என் மலர்
சென்னை
- மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என மறுப்பு.
- அவர் நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஆவார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுக பிரமுகரின் மனைவி எனக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
- 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
- மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை:
ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (13/08/2025) சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் 'மண் காப்போம் இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்று இக்கருத்தரங்கம் குறித்து பேசினர்.
சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மெகா பயிற்சி கருத்தரங்குகளும், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5 முதல் 10 வரையிலான ஒரு நாள் களப்பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனுடன் கோவை செம்மேடு மற்றும் திருவண்ணாமலையில் மண் காப்போம் இயக்கம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி இயற்கை பண்ணைகளில் 3 மாத இலவச களப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை, 'இயற்கை விவசாய பயிற்றுநர்களாகவும்' உருவாக்கி வருகிறோம். அவர்களின் பண்ணைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O
இன்றைய சூழலில் வேளாண் சார்ந்த சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆர்வம் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. இன்று நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 - 40 சதவீதம் சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்களும் முக்கியமான இடம் வகிக்கிறது. இதற்கான எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது.
கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பினை தொடர்ந்து இந்தாண்டு எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O நடத்தப்படுகிறது.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரை ஆற்ற உள்ளார்.
கருத்தரங்கு பேச்சாளர்கள்
இக்கருத்தரங்கில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதன் வளர்ச்சிக்கு உதவும் MSME திட்டங்கள், பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்வது குறித்த யுக்திகள், சந்தைப்படுத்துவதில் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நபார்டு கடனுதவி திட்டங்கள் குறித்து நபார்டின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து 10,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சியளித்த குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் வசந்தகுமார், வேளாண் வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் MSME அரசுத் திட்டங்கள் குறித்து வணிக யுக்தி ஆலோசகர் எம்.கே.ஆனந்த், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுடன் நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்கள் குறித்து தஞ்சாவூர் வசீகரா வேதா விஜயா மகாதேவன், மதுரை தனா ஃபுட் பிராடக்ட்ஸின் தனலட்சுமி விக்னேஷ், பனங்கருப்பட்டி தொழில் நுட்பங்கள் குறித்து தூத்துக்குடி ஃபாம் இரா நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.
கண்காட்சி
இந்த கருத்தரங்கில் வேளாண் சார்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி
- தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி
தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை வரியால்
வாழ்த்துகிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.
- ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூா், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
- சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?
சென்னை:
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:
மணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ, கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கும் லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டுள்ளார் திருப்பத்தூரில் உள்ள அனைத்து சிறுநீரகங்களையும் அகற்ற வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார். இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்.எல்.ஏ.வே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், தி.மு.க. அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.
- 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதற்கான ஆலோசனைகளை நம் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.
S.I.R, வாக்காளர் பட்டியல் முறைகேட்டுக்கு கண்டனம் - 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பின் வெற்றிக்குப் பாராட்டு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதற்கான ஆலோசனைகளை நம் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
- விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை என பொய்யாக போக்சோ புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.
இதனையடுத்து, "போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். .
- டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வின் போக்கு சரியாக இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணியை அறிவித்தது மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா தான். கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருக்கிறார். குறைந்தபட்ச செயல் திட்டம் என்று சொல்லி இருக்கிறார்.
எதிலே குறைந்தபட்ச செயல்திட்டம் வரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மொழிக்கொள்ளை, இருமொழிக்கொள்கை, கல்வி திட்டத்தில் தேசிய கல்வியா, மாநில கல்வியா, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை இப்படி பலவற்றில் எந்த அடிப்படையில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து வரப்போகிறது என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறது.
அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. பல்வேறு நிர்வாகிகள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒரு சில நபர்கள் திட்டமிட்டு கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
அமைப்பு செயலாளர் என்று எனக்கு பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அங்கிருந்து விலகி வந்துவிட்டேன்.
சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்தார்கள். இன்று நான் வந்து இருக்கிறேன்.
