search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvPBKS"

    • காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது சிக்கலானது.
    • விக்கெட் கைப்பற்ற வேண்டிய தருணத்தில் 2 பவுலர்கள் மட்டுமே இருந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்னே எடுக்க முடிந்தது.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 24 பந்தில் 29 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், ரபடா, அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பேர்ஸ்டோ 30 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூசோ 23 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது தோல்வியை தழுவியது. இந்த தொடரில் சேப்பாக்கத்தில் 2-வது தோல்வி ஏற்பட்டது.

    இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏற்றதாக இல்லை. மேலும் பனியும் இருந்தது. இதனால் ஆடுகளத்தின் தன்மை மாறியது.

    பயிற்சியின் போது 'டாஸ்' போட்டு பழகுகிறேன். அதில் வெற்றி கிடைக்கிறது. ஆனால் களத்தில் டாசை இழந்து விடுகிறேன். இதனால் டாஸ் போட வரும் போது அழுத்தத்தில் உள்ளேன்.

    கடந்த போட்டியில் இதே ஆடுகளத்தில் ஐதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆச்சரியமே. கடந்த 2 ஆட்டங்களில் ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. 200 ரன்னுக்கு மேல் குவித்து எதிர் அணிக்கு சவால் கொடுத்தோம். இந்தப் போட்டியில் 180 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது.

    காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது சிக்கலானது. விக்கெட் கைப்பற்ற வேண்டிய தருணத்தில் 2 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். பனி பொழிவு காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவால் ஏற்பட்டது. இது கடினமானதுதான்.

    எங்களுக்கு இன்னும் 4 ஆட்டம் இருக்கிறது. வெற்றி பாதைக்கு நாங்கள் திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். அவர் இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் 9 முறை டாசில் தோற்றுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை மீண்டும் சந்திக்கிறது. இந்தப் போட்டி வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) 3.30 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி 10 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் அணி 8 புள்ளியுடன் 7-வது இடத்திலும் உள்ளன.

    • இன்று மதியம் தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
    • சென்னை அணி இதுவரை 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

    சென்னை:

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    இந்தத் தொடரில் இதுவரை சென்னை அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

    தொடர்ந்து 4 அரைசதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர் டேவான் கான்வே, அதிரடியாக ஆடி வரும் ரகானே ஆகியோர் கடந்த போட்டியில் சோபிக்காமல் போனது பின்னடைவாக அமைந்தது. பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே (14 விக்கெட்) கலக்கி வருகிறார். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா (11), மொயீன் அலி ( 7) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    முந்தைய லீக் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து மீளூம் உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

    ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியின் பேட்டிங் நிலையற்றதாக இருக்கிறது. கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை.

    பந்துவீச்சில் ராகுல் சாஹர் தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அத்துடன் உள்ளூர் சூழல் சென்னை அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும்.

    வெற்றிப் பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் இரு அணிகளும் மல்லுக்கட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

    பஞ்சாப் கிங்ஸ்:

    பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), அதர்வா டெய்ட், சிகந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ராகுல் சாஹர், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு (42-வது) லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டித் தொடரில் இது ஆயிரமாவது ஆட்டமாகும். வலுவான ராஜஸ்தான் அணியை அடக்க வேண்டும் என்றால் மும்பை அணி தனது உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் முடியும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கை ஓங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • இந்தப் போட்டி 30ம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது.

    சென்னை:

    16வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்கலில் நடைபெற்று வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி நடக்கிறது. இந்த ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×