என் மலர்tooltip icon

    சென்னை

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,610-க்கும் சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்போது விலை குறைந்து விற்பனையாவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • மகேஷ் குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • நேபாளை சேர்ந்த ரமேஷ் மனைவி, குழந்தையுடன் வீட்டின் பின்புறம் வசித்து வந்த நிலையில் தலைமறைவாகி உள்ளார்.

    சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    மகேஷ் குமார் வீட்டிற்கு காவலாளியாக கடந்த மார்ச் மாதம் நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலைக்கு சேர்ந்து உள்ளார். காவலாளி ரமேஷ் அவரது குடும்பத்துடன் மகேஷ் குமார் வீட்டின் பின்புறம் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் மகேஷ் குமார் தனது மனைவியுடன் வேலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று உள்ளார். கோவிலில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவிலிருந்து 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    மகேஷ் குமார் உடனடியாக வீட்டின் பின்புறம் வசித்து வந்த காவலாளி ரமேஷை தேடி உள்ளார். காவலாளி குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

    நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் மகேஷ் குமார் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் சோதனை நடத்தி ஆய்வு செய்தனர். மேலும் தப்பி சென்ற நேபாள நாட்டை சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர்.

    • மாதவரத்தில் இருந்து 16-ந்தேதி 24 பஸ்களும், 17-ந்தேதி 100 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகிறது.
    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 570 பஸ்களும், 17-ந்தேதி (சனிக்கிழமை) 605 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 16-ந் தேதி வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், 17-ந்தேதி சனிக்கிழமை 90 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதவரத்தில் இருந்து 16-ந்தேதி 24 பஸ்களும், 17-ந்தேதி 100 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகிறது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1.00, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் 17-ந்தேதி காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1.00, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10, மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30, 3.15, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
    • அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னையின் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தினமுன் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் தாய்மார்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில், "குழந்தைகளுடன் பயணம் செய்கிறீர்களா? சென்னையின் முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வசதியான உணவு அறைகளை அனுபவியுங்கள். அம்மாக்களுக்கு ஒரு தனிப்பட்ட மற்றும் அமைதியான இடத்தை வழங்குகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.
    • கடந்தாண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு.

    கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37).

    கடந்த ஆண்டு மே மாதம் ஜான்ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான்ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான்ஜெபராஜ் மீது கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜான்ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஜான்ஜெபராஜை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.

    இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜான்ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனால் அவரை தேடி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

    மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று போலீசார் ஜான்ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.

    இவ்வாறு ஜான்ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மூணாறு சென்று ஜான்ஜெபராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும்.
    • 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் கல்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு, தமிழ் நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிமற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.

    வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் TU-01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் (S-1331) வழித்தடம் 3-ல் (up line) அயனாவரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று (13.05.2025) பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.

    அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும், இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் S 1331 பெரம்பூர் ரெயில்வே நிலையத்தின் பாதைகள் / நிலையங்களை மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்றபெரும் சவால்களையும், 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.

    இந்நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் டாடாப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராணுவ கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பாஜக மந்திரி குன்வார் விஜய் ஷா கூறினார்.
    • கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை என தமிமுன் அன்சாரி கூறினார்.

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ராணுவ கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி எனப் பேசிய ம.பி. பாஜக மந்திரி குன்வார் விஜய் ஷாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நமது ராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் உயர் ராணுவ அதிகாரியை இழிவுபடுத்தும் வகையில், அவரை மதத்துடன் தொடர்புப்படுத்தி, எதிரி நாட்டின் மகள் என்று கூறக்கூடிய அளவிற்கு பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது. தேசப்பற்றை அரசியல் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு, கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை.

    என அன்சாரி கூறினார்.

    • ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • முதலமைச்சர் பங்கேற்ற அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நாளை முதல் (15ம் தேதி) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.

    மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றுள்ளார்.

    தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தனர். 

