என் மலர்tooltip icon

    சென்னை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆபத்து நேரிட்டால் இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
    • சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல் துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி கியூ.ஆர். குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கியூ.ஆர்.குறியீடுகளை வழங்கினார்.

    சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட் டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் 88,859 தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான கியூ.ஆர். குறியீட்டை உருவாக்கியுள்ளது.

    இந்த கியூ.ஆர்.குறியீடு ஆட்டோ வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், எஸ்.ஒ.எஸ். பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும், இது ஆட்டோவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதி செய்யும் வசதியும் இதில் உள்ளது.

    இப்புதிய கியூ.ஆர்.குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிய வருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின் போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது.

    அவசரநிலை ஏற்பட்டால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை காவலர்களால் வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும்.

    பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய கியூ.ஆர். குறியீடு உறுதி செய்கிறது. இதன் மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கலந்து கொண்டனர்.

    • திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை எடுப்பதில்லை.
    • இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    "மரம் அமைதியை விரும்பலாம். ஆனால் காற்று ஓய்ந்து போகாது." நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, இந்த தொடர் கடிதங்களை எழுத எங்களைத் தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான்.

    அவர் தனது இடத்தை மறந்து, ஒரு முழு மாநிலத்தையும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளும்படி மிரட்டத் துணிந்தார், இப்போது அவர் ஒருபோதும் வெல்ல முடியாத போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். தமிழ்நாடு சரணடையும்படி மிரட்டப்படாது.

    மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்கும் தமிழ்நாடு, அதன் பல இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது, இந்த கொள்கை 2030-க்குள் மட்டுமே அடைய வேண்டும். இது ஒரு எல்.கே.ஜி. மாண வர் பி.எச்.டி. பட்டதாரிக்கு விரிவுரை வழங்குவது போன்றது.

    திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அது தேசம் பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது.

    இப்போது பா.ஜ.க.வின் மூன்று மொழி சூத்திரத்திற்கான சர்க்கஸ் போன்ற கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு சிரிப்புப் பொருளாக மாறிவிட்டது. 2026 சட்ட மன்றத் தேர்தலில் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக ஆக்கிக் கொள்ளவும், இந்தி திணிப்பு குறித்த பொது வாக்கெடுப்பாக இதை மாற்றவும் நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.

    வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர் மற்றும் தி.மு.க.வுடன் இணைந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.

    திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் வரை, இந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு இந்தி திணிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் குமட்டல்.

    இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும், பாதுகாப்பு அரணாக நின்றது தி.மு.க.தான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோட்டத்தின்கீழ் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தபால் நிலையங்களிலும் செல்வமகள் திட்டக்கணக்கை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    கோவை:

    பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி திட்டக்கணக்குக்கு 8.2 சதவீதம் வட்டி மற்றும் வருமான வரிச்சட்டப்பிரிவு 80 சி-யின்படி, ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதனால் செல்வமகள் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பத்தூர் திருப்பூர் ஆகிய அஞ்சல் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அங்கு பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வெள்ளிக்கிழமைதோறும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க, கோட்டத்தின்கீழ் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் கிளை அஞ்சலகங்கள் தவிர அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் திட்டக்கணக்கை தொடங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து கோவை மேற்கு மண்டல தபால்துறைத்தலைவர் சரவணன் கூறுகையில், கோவை மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 8.1 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் மத்திய அரசிடம் ரூ.4522 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    • கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.
    • பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்டம், பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்ன சைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களிமண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.

    இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிகாலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    • பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'.
    • அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணின் விடுதலையைப் பறைசாற்றியதில் மகாகவி பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. பெண்ணின் விடுதலைக்காக அவர் எழுச்சியூட்டும் வகையில் பாடிய பாடல் வரிகளை உள்வாங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.

    "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையிலான பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் கமாண்டோ படை. பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம். மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு. நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம். மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம். அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம். பெண் உடல் எடை பரிசோதனைத் திட்டம்.

    பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், மகப்பெறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது. பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது.

    பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம். அம்மாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தலாம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட 'காவலன் செயலி' திட்டம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்ச திட்டம்.

    இந்தியாவிலேயே, தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்ப தில் முதன்மையாகத் திகழ்ந்தவர் பஅம்மா தான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன்.

    இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணா கவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.
    • எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

    தமிழக அரசின் ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    * அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

    * அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

    * அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.

    * அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது.

    * வேலைநிறுத்தத்தை தூண்டும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

    * எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

    * சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வீடு வீடாக வந்து குறைகளைக் கேட்பார்கள்.
    • மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் வார்டு 99, நேரு பூங்கா எதிரில் இருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் நடைபெற்றது.

    குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, புடவை, கைலி, பெட்ஷீட், பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான இ.பரந்தாமன் நேரடியாக பொதுமக்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கட்சித் தலைவரும், முதல்வருமான சமூகநீதி தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கட்சியினர் மட்டுமே கொண்டாடினால் நன்றாக இருக்காது என்பதாலேயே பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறோம்.

