என் மலர்tooltip icon

    சென்னை

    • விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து அவர் தியானம் மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்காக கடந்த 15 நாட்களாக நாங்கள் அனைவரும் விரதம் இருந்து வருகிறோம். அதன் காரணமாக வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டோம்.

    ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரும் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து வருகிறார்.

    22-ந்தேதி தான் மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இன்றைக்கே மக்கள் மாநாடு நடைபெறும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அவர் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார். தற்போது நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். அவரைப் போலவே நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    பொதுமக்களுடைய ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்கிறது. பொதுமக்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



    நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை முருகரை பற்றி தான் பேசி வருகிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு பயங்கரவாதம் வரும், மத வெறி வரும் என்றெல்லாம் கூறுகிறார். மதம் குறித்து தொடர்ச்சியாக அமைச்சர்தான் பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகனை அவர்கள் ஆராதனை செய்தார்கள். தற்போது நாங்கள் ஆராதனை செய்கிறோம். இதில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து எது உண்மையான முருகன் மாநாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

    இப்பொழுது தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தொகுதியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பவன் கல்யாண் முருக பக்தர். அறுபடை வீடுகளுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டு சென்றிருக்கிறார். இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்ளக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? சாமி தரிசனம் செய்யக்கூடாதா?

    வேலை எடுத்து சுற்றியதின் விளைவாக சூரசம்காரம் நடைபெற்றது ஜெயிக்க வேண்டும் என்றால் இறைவன் பல அவதாரங்களை எடுப்பார். எடுக்கப்பட்டிருக்கிறது அதற்கான முடிவுகள் வெளியாகும். இந்த ஆட்சி நீட்டிக்கப்படுமா என்பதை முருகன் தான் முடிவு செய்ய வேண்டும்

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையே 20,000 ஆசிரியர்கள் இல்லையே முதலமைச்சரை நோக்கி ஏன் கேள்வி எழுப்பத் தயங்குகிறீர்கள்.

    டி.ஆர்.பி. தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள். மத்திய அரசின் நிதி தேவையில்லை நாங்கள் அரசாங்கத்தை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். மத்திய அரசை பகைத்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கொடுக்க முடியும்.

    தர்மங்கள் ஜெயிக்க வேண்டும். அதற்கு இறைவன் சிலர் அவதாரங்கள் எடுப்பார். அந்த வகையில் கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    • சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கடந்த ஏப்ரல் மாதம் புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கோடை காலத்தில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையிலும் கூட ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை. இந்த ரெயிலில் பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. 12 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3,798 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரெயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் முழு அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஏ.சி. மின்சார ரெயிலில் 50 சதவீத பயணிகள் கூட பயணம் செய்யவில்லை. சென்னையில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் விரைவில் 2-வது மின்சார ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு இல்லாமல் போனதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதே காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குஜராத்தில் உள்ள பூஜ் முதல் அஞ்சார் வரை இயக்கப்படும் வந்தே மெட்ரோ ரெயிலுடன் ஒப்பிடும்போது, அங்கு 42 கி.மீ. பயணத்திற்கு ரூ.55 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தாம்பரம் - கடற்கரை இடையே 30 கி.மீ. பயணத்திற்கு கட்டணம் ரூ.85 ஆக உள்ளது.

    10 கி.மீ. வரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மாதாந்திர சீசன் டிக்கெட் விலை ரூ.2,115 ஆகவும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ரூ.1,705 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு

    உள்ளது. ஏ.சி. மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை நீண்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதன் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாகும். இது தினமும் 10 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு குறுகிய சேவைகளாக இயக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலையில் நெரிசலான நேரங்களில், சாதாரண மின்சார ரெயில்களுக்கு இணையாக, கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளை வழங்க வேண்டும். கட்டணத்தையும் குறைத்து கூடுதல் ரெயில் சேவைகளை இயக்கினால் ஏ.சி. மின்சார ரெயில்கள் பயணிகளின் வரவேற்பை பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.
    • போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்.

    சென்னை:

    ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: பா.ம.க.வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தி.மு.க. தான் காரணம் என அன்புமணி பேசியிருந்தது குறித்து...

    பதில்: பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்.

    கேள்வி: அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே?

    பதில்: அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.

    கேள்வி: மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

    பதில்: போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார். 

    • கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்:

    சரவணன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக விஷ்ணு, ரவி, அருண் பிரசாத், நரேஷ், அரவிந்த், பிரிதீங்கா, கார்த்திக், சித்தர் பாண்டியன், மணிமேகலை, ஹரி, ஜெகதா, சினோரா P.S. மோஹித், தமிழினியன், விவேக் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். 



    • பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.
    • விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    * பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.

    * பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் இருக்க வேண்டும்.

    * விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    * காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    சென்னை:

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    நீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் போராட்டத்தில் நீங்கள் வலு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.



    • இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42 விழுக்காடு தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
    • தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இந்தியாவின் உற்பத்தி துறையின் மொத்த உற்பத்தியில் 11.9 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.

    * பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.

    * பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு

    * தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. தமிழகத்தின் மீதும் சென்னை மீதும் உலக நிறுவனங்கள் வைத்த மதிப்பின் வெளிப்பாட்டால் கண்காட்சியில் பங்கேற்பபோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * கடந்தாண்டு நடந்த கண்காட்சியில் 435 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    * தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோரில் பெண்களின் அளவு 30 விழுக்காடு. தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

    * இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42 விழுக்காடு தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    * தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலனுக்கு தி.மு.க. அரசு முக்கியமான பணிகளை செய்துள்ளது.

    * MSME-க்கு என தனிப்பட்ட பாலிசி, 4 ஆண்டில் மின் மானியம், ஊதிய மானியம் என ரூ.1000 கோடிக்கு மு மேல் மானியம் தரப்பட்டது.

    * தொடர்ந்து ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

    இன்று தொடங்கிய ACMEE 2025 சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
    • புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும்.

    சென்னை:

    'பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறந்த தமிழ் நாவல் "ஒற்றை சிறகு ஓவியா" படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான பால சாஹித்ய விருதுக்குத் தேர்வாகியுள்ள விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் மற்றும் தனது அற்புதமான தமிழ் சிறுகதை தொகுப்பான "கூத்தொன்று கூடிற்று மற்றும் பிற கதைகள்" என்ற படைப்புக்காக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு தேர்வாகியுள்ள லட்சுமிஹர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    இந்த மதிப்புமிக்க விருதுகள் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்கி, புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார். 



    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (20.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அடையாறு: பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, புலி வரதாச்சாரியார் தெரு, கடற்கரை சாலை, ருக்குமணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் குப்பம், பாலகிருஷ்ணா சாலை 2-வது வார்டு தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8-வது மெயின் ரோடு சாலை, 1 முதல் 54-வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத் சிங் சாலை 1 முதல் 6-வது தெரு, ஆர்.டி.ஓ. அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.

    வேளச்சேரி: பைபாஸ் 100 அடி ரோடு லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தேல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு.

    தாம்பரம்: இரும்பிலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.

    பல்லாவரம்: கீழ்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் அண்ட் ரோடு, ரேணுகா நகர், கேஎச் ஹவுசிங், வேம்புலி நகர், என்எஸ்கே நகர், ஜிபி மாதவன் தெரு.

    சோழிங்கநல்லூர்: சங்கராபுரம், கன்னி கோவில், சீதளபாக்கம் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி.

    • தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.

    நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தொட்டது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,265-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 122 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000

    17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600

    16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-06-2025- ஒரு கிராம் ரூ.122

    17-06-2025- ஒரு கிராம் ரூ.120

    16-06-2025- ஒரு கிராம் ரூ.120

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    14-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.

    • கீழடியிலும், சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம்.
    • வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் தி.மு.கழக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.

    மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள் - இளைஞர்கள் - இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 'கீழடி தமிழர் தாய்மடி' என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன்.

    கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2016 செப்டம்பர் 29 அன்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "கீழடியில் உள்ள கட்டடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு-சிகப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன. சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள்ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்கு கிடைத்துள்ளன" என்று பதிவிட்டு மகிழ்ந்ததுடன், "ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்திற்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்" என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.

    மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர், 2016-ஆம் ஆண்டிலேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். அதேவேளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.

    தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பா.ஜ.க. அரசு அப்பட்டமாகக் காட்டியது. எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2016-இல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ஆம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார்.

    கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் - உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமர்ப்பித்தார். இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல்.

    தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க., இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.

    அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.கவிடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை 'பாரத நாகரிகம்' என்று பா.ஜ.க. மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே!

    தமிழ் மொழி – பண்பாடு - தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தி.மு.க. ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய தலைமுறையினர் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.

    தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு 'ட்வீட்' போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் - கழக நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும் ஏவுகணைகளாக மாணவப் பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. மாணவப் பருவத்திலேயே கழகத்தில் ஒப்படைத்துக்கொண்டு, கழக மாணவரணிச் செயலாளராகவும் செயலாற்றியவராயிற்றே அவர்!

    ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உதவிய மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழக நிர்வாகிகள், மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ் காந்தியுடன் துணை நின்ற மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலையிலுமான கழக மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உங்களில் ஒருவனான என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

    தமிழர் நலனையும் தமிழின் பெருமையையும் காப்பதற்குக் கழகம் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைவழிக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள், கழகத்தின் சார்பில் பங்கேற்று முழக்கமிட்டு உணர்வை வெளிப்படுத்திய தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் திரு.எம்.அப்துல் ரகுமான் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ம.தி.மு.க கொள்கை விளக்க அணிச் செயலாளர் திரு.வந்தியத்தேவன் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது! என்று கூறியுள்ளார். 

    ×