என் மலர்tooltip icon

    சென்னை

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய சி.எஸ்.கே. 190 ரன்களைக் குவித்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் மீண்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷேக் ரஷித் 11 ரன்னும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன் - பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேவிஸ் 32 ரன்னில் அவுட்டானார்.

    சாம் கர்ரன் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 47 பந்தில் 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பஞ்சாப் அணி சார்பில் 19வது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங், யான்சென் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்னும், நேஹல் வதேரா 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 6வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    • சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
    • இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில், " சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு" என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.

    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

    இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை தகர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இந்தியாவில் கடைசியாக 1931-ம் ஆண்டு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அண்மைக்காலத்திய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டியே பல சமூகங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. அந்த சமூகநீதிக்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவு கட்டும்.

    தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்பட வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டு காலமாக குரல் கொடுத்து வந்தது வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.

    45 ஆண்டுகளுக்கு முன் 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு நடத்தப்பட வேண்டும் என்பது தான்.

    அன்று தொடங்கி இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பல நூறு போராட்டங்கள், கருத்தரங்குகள், மக்கள் இயக்கங்கள் என ஏராளமான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது.

    வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 45 ஆண்டுகளில் இராஜிவ் காந்தி, வி.பி.சிங் , வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பலமுறை கடிதங்கள், கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் மருத்துவர் அய்யா அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகளுக்குத் தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது.

    அதேநேரத்தில் மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.

    2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.

    அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான்.

    இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில் 56 முதன்மை வினாக்கள், 19 துணை வினாக்கள் என மொத்தம் 75 வினாக்கள் எழுப்பி விவரங்கள் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

    அதற்காக 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.
    • போப் பிரான்சிஸ் அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போப் பிரான்சிஸ் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.

    போப் பிரான்சிஸ். அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்தாலும், அனைவராலும் போற்றப்பட்டவர், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

    இரு மதங்களுக்கு இடையேயான மோதல்களை நிறுத்தியவர் போப் பிரான்ஸிஸ்.

    மதங்களை கடந்த தன்மை அனைத்து மதங்களையும் ஒன்றாக கருதும் தன்மை கொண்டவர்.

    அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்ந்தவர்.

    அன்பு தான் மதங்களின் அடையாளமாக மாற வேண்டும் என்று விரும்பியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி.
    • மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனை வரவேற்கும் வகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், "சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை - மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?

    நேரம் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் கதையில் சமூகநீதி ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காக என்கிற வாடை வீசுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.

    புறநிலை கொள்கை வகுத்தல், இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம் - விருப்பத்திற்குரியது அல்ல. அநீதியை முதலில் அதன் அளவை அங்கீகரிக்காமல் சரிசெய்ய முடியாது.

    தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி. சாதி கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியவர்கள் நாங்கள்.

    இந்த நோக்கத்தை ஒவ்வொரு மன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம்.

    மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு யூனியன் பாடமாகும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    திராவிட மாதிரியின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.
    • பயிற்சி வகுப்பு மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).

    பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் கோடை கொண்டாட்டம் 2025 நடைபெறுகிறது.

    அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் விடுமுறைக்கால திருவிழா நடைபெறுகிறது. நாளை முதல் தொடங்கும் இத்திருவிழாவில் 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    அதன்படி, மே-1 நாளை சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் மற்றும் சக்திவேல் சார்பில் பாரம்பரிய விளையாட்டுகள், கதை செல்லுதல் மற்றும் மாயாஜாலக் காட்சி நடைபெறுகிறது.

    மே 2- இந்திரதானு வால்டோர்ஃப் பள்ளியில் கலையின் மூலம் கதை செல்லுதல் நடைபெறுகிறது.

    மே 3- திருமிகு.பிரியசகி சார்பில் மாயக்குரல் கதை, மே 4- திருமதி மமதி சாரி சார்பில் மாயாஜால சாகசங்கள் மற்றும் பழமை ஞானம் நடைபெறுகிறது.

    மே 5- திருமிகு. அமல்ராஜ் ஓரிகாமி நடைபெறுகிறது. மே 6- திருமிகு, அமல்ராஜ் சார்பில் மாயக்குரல் கதை நடைபெறுகிறது.

    மே 7- திருமணி லட்சுமி தலைமையில் கிங் ஆப் ஆர்ட்டுடன் விளையாடலாம், மே 8- நூலகக் குழு சார்பில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

    இதேபோல், மே 9ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    மே 9ம் தேதி சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் சார்பில் பொம்மலாட்டம், காகித சிற்பி தலைமையில் கிரிகாமி.

