என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, அல்லிமேடு, மேட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு பகுதி.

    கிழக்கு முகப்பேர்: மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், 6-வது பிளாக் மெயின் ராடு, சாதல்வார் தெரு, வெள்ளாளர் தெரு பகுதி.

    குன்றத்தூர்: அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ்காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், தேவகி நகர், லட்சுமி நகர், தாய் சுந்தரம் நகர், கொல்லர் தெரு, விஜயராஜா நகர், வழுதாளம்பேடு கிராண்ட் சிட்டி.

    கே.கே.நகர்: காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகயா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்ரபாணி தெரு, சக்கரபாணி தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.

    கோவூர்: அம்பாள் நகர், ராம் நகர், அண்ணா தெரு, கங்காச்சி தெரு, ஆனந்த விநாயக தெரு, குன்றத்தூர் மணி ரோடு, அம்பேத்கர் தெரு.

    சோழிங்கநல்லூர் பிரிவு: கௌரிவாக்கம்- ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகர, வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம், பெல் நகர் 1 முதல் 5-வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு மெயின் ரோடு, பில்லாபாங் பள்ளி, வெள்ளம்மாள் பள்ளி, அல்ஃபாஸ் அவென்யூ, யுனைடெட் காலனி, சாய்ராம் நகர் மெயின் ரோடு மற்றும் பூங்கா, சித்தார்த் குடியிருப்புகள், அண்ணாமலை தெரு.

    ராஜகீழ்பாக்கம்: பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட்ராமன் தெரு, மாருதி நகர் 2-வது மெயின்ரோடு, வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

    திருவான்மியூர்: இந்திரா நகர், பெரியார் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, காமராஜ் நகர், எல்பி சாலை, திருவள்ளூர் சாலை, சாஸ்திரி நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏஜிஎஸ் காலனி, சுவாமிநாதன் நகர், களத்துமேட்டு பகுதி, பிடிசி காலனி, வெங்கடேசன் அவென்யூ, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர்.

    பல்லாவரம்: இந்திரா காந்தி சாலை, தண்டு மாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஓட்டல், மாலிக் தெரு, நாகரத்தின் தெரு, கண்ணபிரான் கோவில் தெரு, சென்னை சில்க்ஸ் ஒலிம்பியா மற்றும் அதுல்யா டவர்ஸ். 

    • மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.

    நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.
    • தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!

    முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.

    இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வருகிறார்.
    • பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை -மகனுக்குமான மோதலால் நிர்வாகிகள் பெரும் கவலையில் உள்ளனர். மோதலை தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அந்த வகையில், பா.ம.க. சமூகநீதி பேரவை தலைவராக இருந்த பாலுவை நீக்கி கோபுவை ராமதாஸ் அண்மையில் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வழக்கறிஞராக இருக்க தகுதியே இல்லாதவர் பா.ம.க. சமூகநீதி பேரவை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ராமதாஸால் நியமிக்கப்பட்ட கோபுவுக்கு வழக்கறிஞருக்கான எந்த தகுதியையும் பார்த்தது இல்லை என்று பனையூரில் நிர்வாகிகளுடனான ஆலோசனையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையாகிறது. இரு தினங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640

    08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-06-2025- ஒரு கிராம் ரூ.119

    10-06-2025- ஒரு கிராம் ரூ.119

    09-06-2025- ஒரு கிராம் ரூ.118

    08-06-2025- ஒரு கிராம் ரூ.117

    07-06-2025- ஒரு கிராம் ரூ.117

    • தரைத்தளத்திலிருந்து 7-வது தளங்கள் வரை சில்லறை விற்பனைக்கூடங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
    • சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.151 கோடியில் மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் சில்லறை, வணிக வளாகத்துடன் நவீனமயமாக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் ரூ.151 கோடியில் மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.

    கோபுரம்-A:

    * இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 184-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

    * தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை வணிக / அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன.

    கோபுரம்-B:

    * இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

    * தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை சில்லறை விற்பனை இடங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.

    • எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்படுகிறது.
    • இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரெயில்வே நிர்வாகம் தற்போது ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டு வருகிறது. இதனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், ரெயில்களை பிடிக்க தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் ரெயில்வே இறுதிப்பட்டியல் வெளியிடும் வரை தங்கள் டிக்கெட் நிலை குறித்து தெரியாமல் உள்ளனர்.

    ரெயில் பயணிகளிடையே நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பயணிகளுக்கு விரைந்து தகவல் செல்லும் வகையிலும் ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளுடன் கூடிய பயணிகள் அட்டவணைகளை வெளியிடுவதற்கான வழிமுறையை ரெயில்வே உருவாக்கி வருகிறது.

    இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்?
    • தொன்மத்துக்கு ஒரு நீதி தொன்மைக்கு ஒரு நீதியா?

    சென்னை:

    கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒன்றிய அமைச்சர்

    ஷெகாவத் அவர்கள்

    கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க

    இன்னும் அறிவியல் தரவுகள்

    தேவையென்று சொல்லித்

    தமிழர் பெருமைகளைத்

    தள்ளி வைக்கிறார்

    ஒரு தமிழ்க் குடிமகனாக

    அமைச்சர் அவர்களுக்கு

    எங்கள் அறிவின் வலியைப்

    புலப்படுத்துகிறேன்

    கீழடியின் தொன்மைக்கான

    கரிமச் சோதனைகள்

    இந்தியச் சோதனைச் சாலையில்

    முடிவு செய்யப்பட்டவை அல்ல;

    அமெரிக்காவில் ஃபுளோரிடாவின்

    நடுநிலையான

    சோதனைச் சாலையில்

    சோதித்து முடிவறியப்பட்டவை

    அதனினும் சிறந்த

    அறிவியல் தரவு என்று

    அமைச்சர் எதனைக் கருதுகிறார்?