திராவிட இயக்கத்தை சார்ந்த கட்சி, பெரும்பான்மை பலத்தை உடைய கட்சி கூட்டணியை அதுதான் முடிவு செய்யும். அந்த கட்சி தான் முடிவு செய்யும்.
அ.தி.மு.க.வில் அதை முடிவு செய்வது டெல்லியாக உள்ளது. டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
ஒரு வேளை அ.தி.மு.க. ஆட்சி வந்தால் அதில் பா.ஜ.க. பங்கு எந்த அளவுக்கு இருக்கும், மத்திய அரசின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கும் இதையெல்லாம் யோசிப்பார்கள்.
இன்றைக்கு எந்த அளவிற்கும் பிரச்சனை இல்லாமல் முன்னேற்ற பாதையில் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி தொடர்வதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயம் 200-ஐ தாண்டுவோம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
தொடர்ந்து கட்சி மாறிட்டோம் என்று சொல்வது தவறான வாதம். ஒரு இயக்கத்தில் இருக்கிறேன். அந்த இயக்கத்தில் சந்தோஷமாக இருந்தால் நிச்சயமாக மாற மாட்டேன். பிரச்சனைகள் வருகிறது. சந்தோஷம் இல்லை. புழுக்கத்திலேயே அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த இலக்கை நோக்கி செல்கிறோம்.
ஓ.பி.எஸ். உடன் தொடர்பு இருந்தது. இப்போது கிடையாது.
கூட்டி வரப்பட்ட கூட்டத்தை பார்த்து விட்டு இ.பி.எஸ். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால் ஒரு எம்.ஜி.ஆர். போலவோ, ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
- போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர் நடிகைகளும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் இன்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அருகில் மருத்துவமனை உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுவோரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு எதிராகவோ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை. போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், யாரும் பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
- சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனம்
- தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.
தீர்மானம் : 1
சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள "வாக்குத்திருட்டு" மற்றும் "SIR" (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனம்
தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் - அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே "Mass deletion" இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்தும், அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் "வாக்குத் திருட்டை" எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்திய - அவர்கள் மீது FIR பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 2
திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை நடத்துவது மட்டுமல்ல - அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தன்னாட்சிபெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் - தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு - தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கைகோத்து நிற்பதும் - பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் திகழும் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து "இறந்த வாக்காளர்களை நீக்குதல்" "BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு" "பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல்" "அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்", "ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில் - தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 3
கழகத் தலைவர் திராவிட நாயகர் கட்டளைப்படி ஓரணியில் தமிழ்நாடு' முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து - உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!
இந்தியத் தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், கழகத் தலைவர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்ட கழக உறுப்பினர் சேர்க்கையான "ஓரணியில் தமிழ்நாடு" என்ற இயக்கம் - மக்கள் இயக்கமாக மாறி- இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறது. முற்போக்குத் திட்டங்களால் - ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரு புறமும், பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவுக் கரம் நீட்டுவதால் - மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார் நமது கழகத் தலைவர் என்பதை ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை - இப்போது மட்டுமல்ல - வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் - ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல - மதவெறி சக்திகளுக்கும் - அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது. இத்தகைய சாதனைக்குத் திட்டமிட்டதுடன், ஒவ்வொரு நாளும் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் நிலவரத்தைக் கேட்டறிந்து ஊக்கப்படுத்தி, ஆலோசனை வழங்கும் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்பான ஆணைக்கிணங்க 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து - உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், 'ஓரணியில் தமிழ்நாடு' தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், வீடுவீடாகச் சென்ற கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் - பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
- கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
'கூலி' மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன்பிக்சர்ஸ், சத்தியராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், சகோதரர்
அனிருத், சுருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.
- இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திரையுலகின் மாபெரும் நாயகன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள், திரை பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்த இந்த சிறப்பான தருணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.
சமூகப் பணியிலும், திரையுலகச் சேவையிலும் உங்களின் பங்கு மறக்க முடியாதது.
இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க.
நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று என்றும் பிரகாசிக்க வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