    அங்கு, தெப்பக்காடு யானைகள் முகாமில் ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

    வன சரகர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.93 கோடி மதிப்பிலோன 32 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

     இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆனால், இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. அவரது துறை சார்ந்த முக்கிய நிகழ்வில் கூட ராஜகண்ணப்பன் பங்கேற்காதது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இலாகாக்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடித்து வரும் ராஜகண்ணப்பன், முதலமைச்சர் பங்கேற்ற அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜகண்ணப்பனும், சர்ச்சையும்..!

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணியாற்றிய ராஜேந்திரன் என்பவரை தனது வீட்டிற்கு வரச்சொன்ன அமைச்சர், அங்கு அவரை அவரது ஜாதியைச் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் ஊடகங்களிடம் குற்றம்சாட்டினார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறையில்லை. தீபாவளிக்கு முன்பாக, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை வாங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அமைச்சர் பதவியில் இருக்கும் ராஜகண்ணப்பன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், முதல்வர் கோப பார்வையில் இருந்து தப்ப முடியாது என பலரும் கருதினர்.


    ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சர்ச்சையில் சிக்கியும் ராஜகண்ணப்பனுக்கு இலாகா மட்டுமே மாறி வருகிறது. அதை மீறி எந்தவித நடவடிக்கையும் அவர் மீது இல்லை.

    இது ஒருபுறம் இருக்க.. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பங்கேற்காதது திமுகவின் சீனியர் அமைச்சர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ராஜகண்ணப்பன் வரலாறு..!

    தனது அரசியலின் ஆரம்பக்கட்டத்தில் அதிமுகவில் இருந்தவர் ராஜகண்ணப்பன். 1991ம் ஆண்டு அதஇமுகவில் இருந்தபோது திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1991- 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

    பிறகு, மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை தொடங்கிய ராஜகண்ணப்பன். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006ம் ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

    2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.

    2009ம் ஆண்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலக மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தோல்வியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் திமுகவில் இணைந்தார்.

    2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு 1,01,901 வாக்குகள் பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     

    2021ம் ஆண்டு மே 7ம் தேதி அன்று போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

    பிறகு, 2022ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டார்.

    தொடர்ந்து, மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் ராஜகண்ணப்பனுக்கு பால்வளத் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

    சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் வனத்துறை மற்றும் காதி துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    • பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
    • உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் அவர் செய்த கேவலமான சாதனை.

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்நிலையில் பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என திமுக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என்று பெருமை பேசுகிறார் பழனிசாமி. உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் அவர் செய்த கேவலமான சாதனை.

    அமித்ஷாவைப் பார்க்கப் போகிறேன் என்பதைச் சொல்லக்கூட திராணி இல்லாமல், டெல்லியில் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாரே கோழைசாமி, அதுதான் Original பித்தலாட்டம்.

    என ரகுபதி கூறினார்.

    • ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
    • மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!

    பொள்ளாச்சி வழக்கில் கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அதிமுக அரசு; விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? என்று ஊட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (கொடுத்துள்ளார்.

    பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி!

    கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு!

    கொடும் குற்றம் புரிந்தகேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?

    தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.

    அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.

    திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!

    ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக.

    நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.

    மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்!

    இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    இது தானே OG பித்தலாட்டம்?

    மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம்.
    • இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும்!

    ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம். இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, 'வக்ஃப் என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் (waqt by user) மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது' என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

    பின்னர் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த நிறுத்திவைப்பு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    குறிப்பாக, நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு. அபிஷேக் சிங்வி அவர்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார்.

    மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமைச் சட்டங்களும் நேரடியாகக் கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். எனவே, இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

    இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் * சிலுக்குப் பதிலுரையைத் (Rejoinder) நமது தமிழக வெற்றிக் கழகம் நாக்கல் செய்துள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை, நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. அந்தப் பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம். அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

    வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போது புதிய வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாகிவிட்டது.

    இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா?

    வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?

    சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கேரள இடது முன்னணி அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மாநில அரசுகளுக்கான உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    அதுபோல், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை, உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலானத் தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு வாதங்களை முன்னிறுத்தி. தனியானதொரு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டாமா? அதை ஏன் இன்னும் செய்யவில்லை?

    வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.

    சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதைப்போன்று இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை!

    சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    ×