என் மலர்
கோயம்புத்தூர்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.
- பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
குனியமுத்தூர்:
கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.மேலும் ராகு-கேது பகவானுக்கு 1008 மலர் அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கலந்துகொண்டு ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து பேசியதாவது:-
ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் உலகின் பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
ராகு பகவான் மீனராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளதால் நீர் சம்பந்தமான ஆபத்து, புயல், பெருமழை வெள்ளம் போன்றவை இந்தாண்டு ஏற்படும். இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக மாணவர்கள் உலகளவில் சிறப்பு பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
- வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று காலை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை அப்படியே மாறியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், ரெயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகர், ஆர்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோவில் வீதி, எல்லைத் தோட்டம் 4-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் ஆர்.எஸ்.புரம் 73-வது வார்டு பி.எம்.சாமி காலனி 2-வது வீதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
இதேபோல் குட்ஷெட் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஐதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 2 விமானங்கள் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானிலேயே வட்டமடித்தது. மழை ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறங்கின. இதேபோல் கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-74, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-47, சின்னக்கல்லார்-42, கோவை தெற்கு தாலுகா-36, வால்பாறை பி.ஏ.பி.-31, வால்பாறை தாலுகா-29, சோலையார் மற்றும் தொண்டாமுத்தூர் பி டபிள்யூ அலுவலகம்-16 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
- எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
கோவை:
நாம் தமிழர் கட்சியினர் ஆண்டு தோறும் மே 18-ந் தேதி தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் கோவை கொடிசியாவில் நேற்று நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மனோரஞ்சன் பியாபாரி எம்.எல்.ஏ., எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீமான் பேசும்போது கூறியதாவது:-
மே 18 துயரம் தோய்ந்த இனப்படுகொலை நாள். தமிழர் என்ற உணர்வை இழந்ததால் சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க, ஒழிக என்று கோஷம் போடாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
எந்த மொழியின் துணையுமின்றியும் தனித்து இயங்கும் ஒரே மொழி தமிழ் தான். அந்த மொழி இன்று அழிந்து வருகிறது. மொழி சிதைந்து அழிந்தால், இனம் அழியும். தமிழுக்கும், தமிழனுக்கும் இறுதி வரை உறுதியாக நின்று போராடுபவனே தமிழன்.
தமிழ்நாட்டில் இருந்து கடைசியாக பிரபாகரனை சந்தித்தது நான் தான். எங்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்ன பேசினோம் என்பது எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.
தமிழ்நாட்டிற்குள் 1½ கோடி வட இந்தியர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் இங்கு வந்து குடும்ப அட்டை, வாக்குரிமை பெறுகிறார்கள். இது பேராபத்தை உருவாக்கும்.
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வாக்கு வட இந்தியர்களின் வாக்கு தான். இப்படியே விட்டால், அவர்கள் நமது அரசியலை தீர்மானிப்பார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நாம் 1.1 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். படிப்படியாக வளர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 36 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள்.
இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தோல்வி என்பது தோல்வியல்ல, பயிற்சி. எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்காக வந்த அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக வந்த புரட்சியாளர்கள். தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை உருவாக்கும் லட்சிய கோட்பாடு கொண்டது நாம் தமிழர் கட்சி.
2026-ம் ஆண்டு தேர்தலுக்கு விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. எனது எண்ணம் மட்டும் இந்த சின்னம் அல்ல. சின்னமே நான் தான். 2026-ம் ஆண்டு தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்கும், 117 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்படும். இதில் 134 இடங்கள் இளைஞர்களுக்கு கொடுக்கப்படும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், காமராஜர், கக்கன் உள்ளிட்ட பல தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
- தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
- யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.
வடவள்ளி:
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.
திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை. குட்டி யானை அதன் அருகே பரிதவித்தபடி இருந்தது.
இதனை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் குட்டி யானை, தாய் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் இருந்தது. யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.
மேலும் குட்டி யானை, தாய் யானையின் மேல் படுத்துக் கொண்டு தனது முழு பலத்தையும் காட்டி எழுப்ப முயன்றது. அம்மா எழுந்திரும்மா, எழுந்திரும்மா... என்பது போல் அந்த குட்டி யானையின் செயல்கள் இருந்தன. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண் போரை கண் கலங்கச் செய்தது.
வனத்துறையினர் பல மணி நேரம் போராடி பார்த்தனர். ஆனால் குட்டி யானை அங்கிருந்து நகராமல் தனது தாயை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தது. குட்டி யானை வழிவிட்டால் தான் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. இதுபற்றி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களது உத்தரவின்பேரில் முதுமலையில் இருந்து கும்கி யானை ஒரியன் வரவழைக்கப்பட்டது. கும்கி யானையுடன் கால்நடை மருத்துவர் விஜயன் என்பவரும் வந்தார். கும்கி யானை உள்ளே புகுந்து குட்டி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் குட்டி யானை அங்கிருந்து ஓடி வெகுதூரத்தில் போய் நின்றது.
