என் மலர்
சென்னை
- நாளை 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும்.
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுதினம் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
- ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், மசோதா ஒப்புதலுக்கு காலநிர்ணயம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,
* மாநில சுயாட்சியை காக்க அனைத்து மாநிலங்களும் உறுதிபூண வேண்டும்.
* இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு பாதுகாத்திட மாநில முதல்வர்கள் முன்வர வேண்டும்.
* ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
* ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சீர்குலைக்க வெளிப்படையாக பா.ஜ.க. முயற்சிக்கிறது.
* நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வர வேண்டும்.
* ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதிக்க ஆளுநர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
* மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப்போக்கை ஆளுநர்கள் கடைபிடித்தால் இந்த தீர்ப்பு உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
- மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில்,
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் திருவான்மியூர்- தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது.
- எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் மொத்தம் 7373 கோடி யூனிட் மின்சாரத்தை பல்வேறு ஆதாரங்களில் இருந்து ரூ.42,575 கோடிக்கு வாங்க மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால், மின்சார வாரியமோ, அதை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தைக் கூடுதலாக தனியாரிடமிருந்து வாங்கி உள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடியை தமிழ்நாடு மின்வாரியம் கூடுதலாக செலவழித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
சராசரியாக ரூ.5.57க்கு வாங்கப்பட வேண்டிய மின்சாரத்திற்கு ரூ.6.93 வீதம் விலை கொடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 என்ற குறைந்த விலைக்குத் தான் வாங்கப்படுகிறது.
கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கியிருந்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவற்றிடமிருந்து 4068.6 கோடி யூனிட்டுகள் மின்சாரத்தை வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட 7.42 சதவீதம், அதாவது 302 கோடி யூனிட் குறைவான மின்சாரத்தையே மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது.
அதேநேரத்தில், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சராசரியாக ரூ.9.41 என்ற விலையில், 442.8 கோடி யூனிட் மின் சாரத்தை மட்டுமே ரூ.4170 கோடி செலவில் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மின்வாரியமோ, அதே விலையிலான மின்சாரத்தை அனுமதிக்கப்பட்டதை விட, சுமார் 2 மடங்கு 860.6 கோடி யூனிட்டுகளை வாங்கியிருக்கிறது.
இந்த வகையில் மட்டும் ரூ.3783 கோடியை மின்வாரியம் கூடுதலாக செலவழித்துள்ளது. இது பற்றி உயர்நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
- தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
* த.வெ.க. தலைவர் விஜய்தான்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது.
* தி.மு.க.வுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது.
* தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.
- வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு பாராட்டு, புகழை பெற்று வருகிறது என்று அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
* உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.
* தமிழகம் முழுவதும் 5,427 கி.மீ. நீள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
* தமிழ்நாடு முழுவதும் 449 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் 62,820 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.
* மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளி, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்.
* வேர்க்கடலை, தென்னை, உற்பத்தி திறனில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.
2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
- கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.
இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.
கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து ரத்தீஸ் தலைமறைவாகி விட்டார்.
சென்னை:
தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம், 'டாஸ்மாக்' அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் இந்த உத்தரவை உறுதிப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை களத்தில் இறங்கி உள்ளனர்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டின் அருகே சாலையோரமாக சிதறி கிடந்த 'டாஸ்மாக்' மதுபான ஒப்பந்த நகல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சோதனைக்கு மத்தியில், விசாகனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதே வேளையில் அவரது வீட்டில் விடிய விடிய அதிகாரிகள் சோதனை தொடர்ந்தது.
2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. விசாகனை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சூளைமேடு பகுதியில் வசிக்கும் 'டாஸ்மாக்' மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன், பெசன்ட் நகர் கற்பகம் கார்டனில் வசிக்கும் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர்களான தியாகராயநகரை சேர்ந்த கேசவன், ராயப்பேட்டையை சேர்ந்த தேவகுமார், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாபு, குமரன் காலனியில் வசிக்கும் இந்திரஜித் ஆகியோரது வீடுகளும் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியது.
இந்த இடங்களிலும் 2-வது நாளாக சோதனை நீடித்தது. இதில் மின்சார ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர் தேவகுமார் ஆகிய 2 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து குறுகிய காலத்தில் பட அதிபரான ஆகாஷ் பாஸ்கரனும் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையில் சிக்கினார். தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.
முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ரத்தீஸ் பெயரும் இந்த சோதனை பட்டியலில் இடம் பெற்றது. அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் அவருடைய வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து ரத்தீஸ் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்து பூட்டி, சாவியை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
- மீரான்குளம் சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றுக்குள் கார் பாய்ந்த கோர விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.
விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் இன்று நேற்று மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்ததில் 5 நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- நான் என்னுடய X வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன் .
என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் .
நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன்.
ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