    இது மக்களுக்கான, மகளிருக்கான ஆட்சி. அதனால்தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துவருகிறார் முதல்வர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் நிலவிவந்த பிரச்னைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

    இனி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து குப்பைகளைச் சேகரித்துச் செல்வர்.

    குடியிருப்பில் சாலை வசதியும் இனி மாநகராட்சியே மேற்கொள்ளும். குடிநீர், கழிவுநீர் பிரச்சனை இருந்தால் இனி மெட்ரோ வாட்டர் நிர்வாகமே நிவர்த்தி செய்து கொடுக்கும். இதற்கு மேலும் ஏதாவது தேவை இருந்தாலோ, பிரச்சனை என்றாலோ கவலைப்பட வேண்டாம்.

    சட்டமன்ற உறுப்பினரான என் சார்பில் வீடு வீடாக வந்து குறைகளைக் கேட்பார்கள். அரசின் திட்டங்களில் பயன்பெறுகிறீர்களா? ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கனுமா? எல்லா விவரங்களையும் எனது குழுவினர் கேட்டு, பதிவு செய்துகொள்வார்கள். அவற்றை சரிபார்த்து திட்டங்களில் இணையாத மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி இணைக்க இருக்கிறோம்.

    மேலும், கியூ.ஆர் கோடு உள்ள ஸ்டிக்கரும் உங்கள் வீட்டு கதவில் ஒட்டப்படும். அதனை ஸ்கேன் செய்தால், நேரடியாக என்னை அணுகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
    • கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.

    தமிழக பா.ஜ.க. சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று சென்னையில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், பா.ஜ.க., தி.மு.க.வினரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி போடப்படுகிறது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் கலை-கலாச்சார நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

    இந்த ஆண்டு பெண்களை மகிழ்விக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும் அதே வேளையில், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.

    ஆவடி ஓ.சி.எப். வளாகம் வி.வி.கே. மேனன் மாநாட்டு மையத்தில் எப்.டி.டி.எம்.ஏ. மற்றும் மகளிர் நலச்சங்கம் இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை காலை 9.30 மணி முதல் நடத்தப்படுகிறது.

    போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, வானகரம் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

    இந்த முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனை, மோமோகிராம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    எப்.இ.ஐ.எம்.ஏ. சார்பில் கே.டி.டி.சி. ரெயின்ட்ராப்ஸ் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியை அதன் தேசிய தலைவர் புருஷோத்தமன் தொடங்கிவைக்கிறார். இதில் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஷைலா தாஸ் கவுரவிக்கப்படுகிறார்.

    சென்னை கேரள சமாஜத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் மகளிர் தின விழாவில் நடிகை வாணி விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதில் கேரள சமாஜத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் 12 பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    சென்னை மகளிர் சங்கம் சார்பில் சேத்துப்பட்டு மலையாளி கிளப்பில் நாளை காலை மகளிர் தின விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த சேவைக்கான ரெயில்வே வாரிய விருது வென்றவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். மேலும் 2 பெண்களுக்கு விருதும் வழங்கப்படுகிறது.

    திருவொற்றியூர் எண்ணூர் பவுண்டரிஸ் ஊழியர்கள் சங்க மண்ட பத்தில் நாளை மாலை 3 மணிக்கு மகளிர் தின விழா நடைபெறுகிறது. இதில் இந்திய கூடைப்பந்து அணி கேப்டன், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

    அதில் சமூக ஆர்வலருக்கான யோஷஸ்ரீ விருது சத்திய தனகோடி என்பவருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பெண் துப்புரவு பணியாளர்கள் 25 பேர் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    மேலும் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி போடப்படுகிறது.

    தேனாம்பேட்டை கேசரி மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடை பெறுகிறது. கவிஞரும், மலையாள மிஷன் ஆசிரியை யுமான ராதாதேவி தலைமை தாங்குகிறார். கலாச்சார மாநாட்டை கேசரி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் டாக்டர் ஹரிணி தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    சாரதி அகாடமி மற்றும் மலையாளி கிளப் மகளிர் பிரிவு சார்பில் சமூக அநீதி களுக்கு எதிரான கவிதை, நடனம், பாடல் மூலம் கவிதைகள் எழுதிய பல்வேறு கவிஞர்களின் படைப்புகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி நடை பெறுகிறது. இந்த கண்காட்சி வருகிற 15-ந்தேதி மாலை நடைபெறுகிறது.

    பெருங்குடி கேரள சமாஜம் மகளிர் பிரிவு சார்பில் பெண்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நாளை காலை 11 மணி முதல் 2 மணி வரை சமாஜம் ஹாலில் நடக்கிறது. இதில் கண்புரை அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவச அறுவை சிகச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

    திருமுல்லைவாயல் விஸ்வகர்மா பவனில் 9-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கலாச்சார ஒன்று கூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதேபோன்று அனைத்து மலையாளி பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேற அமைப்புகள் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.பி.யாக பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்து சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

    மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும்.
    • மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

    சென்னை:

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    "ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பதுதான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும்.

    பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்" என கூறியுள்ளார்.

    ×