search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sylendra Babu"

    • ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும்.

    கோவை:

    கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார்.

    2 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை தொடங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

    இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை. இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.

    குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும். இதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நூலகத்திற்கு தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
    • மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும்.

    கன்னியாகுமரி:

    தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பணியை திறம்பட செய்ததோடு படிப்பின் அவசியம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டி தேர்வில் சாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர சைக்கிள் பயிற்சி, மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று உடல் வலிமை, மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

    இந்தநிலையில் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவர் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நூலகத்திற்கு அவருடைய தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.

    மேலும், இந்த நூலகத்தை தன்னுடைய தாயார் ரெத்தினம்மாளை வைத்து திறக்கவும் ஏற்பாடு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தை பயன்படுத்துவதற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார்.

    இது தவிர இந்த நூலகத்தில் டிஎன்.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ், நீட், வங்கி தேர்வு, மத்திய, மாநில அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் உள்ளிட்ட பல புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    இதுதொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

    மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும். தற்போது உள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழி உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. அந்த ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் பயன்பெறும்.

    நான் இந்த வீட்டில் இருந்து படித்து தான் பதவிக்கு வந்தேன். அதே போன்று இந்த பகுதி இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க இந்த நூலகம் வழிகாட்டியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான்.
    • வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தலைமை தாங்குவோம் என்ற தலைப்பில் பேசியதாவது:-

    பெண்கள் உயர்கல்வி கற்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. இன்று சமத்துவம், சமூகநீதி கொள்கை அடிப்படையில் பெண்கள் உயர்கல்வி கற்று கல்வி தரத்தில் உயர்ந்து வருகிறார்கள். கல்வி தான் நம்முடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

    உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான். ஒரு குறிக்கோளுடன் தன்னம்பிக்கை, திட்டமிடுதலுடன் ஒரு மனிதன் வாழ்ந்தால் அதுவே ஒரு அதிசயமாகும். ஒரு கால கட்டத்தில் பெண்கள் கல்வி மேதை என்பது மறுக்கப்பட்டு வந்தது. சுதந்திரம் இருந்தபோதும் அதனை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். சமத்துவம், சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் அனைவரும் சமம். நமது முன்னோர்கள் உயர்கல்வி கற்பது என்பது சாத்தியமற்ற நிலையில் இருந்தது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் வகுத்த பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இன்று நாம் அனைவரும் உயர்கல்வி கற்று வருகிறோம். தற்போதுள்ள பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். படிக்கலாம். வேலை பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும். கல்வி என்பது மிகப்பெரிய பேராற்றல் மிக்க ஆயுதம் என்றார் நெல்சன் மண்டேலா. கல்வி என்ற பேராயுதத்தை ஏந்தினால் இந்த உலகத்தில் வெற்றி பெறலாம். மாணவர்களாகிய உங்களுக்கு உடல் பலமும் மன பலமும் மிக முக்கியமாகும்.

    எனவே, மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும். எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன், திட்டமிட்டு, ஒரு கனவு கண்டு, அந்த கனவின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் வாழ வேண்டும். ஒரு மனிதன் உயர்ந்த நிலைக்கு செல்வது உயர்கல்வியே. கல்வி என்பது மாபெரும் ஆயுதம் ஆகும். பெண்களை சாதிக்க வைப்பது கல்வி தான். கல்வி கற்பதின் மூலம் உலகில் தலைசிறந்தவர்களாக தலைமை தாங்கலாம். அதற்கு கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்யும் படி, கவர்னர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கவர்னரின் முடிவு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்து உள்ளார். வேறு நபரை பரிந்துரைக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

    தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வுபெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    தமிழக டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு, இந்தாண்டு ஜூனில் பணி ஓய்வுபெற்றார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக அவரை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை, கவர்னர் ரவிக்கு தமிழக அரசு ஜூலை மாதம் அனுப்பியது.

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா; தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது என பல்வேறு விளக்கங்களை கேட்டு, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ரவி, ஆகஸ்டில் திருப்பி அனுப்பினார்.

    இந்த கேள்விகளுக்கு, தமிழக அரசு வாயிலாக விரிவான விளக்கம் அளித்து, மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையை ஏற்காமல், கவர்னர் ரவி நிராகரித்துள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை. இந்த பதவியில், 62 வயது வரை உள்ளவர்களை மட்டுமே நியமிக்க முடியும்.

    சைலேந்திரபாபுவை நியமித்தாலும், 6 மாதங்கள் தான் பணியில் இருப்பார். எனவே, தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்யும் படி, கவர்னர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக சிவகுமார் என்பவரை நியமிக்க, தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையையும், கவர்னர் நிராகரித்து உள்ளார்.

    இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீண்டும் சைலேந்திர பாபுவை பரிந்துரைக்குமா அல்லது வேறு ஒரு நபரை பரிந்துரைக்குமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

    கவர்னரின் இந்த முடிவு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.

    சைலேந்திரபாபுவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி நிராகரித்து இருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவு ஆகும்.

    தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக கவர்னருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
    • தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பின், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, தேர்வு முடிவுகள் உள்ளிட்டவைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினர்களாக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.

    இதற்கு பதில் அளித்த ஆளுநர் மாளிகை, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடைபெற்றது, உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்ற விளக்கங்கள் கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டதை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
    • தமிழக அரசு அனுப்பி வைத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.

    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கு தேவையான ஊழியர்களை போட்டி தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது.

