search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste Survey"

    • சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

    பாட்னா:

    நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.

    ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

    இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது.

    பீகார் மாநில சட்டசபையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேறியது. இப்பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில், பாட்னா ஐகோர்ட்டு தடை விதித்தபோதிலும், பின்னர் தடையை நீக்கியது.

    ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குவதே இதன் நோக்கம்.

    இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பீகார் மாநில அரசு நேற்று வெளியிட்டது.

    அதன்படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சம் ஆகும். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் (இ.பி.சி.) 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 36 சதவீதம் ஆகும்.

    இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 27.13 சதவீதம் ஆகும்.

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர்.

    எஸ்.சி. பிரிவினர் 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 19.65 சதவீதம். எஸ்.டி. பிரிவினர் 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 1.68 சதவீதம் ஆகும்.

    இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 15.52 சதவீதம் ஆகும்.

    மதரீதியாக இந்துக்கள் 81.99 சதவீதமும், முஸ்லிம்கள் 17.70 சதவீதமும் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் இணைந்து ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.

    சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மொத்த மக்கள்தொகையில் 14.27 சதவீதமாக உள்ளனர்.

    சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    ×