    மே 11ம் தேதி கதைசொல்லி சதீஷ் சார்பில் கோமாளி நிகழ்ச்சி.

    மே 12ம் தேதி திருமணி கமர்கட்டு சக்தி சார்பில் பாரம்பரிய உணவுகள்.

    மே 13ம் தேதி கவுசல்யா பாரி, பத்மப்பிரியா சுரேஷ் மற்றும் சூர்யா காயத்ரி ஆகியோர் தலைமையில் கப் ஆப் கதை.

    மே 14ம் தேதி உமா சந்திரசேகரன் சார்பில் நினைவாற்றல் நுட்பங்கள்.

    மே 15ம் தேதி நூலகக் குழு சார்பில் ஓவிய போட்டி.

    மே 16ம் தேதி ஜெயகுமார் சார்பில் டிரம்ஸ் வகுப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    மேலும், மே 17ம் தேதி அறிவரசன் தலைமையில் அறிவியல் சோதனை.

    மே 18- சந்திரமோகன் தலைமையில் நாடகம்.

    மே 19- சுந்தரமூர்த்தி தலைமையில் நாட்டுப்புறக் கலைகள்.

    மே 20- விஜயராணி பிஜூ சார்பில் இலக்கியப் பரிசோதனைகள்.

    மே 21- விஜயலட்சுமி சார்பில் படங்கள் மூலம் விளையாட்டு.

    மே 22- நூலகக் குழு சார்பில் தமிழ் பாடல் போட்டி- பாரதியார், பாரதிதாசன் மற்றும் தேசப்பற்று பாடல்கள்.

    மே 23- நூலகக் குழு சார்பில் விவாத போட்டி, மகிழ்ச்சி தருவது இணையவழியில் படிப்பதா? வகுப்பறையில் படிப்பதா?.

    மே 24- முனைவர் சங்கர சரவணன் சார்பில் குழந்தைகள் வினாடிவினா நடைபெறுகிறது.

    மேலும், மே 25 முதல் மே 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மே 25- தாமோதரன் சார்பில் நகைச்சுவை அறிதல்.

    மே 26- அறிவரசன் சார்பில் அறிவியல் பரிசோதனை.

    மே 27- நீதிமணி சார்பில் கோமாறி நிகழ்ச்சி.

    மே 28- உமா கார்த்திகேயன் சார்பில் "பை"வரையும் கலை.

    மே 29- நூலகக் குழு சார்பில் மாறுவேடப் போட்டி.

    மே 30- நூலகக் குழு சார்பில் தமிழ் வார்த்தை விளையாட்டு.

    மே 31- நூலகக் குழு சார்பில் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடைபெறுகிது.

    இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

    இவற்றை தவிர, பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    அதன்படி, மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ரமேஷ் வைத்யா சார்பில் தமிழில் கதை எழுதுதல்.

    மே 12- 16ம் தேதி வரை விஷ்ணுபுரம் சரவணன் சார்பில் தமிழில் கதை சொல்லுதல்.

    மே 12- 16 வரை விஜய் ஆனந்த் சார்பில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி திரைப்படம் தயாரித்தல்.

    மே 19- 23ம் தேதி வரை சுரேந்தர் சார்பில் பாவனை நாடகம், தாமோதரன் தலையைில் ஆங்கிலத்தில் கதை எழுதுதல்.

    மே 26- 30ம் தேதி வரை விஷ்வநாதன் தேவராஜ் சார்பில் கார்ட்டூன் தயாரித்தல் நடைபெறுகிறது.

    கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.

    மே 7- பொம்மலாட்டம், மே 10- பாசப் பயணம் நாடகம், மே 17- நாட்டுப்பற நடனம், மே 24- பாவனை நாடகம் நடைபெறுகிறது.

    பயிற்சி வகுப்பு:

    மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).

    மே 1- 10ம் தேதி முதல் மே 11- 20ம் தேதி வரை ரோபோடிக்ஸ் குழு- 1 மற்றும் 2 (மாலை 4 மணி முதல் 6 மணி வரை).

    மே 5- 14ம் தேதி முதல் நாட்டுப்புற நடனம் (காலை 10.30 மணி முதல்- 12.30 மணி வரை), மே 5- 14ம் தேதி வரை நாடகப் பயிற்சி (காலை 10.30 மணி முதல்- பிற்பகல் 12.30) வரை நடைபெறுகிறது.

    • மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிப்பு.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார்.

    அப்போது, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றார்.

    மேலும் அவர், "சுமார் 93 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் சாரிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை வரவேற்கிறேன்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.

    அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு கைவிட்டுவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

    தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

    சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அதிமுக

    சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம்.
    • விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என கொலை மிரட்டல்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    • நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை.
    • ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களின் ஒருவன் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:-

    'தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு' என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலி மை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறி விக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.