இதையடுத்து தாய் யானையை கிரேன் உதவியுடன் நிறுத்தினர். யானைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்து, மாத்திரைகள் உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனை உட்கொண்ட யானை உடல் நலம் தேறி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
குட்டி யானை தொடர்ந்து தாய் யானையை கண்காணித்தபடியே சுற்றித்திரிகிறது. இந்த உருக்கமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
- விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை:
திருப்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
திருப்பூர்-வால்பாறை பஸ்சில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் வால்பாறை அடுத்த கவர்கள் எஸ்டேட் பகுதியின் 33-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்தது. அப்போது வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இது குறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார், 108 ஆம்புலன்சுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த பயணிகளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறையில் இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
- வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர்.
அன்னூர்:
அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அன்னூர், கஞ்சப்பள்ளி, கரியாம்பாளையம், பொங்கலூர், கணேசபுரம், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் கரியம்பாளையம் பகுதியில் எல்லப்பாளையம் அடுத்த காலனியில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. இதையடுத்து மழைநீர் வீடுகளுக்கு உள்ளேயே பெய்யத் தொடங்கியது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதேபோல் கணேசபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனர் ஒன்று காற்றில் தூக்கி வீசப்பட்டு அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மின் கம்பத்தின் மீது உரசி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்தினர்.
மேலும் கணேசபுரம் சங்கீத் மில், கரியாம்பாளையம், நல்லிசெட்டிபாளையம், எல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் கணேசபுரம், காட்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர். கனமழையின் காரணமாக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின் ஒயர்கள் சேதமடைந்ததால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.
கோவை:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன்-பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள்.
இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் கவிதா தமிழில்-95, ஆங்கிலத்தில்-98, கணிதத்தில்-94, அறிவியலில்-89, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
கனிகா தமிழில்-96, ஆங்கிலத்தில்-97, கணிதத்தில்-94, அறிவியலில்-92, சமூக அறிவியலில்-95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்கள் கணித பாடத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கவிதா, கனிகா ஆகியோர் கூறியதாவது:-
எங்களின் தந்தை தேவாலயத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் நாங்கள் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆசிரியர்கள் எங்களுக்கு நன்கு உதவினார்கள்.
நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள். கல்விக் கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
மருத்துவராகி சேவை செய்வதே எங்களின் கனவு. இதனால் பிளஸ்-1 வகுப்பில் 2 பேருமே உயிரியல் கணிதம் பாடப்பிரிவை எடுக்க உள்ளோம். மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் எங்களது அடுத்த இலக்கு.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கடுமையான தாக்குதலுக்கு ஆளான எனது மகளால் நிற்க கூட முடியவில்லை.
- சிறுமியை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவரது உறவுப்பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தையும், தாயும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பு இருந்தார்.
சிறுமியின் தந்தை பொள்ளாச்சியில் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் அருண்குமார் என்பவரிடம் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்துக்கு சிறுமியும் வேலைக்கு சென்றார். அப்போது நிறுவன உரிமையாளர் அருண்குமார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் அருண்குமாரின் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது எனது மகளுக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக எனது மகள் அங்கு வேலையை விட்டு நின்று விட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார்.
அங்கு எனது மகள் மீது திருட்டுப்புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜவுளிக்கடை நிர்வாகத்தினர் சிறுமியின் தந்தை பணியாற்றும் நிறுவன உரிமையாளரான அருண்குமாரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அருண்குமார் சிறுமியை நேரில் அழைத்து விசாரித்து உள்ளார். அவரது தந்தை முன்பே சிறுமியை அருண்குமார் பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதில் எனது மகளின் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.
கடுமையான தாக்குதலுக்கு ஆளான எனது மகளால் நிற்க கூட முடியவில்லை. தற்போது மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். படுகாயம் அடைந்த எனது மகளை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன். இதற்கு காரணமான தொழில் அதிபர் அருண்குமார் மற்றும் எனது கணவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிறுமியை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவரது உறவுப்பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தனக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக சிறுமி உறவுப்பெண்ணிடம் கூறி இருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் அனுசரித்து செல்லுமாறு கூறிஉள்ளார். மேலும் அருண்குமார் சிறுமியை தாக்கியபோது அவர் அடிக்க கம்பை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உறவுக்கார பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
- தனது காதலியை சூர்யா அபகரிக்க முயல்வதாக கருதினார்.
- சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்தனர்.
கோவை:
கோவை வெள்ளலூரில் புதிதாக பஸ்நிலையம் கட்டப்பட்டு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி அந்த பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போத்தனூர் போலீசார் வாலிபர் உடலை மீட்டு அவர் யார், அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். வாலிபரின் மார்பில் அபர்ணா எனவும், லவ் சிம்பளும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த விவரங்களை கொண்டு போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 21) என்பது தெரியவந்தது. இவரும், அவனியாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு வாலிபரான கார்த்திக் (21) என்பவரும் ஒரே பெண்ணுடன் பழகி வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் சூர்யாவை கோவைக்கு வரவழைத்து கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட சூர்யாவும், கார்த்திக்கும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் முதலில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். சூர்யாவுக்கு சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்ததால் அவர் அங்கு படிக்கச் சென்று விட்டார். கார்த்திக் கோவை பேரூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார்.
