித்து வருகின்றனர்.

    யானையின் உடல்நிலை மெலிந்த நிலையில் உள்ளதால் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

    இன்றும் உடல் நலம் பாதித்த காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியலில் புதிததாக 85 ஆயிரம் புதுவாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 950 வாக்காளர்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 538 பெண் வாக்காளர்கள், 124 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. தமிழகத்திலேயே 2-வது பெரிய தொகுதியாகவும் இந்த தொகுதி உள்ளது.

    மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503 வாக்காளர்களுடன் வால்பாறை தொகுதி சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 93 ஆயிரத்து 443 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 38 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

    கோவை வடக்கு தொகுதியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். 697 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். மற்ற 9 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    40 ஆயிரத்து 469 ஆண் வாக்காளர்கள், 45 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்கள், 52 மூன்றாம் பாலினத்தவர்கள் என 85 ஆயிரத்து 680 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் 27 ஆயிரத்து 333 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்கள் 26 மூன்றாம் பாலினத்தவர்கள் என 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அப்போதிருந்த வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 20.83 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக ஓட்டுச்சாவடி எண்ணிக்கையும் 2,048 என கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் 329, கவுண்டம்பாளையம் 435, கோவை வடக்கு 298, கோவை தெற்கு 251, சிங்காநல்லூர் 323, பல்லடம் 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தேர்தல்பிரிவினர் கூறுகையில், ஓட்டுச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தேர்தல் தேதி அறிவித்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தேவையான வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்டு அவற்றினை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.

    • வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
    • பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பிறந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட கலைஞராக உள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பத்ரப்பன், சிறுவயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்க ளில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

    இதுதவிர 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.

    வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

    கிராமிய கலையான வள்ளி கும்மி கலையில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், அதை மாற்றி பெண்களும் அதிகளவில் பங்கேற்கவும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெருமைக்குரியவர் பத்ரப்பன்.

    அந்த கலையின் வாயிலாக தேசப்பற்று, வரலாறு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து வள்ளி கும்மி கலைக்கு சேவையாற்றி வரும் இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.

    இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும், நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதால் தனது மகள் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்து விவசாயம் பார்த்து வருகிறார். முத்தம்மாளின் கணவர் ரங்கசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.


    பத்மஸ்ரீவிருது குறித்து பத்ரப்பன் கூறியதாவது:-

    நாட்டுப்புற கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலைவடிவம் மூலம் தான் மற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.

    இக்கலை என்னோடு அழிந்து விடாமல் இருப்பதற்காக மேட்டு ப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கத்தை தர முடியும்.

    பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறைகளிலும் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும். எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறனே். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நான் எனக்காக கருதாமல் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கு கிடை க்கும் பரிசாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்.

    நான் ஏற்கனவே தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைமுதுமணி விருதுகளை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவாது

    ஒயிலாட்ட நாட்டுப்புற கலைகளின் முன்னோடியான, அய்யா பத்ரப்பன் அவர்களுக்கு, மத்திய அரசு "பத்மஶ்ரீ" விருது அறிவித்ததை அடுத்து உடனடியாக அவர்களது இல்லதிற்கு சென்று ஐயா அவர்களை நேரில் சந்தி்த்து மிகுந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்.

    வள்ளிக்கும்மி எனும் நாட்டுப்புற நடனத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம், தெய்வங்களின் வரலாறு, தேச வரலாறு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுபவர்.

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கலையில், பெண்களுக்கும் சமமான அதிகாரமளித்து பயிற்சி கொடுத்த முன்னோடி.

    தொடர்ந்து 66 ஆண்டு காலமாக தான் நேசித்து செய்யும் இக்கலையின் மூலம், 150-க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி, குருவாக்கியுள்ளார். 300-க்கும் அதிகமான "கும்மி" நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பையா கவுண்டருக்கு காளப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய மற்றொரு வீடும் உள்ளது.
    • பையா கவுண்டரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை:

    கோவை காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் (வயது65).

    தி.மு.க பிரமுகரான இவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.

    பையா கவுண்டருக்கு காளப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய மற்றொரு வீடும் உள்ளது. இந்த தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு வந்து விடுவார்கள்.

    இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலைக்கு வந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலை கேட்டதும் அவர்கள் பதறி அடித்துக்கொண்டு தோட்டத்திற்கு ஓடி வந்தனர். அங்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பையா கவுண்டரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பையா கவுண்டருக்கு கடந்த சில மாதங்களாகவே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    தற்கொலை செய்து கொண்ட பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் கடந்த 2006-ம் ஆண்டு காளப்பட்டி பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், கடந்த 2011-ம் ஆண்டு வரை காளப்பட்டி பேரூராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். பேரூராட்சி தலைவராக இருந்த போது, அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

    தி.மு.கவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு வரை கோவை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    மேலும் இவர் கடந்த 2016 மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டார். ஆனால் 2 தடவையும் அவருக்கு வெற்றி கிடைக்காமல் தோல்வியையே தழுவினார்.

    2021 தேர்தலுக்கு பிறகு அவரது மாவட்ட செயலாளர் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர் கட்சி பணிகளில் எந்தவித நாட்டமும் காட்டாமல் சற்று ஒதுங்கியே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.
    • பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் "தென்னிந்திய தென்னை திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜன 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    "தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த "தென்னிந்திய தென்னை திருவிழா" நிகழ்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் "இயற்கை சந்தையில்" 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு முத்துகுமார் கூறினார் அவரோடு முன்னோடி விவசாயி வள்ளுவன் அவர்கள் உடன் இருந்தார்.

    • தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

    கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

    இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×