    இந்த தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும்.

    அரசு அலுவலகங்களில் உள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்களை தேர்வு செய்வது டி.என்.பி.எஸ்.சி.யின் முக்கிய பணியாகும். இந்த அமைப்புக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.

    மிக முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சி. யில் 4 உறுப்பினர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) டி.என்.பி.எஸ்.சி. பொறுப்பு தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

    இதையொட்டி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 8 உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்களையும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பியது.

    தமிழக அரசு அனுப்பி வைத்த இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.

    இப்போது சைலேந்திர பாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும், பிரகாஷ் சிங் என்பவரது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இந்த நியமனம் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    டி.ஜி.பி.யாக இருந்தபோது சைலேந்திர பாபு ஓய்வுபெற்ற தேதியை பொருட்படுத்தாமல் டி.ஜி.பி.யாக 2 ஆண்டுகள் பதவி வகித்ததால் கடந்த ஜூன் 30-ந்தேதி தனது 61-வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    ஆனால் இப்போது நியமிக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலம் 6 ஆண்டுகள் என்றாலும், அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும்.

    இதை சுட்டிக்காட்டி உளள கவர்னர் ஆர்.என்.ரவி, சைலேந்திரபாபு நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தனக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த நியமனம் தொடர்பாக அறிவிப்புகள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என்றும் அரசுக்கு கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். எனவே இது தொடர்பான விவரங்களை விளக்கமாக தமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பதவிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எவ்வாறு இறுதி செய்யப்பட்டனர் என்பதையும் விளக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த விவகாரம் அரசுக்கும், கவர்னருக்கும் மீண்டும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

    கவர்னர் குறிப்பிட்டுள்ள விளக்கங்களுக்கு தமிழக அரசு விரிவாக பதில் தயாரித்து வருவதாகவும். விரைவில் அந்த கோப்பு முழு விளக்கங்களுடன் கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டு கட்டுப்பாட்டு சட்டம் 2022-ன் கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களின் நியமனத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன்.
    • நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

    அதில் தனது பணிக்காலத் தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

    இரண்டாண்டு காலம் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம்.

    ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந் தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

    ரவுடிகள் தொல்லை இல்லை, கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே 30 ஆயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.

    பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல்நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர்கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும். காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும். காவல்துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.

    வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருள் நட மாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.

    பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால், நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச் சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார்.
    • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரான இறையன்பு மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறுகின்றனர்.

    இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

    தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார். இவர் தற்போது தொழில் முதலீட்டு நிறுவனத்தில் (டிக்) கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா உள்ளார். மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    இவர்களது பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் 3 பேர் பெயர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும்.

    அந்த வகையில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றவர். 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். பணியில் அனுபவம் வாய்ந்தவர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சிவ்தாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார்.

    அதன் பிறகு மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும் சிவ்தாஸ் மீனா தமிழக பணிக்கு திரும்பினார். தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.

    தமிழக டி.ஜி.பி.யாக உள்ள சைலேந்திரபாபு ஜூன் 30-ந்தேதி ஓய்வுபெறும் நிலையில் அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரமிக்க இந்த பதவிக்கு சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் பெயர் அடிபடுகிறது.

    புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க 3 மாதங்களுக்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். அதில் மத்திய அரசு 3 பேர் பட்டியலை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும். அதில் ஒருவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார்.

    அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.யாக வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சீனியாரிட்டி அடிப்படையில் 1988-ம் வருட தமிழக பேட்ச் அதிகாரி சஞ்சய் அரோரா, 1990 பேட்ச் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் போலீஸ் கமிஷனர்) ஆபாஷ்குமார் சீனா அகர்வால் 1991 பேட்ச் அதிகாரி அமரேஷ் புஜாரி ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் காவல் துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
    சென்னை:

    கனமழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

    அவசர உதவிக்கு போலீஸ்துறை-100, தீயணைப்புத்துறை-101, பொது எண்-112, ஆம்புலன்சு-108, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-044 24343662, 044 24331074, 044 28447701, 044 28447703 (பேக்ஸ்), சென்னை மாநகர போலீஸ் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு எண்-044 23452380, மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்- 044 23452359 ஆகிய எண்களை தொடர்புக்கொள்ளலாம் என்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேற்று மாலை 3.30 மணிக்கு காரில் திடீரென வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவு செய்துள்ள வழக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி குறித்து போலீசாரிடம் கேட்டார்.

    இதனை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ரெயில் நிலைய பகுதிகளையும் பார்வையிட்டார்.

    இது குறித்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது வழக்கமான ஆய்வுதான். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு முதன்முறையாக ஆய்வு செய்ய வந்துள்ளேன். ரெயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது ரெயில் நிலையத்தில் காத்திருக்கும்போதோ தங்களது உடைமைகளை பயணிகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி பொருட்கள் திருடுபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்யும்போது திருட்டு நடந்ததால், அது தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என்பது கிடையாது. தமிழகத்திற்கு வந்து, அருகில் உள்ள ரெயில் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம்.

    ரெயிலில் பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அதனை பயணிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக ரெயிலில் பயணம் செய்யும் பெண்ணுக்கு ஏதேனும் பாலியல் தொல்லையோ அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டதால் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். அடுத்த சில நிமிடங்களில் அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா உடன் இருந்தார்.
    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    பொன்னேரி:

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.

    இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.

    மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
    ×