கார்த்திக் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சூர்யா பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி வீடியோகாலில் பேசி இருக்கிறார். அந்த பெண்ணுக்கு தெரியாமல் சில புகைப்படங்களையும் சூர்யா எடுத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இது கார்த்திக்கிற்கு தெரிந்து ஆத்திரம் அடைந்தார். தனது காதலியை சூர்யா அபகரிக்க முயல்வதாக கருதினார்.
இதனால் சூர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கு தனது நண்பர்களான கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நவீன்கார்த்திக், கிணத்துக்கடவைச் சேர்ந்த மாதேஷ் (21), போத்தனூரைச் சேர்ந்த முகமது ரபி (21) ஆகியோரின் உதவியை நாடினார்.
சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்தனர். பின்னர் கார்த்திக் பேரூரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சூர்யாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கார்த்திக்கின் நண்பர்கள் 3 பேரும் வந்தனர். முதலில் சூர்யாவுக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். மது குடித்ததில் போதையான சூர்யாவின் கை, கால்களை கட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து சூர்யாவின் உடலில் போதை ஊசி செலுத்தி உள்ளனர். இதில் சூர்யா மயக்கம் அடைந்துள்ளார். உடனே தலையணையால் அமுக்கி அவரை துடி, துடிக்க கொன்றுள்ளனர்.
சூர்யா உடலை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வீச முடிவு செய்து உடலை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். குப்பைக்கிடங்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடலை அங்கு வீச முடியவில்லை. அதன்பின்னர் அருகே உள்ள பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் நவீன்கார்த்திக், மாதேஷ், முகமது ரபி ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர்களில் நவீன்கார்த்திக், மாதேஷ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். முகமது ரபி, வாடகை மோட்டார்சைக்கிள் ஓட்டி வருகிறார்.
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் போதை ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் பெருமாள் 7-ந் தேதி அன்ன வாகனத்திலும், 8-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 9-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10-ந் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 11-ந் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள் புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14-ந் தேதி சேஷவாகன உற்சவம், 15-ந் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.
- கோர்ட்டுக்குள் வக்கீல்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
- பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கும் மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண்கள் பாலி யல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27) சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரன்பால் (29), பாபு என்ற மைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் 2021-ம் ஆண்டு கைதானார்கள்.
இவர்கள் 9 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோவை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கைதானவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
அதன்பிறகு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு, நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்காக சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியமும் அளித்தனர்.
இந்த வழக்கில் ஒவ்வொரு வாய்தாவின் போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் ஜெயிலில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவும், நேரிலும் நீதிபதி முன்பு ஆஜராகி வந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தனர். இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம்28-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்து நிறைவு பெற்று விட்டது. எனவே மே 13-ந் தேதி (அதாவது இன்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி கோவை மகிளா கோர்ட்டில் இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் இன்று காலை சேலம் மத்திய ஜெயிலில் இருந்து போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டன. கோர்ட்டுக்குள் வக்கீல்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நீதிபதி நந்தினி தேவி, வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அவர் தீர்ப்பு கூறினார். 9 பேர் மீதான தண்டனை விவரம் இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பின்னர் மதியம், நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். பெண்களுக்கு இழைக்கப்பட்டது கொடும் குற்றமாகும். எனவே குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள்தண்டனை விதிப்பதாக கூறி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கும் மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 2-வது குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 3-வது குற்றவாளியான சதீசுக்கு 3 ஆயுள் தண்டனையும், 4-வது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், 5-வது குற்றவாளியான மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், 6-வது குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள்தண்டனையும், 7-வது குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், 8-வது குற்றவாளி அருளானந்தம், 9-வது குற்றவாளி அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை முன்னிட்டு கோவை கோர்ட்டு வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு கோவை மகிளா கோர்ட்டில் இன்று வழங்கப்பட்டது.
- பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.
மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுவதற்காக சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்திற்கு வந்தார். இதையடுத்து கைதான 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் வெளியாகாத வகையில் மகளிர் கோர்ட் அறைக்கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டோர், வழக்கு தொடர்புடையோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
நீதிபதி நந்தினி தேவி அளித்த தீர்ப்பில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 நபர்களையும் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் 9 பேருக்கும் தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குற்றவாளிகள் 9 பேரின் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை விவரம்:
திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசருக்கு 5 ஆயுள் தண்டனை, சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, ஹெரன்பால் 3 ஆயுள் தண்டனை, அருளானந்தம், அருண்குமார், பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.