    எல்லார்க்கும் எல்லாம் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அவர்களுக்கான நியமனப் பதவிகளை உருவாக்கும் வகையில் இரண்டு சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவையும் உங்களில் ஒருவனான நான் பேரவையில் கொண்டு வந்து அவற்றைச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதை வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

    அப்போது பார்வையாளர்கள் மாடத்திலிருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்த காட்சி இன்றும் மனதில் நிறைந்தி ருக்கிறது.

    ஆட்சிச் சக்கரத்தைச் சுழல வைக்கும் கைகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே தனி அக்கறை கொண்ட இயக்கமாகும். முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகத்தினால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், நிதி நிலையைச் சீர் செய்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை திராவிட மாடல் அரசு நிறைவேற்றும் என்று உத்தரவாதம் அளித்திருந்தேன். மாநில அரசின் சொந்த நிதி வருவாயினைப் பெருக்கி, அவர்களின் 9 முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் மேலும் பயன் கிடைக்க வேண்டிய தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்டுள்ளேன். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன.

    நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதுடன், ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற இதயப்பூர்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளோம்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்சினையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.

    அனல் பறக்கும் வாதங்களில் கடுஞ்சொற்கள் எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும், அந்த நிலை தொடரக் கூடாது என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.

    கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.

    ஆம்.. நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள்.

    ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். "மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க என்பது தமிழ் நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மன சாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! மக்களின் பேராதரவுடன் தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    இதனால் இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே, இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.
    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில், மண்டல தலைவர் நேதாஜி கணேசன் பேசும்போது, நேதாஜி நகர், 1, 2 மற்றும் மெயின் தொகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அங்கு விரைவாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.

    இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கொருக்குபேட்டை மேம்பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்றார். கவுன்சிலர் கதிர் முருகன் (அ.தி.மு.க.) கூறும்போது குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் பிழைகள் இருப்பதால் பள்ளியில் சேர்ப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றை சரி செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    அதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், மருத்துவமுகாம் நடத்துகின்றபோது அதனுடன் சேர்ந்து பிறப்பு - இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

    ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில் வெளிப்புற இடங்களில் தூசி, குப்பைகள் பரவுவதை தடுக்க தகரம், உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் தூசி, துகள்கள் பரவுவதை தடுக்க துணி, தார்ப்பாய், பச்சை வலையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

    கட்டுமானத்தின்போது உருவாகும் எந்த ஒரு கழிவு பொருட்களையும் திறந்த வெளியில் காற்றில் பரவுவதை தவிர்க்க மூடப்பட்ட தட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 18 பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட தளங்களில் வழிகாட்டு மீறுதல்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 300 ச.மீ. மேல் 20 ஆயிரம் ச.மீ. பரப்பளவில் உள்ள தளங்களுக்கு ரூ.25 ஆயிரமும், 300 ச.மீ. முதல் 500 ச.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தளங்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மழைக் காலங்களில் ஓட்டேரி நல்லா நீர்வழி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி சீராக செல்ல இந்த கால்வாய்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓட்டேரி நல்லா கால்வாய் பணிக்கு ரூ.65 கோடியும், விருகம்பாக்கம் கால்வாய்க்கு ரூ.30 கோடியும் செல்வாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மதிப்பீட்டுத் தொகை ரூ.95 கோடிக்கு அரசின் அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

    தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட உஸ்மான் சாலையில் கட்டப்பட்டு உள்ள புதிய மேம்பாலத்திற்கு மறைந்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பெயரை சூட்டுவது, 'மாமேதை கார்ல் மார்க்ஸ்' சிலையை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்க அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தடையில்லா சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தீர்மானம் உள்பட 236 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
    • அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து அளித்தும் உபசரித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்து வருகிறார்.

    இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அவர் விருந்து அளித்தும் உபசரித்தார்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (2-ந்தேதி) ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை மக்கள் மத்தியில் விளக்கி கூறியும் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி பிறப்பிக்க உள்ளார்.

    கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சி பணியாற்றவேண்டும் என்றும் அப்போதுதான் கூட்டணி பலத்துடன் நாம் ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் நாளைய கூட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி பல்வேறு கருத்துகளை தெரிவிக்க இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
    • சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு குடும்பத்துடன் சென்ற அஜித் நேற்று மாலை சென்னை திரும்பினார்.

    இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திடீரென ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்தபோது, நடிகர் அஜித் பத்மபூசன் விருது பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி கடந்து சென்றார்.

    இந்த நிலையில் காயம் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என கூறினர்.

    ×