என் மலர்
நீங்கள் தேடியது "Caste Survey"
- சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
- இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில், " சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு" என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை தகர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இந்தியாவில் கடைசியாக 1931-ம் ஆண்டு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலத்திய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டியே பல சமூகங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. அந்த சமூகநீதிக்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவு கட்டும்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்பட வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டு காலமாக குரல் கொடுத்து வந்தது வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.
45 ஆண்டுகளுக்கு முன் 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு நடத்தப்பட வேண்டும் என்பது தான்.
அன்று தொடங்கி இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பல நூறு போராட்டங்கள், கருத்தரங்குகள், மக்கள் இயக்கங்கள் என ஏராளமான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 45 ஆண்டுகளில் இராஜிவ் காந்தி, வி.பி.சிங் , வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பலமுறை கடிதங்கள், கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் மருத்துவர் அய்யா அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகளுக்குத் தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது.
அதேநேரத்தில் மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.
2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.
அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான்.
இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில் 56 முதன்மை வினாக்கள், 19 துணை வினாக்கள் என மொத்தம் 75 வினாக்கள் எழுப்பி விவரங்கள் பெறப்பட்டன.
தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
அதற்காக 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி.
- மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை வரவேற்கும் வகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், "சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை - மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?
நேரம் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் கதையில் சமூகநீதி ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காக என்கிற வாடை வீசுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.
புறநிலை கொள்கை வகுத்தல், இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம் - விருப்பத்திற்குரியது அல்ல. அநீதியை முதலில் அதன் அளவை அங்கீகரிக்காமல் சரிசெய்ய முடியாது.
தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி. சாதி கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியவர்கள் நாங்கள்.
இந்த நோக்கத்தை ஒவ்வொரு மன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம்.
மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு யூனியன் பாடமாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாதிரியின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாமக-ன் நிலைப்பாடு.
- மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது!
இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக 1998-ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாமகவின் கோரிக்கையை ஏற்று 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 24.10.2008-ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பா.ம.கவைச் சேர்ந்த அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ் 140-க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துப் பெறப்பட்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதனடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட மன்மோகன்சிங் அரசு, அதன்பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை வெளியிடவில்லை.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் நான் நேரில் வலியுறுத்தினேன். மூன்று முறை கடிதம் எழுதினேன். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.
பா.ம.க.வின் முயற்சியால் கடந்த மூன்று முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமாகி கடைசி நேரத்தில் கை நழுவிய நிலையில், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத் தான் இருக்கும் என்பதாலும், தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும் தமிழக அரசு 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ் மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே ( Caste Survey) எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாட்னா:
நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.
ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.
இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது.
பீகார் மாநில சட்டசபையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேறியது. இப்பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில், பாட்னா ஐகோர்ட்டு தடை விதித்தபோதிலும், பின்னர் தடையை நீக்கியது.
ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குவதே இதன் நோக்கம்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பீகார் மாநில அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சம் ஆகும். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் (இ.பி.சி.) 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 36 சதவீதம் ஆகும்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 27.13 சதவீதம் ஆகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர்.
எஸ்.சி. பிரிவினர் 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 19.65 சதவீதம். எஸ்.டி. பிரிவினர் 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 1.68 சதவீதம் ஆகும்.
இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 15.52 சதவீதம் ஆகும்.
மதரீதியாக இந்துக்கள் 81.99 சதவீதமும், முஸ்லிம்கள் 17.70 சதவீதமும் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் இணைந்து ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மொத்த மக்கள்தொகையில் 14.27 சதவீதமாக உள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.