    சில தரவுகள்

    அறிவியலின்பாற் பட்டவை;

    சில தரவுகள்

    நம்பிக்கையின்பாற் பட்டவை

    ராமர் என்பது ஒரு தொன்மம்

    அதற்கு அறிவியல்

    ஆதாரங்கள் இல்லை;

    நம்பிக்கையே அடிப்படை

    கீழடியின் தொன்மை என்பதற்கு

    அறிவியலே அடிப்படை

    ராமரின் தொன்மத்தை

    ஏற்றுக்கொண்டவர்கள்

    கீழடியின் தொன்மையை

    ஏற்றுக்கொள்ளாதது

    என்ன நியாயம்?

    தொன்மத்துக்கு ஒரு நீதி

    தொன்மைக்கு ஒரு நீதியா?

    தமிழர்களின் நெஞ்சம்

    கொதிநிலையில் இருக்கிறது

    தமிழ் இனத்தின் தொன்மையை

    இந்தியாவின் தொன்மையென்று

    கொண்டாடிக் கொள்வதிலும்

    எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை

    "தொன்று நிகழ்ந்த

    தனைத்தும் உணர்ந்திடு

    சூழ்கலை வாணர்களும் - இவள்

    என்று பிறந்தவள் என்றுண ராத

    இயல்பின ளாம் எங்கள் தாய்"

    என்ற பாரதியார் பாட்டு

    எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது

    மேலும் பல தரவுகள்

    சொல்வதற்கு உள்ளன

    விரிக்கின் பெருகுமென்று

    அஞ்சி விடுக்கிறோம்

    அங்கீகார அறிவிப்பை

    விரைவில் வெளியிட வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார். 



    • கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது.
    • கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது.

    சென்னை:

    ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டியை குறைக்கிறது என்ற செய்தியை அடிக்கடி பார்த்து இருப்போம். வட்டி என்றால் தெரியும். ஆனால் ரெப்போ வட்டி என்றால் என்ன? அது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுமக்களுக்கு வங்கிகள் வீட்டு கடன், தொழில் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்குகிறது. இந்த கடன் தொகையை, வங்கிகள் தங்களுக்கு வரும் முதலீட்டு (டெபாசிட்) தொகை மற்றும் வங்கியின் இருப்பு மற்றும் லாபத்தொகையில் இருந்து வழங்குகிறது. ஆனால் இந்த தொகை மட்டுமே போதாது. எனவே வங்கிகள், ரிசர்வ வங்கியிடம் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி தான் ரெப்போ வட்டி.

    வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டியும், சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டியும், ரெப்போ வட்டியை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ, நுகர்வோர் செலவுகள் குறைந்தாலோ, தொழில்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளானாலோ, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்கும்.

    இதன் மூலம் வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்து, கடன்களை அதிக அளவில் வழங்க உதவும். இதனால் பொதுமக்கள் வீடுகள் வாங்குவார்கள், தொழில்துறையில் முதலீடு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்றான ரெப்போ வட்டியை, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது. அதனை கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது. ரெப்போ வட்டி ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் 0.5 சதவீதம் அளவுக்கு வீட்டுகடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது.



    யாருக்கு லாபம்?

    உதாரணமாக 20 லட்சம் வீட்டு கடன், 20 ஆண்டு தவணையில் ஒருவர் 9 சதவீத வட்டியில் கடன் வாங்கி இருந்தால், அவரது மாதத்தவணை ரூ.17,995 இருக்கும். அது இப்போது 8.5 சதவீத வட்டியாக குறைக்கப்பட்டுள்ளதால் மாதத்தவணை ரூ.17,356 ஆக குறையும். இது மாதத்திற்கு ரூ.639 என்ற சிறிய தொகையாக தெரிந்தாலும், 20 ஆண்டுகளுக்கு இதனை கணக்கீடும் போது ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 133 லாபம் கிடைக்கும்.

    அதேபோல் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கும் 0.5 சதவீதம் குறைய உள்ளது. அதனால் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் முதிர்வு தொகை குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஒருவர் 7 சதவீத வட்டியில் 7 ஆண்டுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து இருந்தால், இந்த வட்டி இப்போது 6.5 சதவீதமாக குறைக்கும் போது முதிவு தொகையில் ரூ.27 ஆயிரத்து 496 நஷ்டம் ஏற்படும்.

    எனவே ரெப்போ வட்டி குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்பு செய்பவர்களுக்கு நஷ்டமாகவும் இருக்கும்.

    எனவே, ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றம் என்பது நமது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பொருளாதார முடிவாகும். இந்த வட்டி விகிதத்தின் உயர்வும், தாழ்வும், நமது செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை ஆகும்.

    • 8 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.

    வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த மாவட்ட கலெக்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.

    • பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
    • அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல!

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

    இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

    மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

    ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ

    அறிவாலயம் தலைவர்கள் காட்டாதது ஏன்?

    அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என்று கூறியுள்ளார். 



    • முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
    • வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக இருப்பதுதான் திராவிட மாடல்.

    இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை delivery செய்யும் gig ஊழியர்களுக்குக் கழிப்பறை, AC, charging point, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் Scandinavian வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் (lounge) முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style!

    வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் DravidianModel!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×