என் மலர்tooltip icon

    சென்னை

    • மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார்.
    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.

    திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயற்சி மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார்.

    இந்நிலையில், திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க திருப்பத்தூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

    இதற்காக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்பத்தூருக்கு வழி அனுப்பி வைத்தனர்.

    • எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தொடர்ந்து, நேரில் வந்து நலம் விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் T.R.பாலு MP அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

    தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.
    • பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும்.

    சென்னையில் இன்று உயர்நிலைப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுவதால் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
    • இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    இது, முழுமையாக குளிர்சாதனம் செய்யப்பட்ட நவீனமான உள் அலங்காரம் கொண்ட அறையாகும். சொகுசான சோபா செட்கள் மற்றும் சாய்வு இருக்கைகள் கொண்டவை. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள்.

    மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.

    24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டண ஏசி காத்திருப்பு அறைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.

    அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு தலா ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை. நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தி இங்குக் காத்திருக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டை சீரமைப்பதற்கு நேற்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
    • இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அபினேஷ் 11-ம் வகுப்பும், முகேஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இளங்காடு பகுதியில் உள்ள தனது தாத்தா முனியன் வீட்டிற்கு பள்ளி மாணவர்கள் நேற்று காலை வந்தனர்.

    முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு நேற்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.

    • தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
    • 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.

    பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.

    தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

    எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.

    • எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
    • நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம்.

    சேலத்தில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது பற்றியும், சேலம் மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களுடன் த.வெ.க.வினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்தும் த.வெ.க. கட்சியின இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "இதனால் நாங்கள் வருத்தமடைந்தோம். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் இருந்து கேள்விப்பட்டோம். நாங்கள் அனைத்து முதலுதவிகளையும் வழங்கி, எங்கள் ஆம்புலன்ஸையும் அனுப்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் காலமானார். இந்த இழப்புக்கு நாங்கள் வருத்தப்படுகிறோம். எங்கள் பணியாளர்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர்.

    4,998 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தோம், அதை விடக் குறைவாகவே அனுமதித்தோம். 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தனர். பல மினி-கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் அவசர நிலைக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனுமதி இருந்தது. எங்கள் தலைவரின் உரைக்குப் பிறகு, மதியம் 1:10 மணிக்கு நிகழ்ச்சியை முடித்தோம். பொது பாதுகாப்பு குறித்து நாங்கள் நிச்சயமாக மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.

    சேலத்தில் நிருபர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து, சேலத்தில் சிறிய தவறான புரிதல் ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம், எதிர்காலத்தில் அப்படி நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

    நயினார் நாகேந்திரன் த.வெ.க.-வின் பலத்தை அறிவார், ஏனென்றால் கடந்த ஒரு வருடமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் தனது சகாக்களிடம் அவர் கேட்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் எங்கள் பலத்தை அறிந்திருப்பதால், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் தங்கள் கூட்டணியில் சேர எங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரே போட்டி த.வெ.க.-வுக்கும், தி.மு.க.-வுக்கும் இடையில்தான் என்று தெளிவாகக் கூறியுள்ளார். வேறு எந்தக் கட்சியும் களத்தில் இல்லை, மக்கள் ஏற்கனவே அவர்களை நிராகரித்துவிட்டனர். இந்தத் தேர்தல் நிச்சயமாக த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையேயான தேர்தல். இந்த விஷயத்தில் நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம்," என்றார்.

    • ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை.
    • இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் பலம், நீங்கள் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்தும் வகையில் பொறுப்புணர்வு கூடி உள்ளது.

    * ஒவ்வொரு வீட்டையும் அவர்களது பதவிக்கேற்ப அடையாளப்படுத்தியது தான் திராவிட மாடல் சாதனை.

    * தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த தொடர்ந்து பாடுபடுவேன்.

    * அரசின் திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து இருப்பதற்கு முக்கியமான காரணம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான்.

    * ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக இருந்தால் அந்த கிராமம் வளர்ச்சி அடையும்.

    * டி.என்.பி.எஸ்.சி. மூலம் 45,126 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    * ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 12,894 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்.

    * கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடி கல்வி, உங்களுடன் ஸ்டாலின் ஆகியவை முன்னோடி திட்டங்கள்.

    * கடந்த 5 ஆண்டுகளில் 1.56 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.

    * தனியார் முதலீட்டில் 38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திருக்கிறோம்.

    * இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் பலம், நீங்கள் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.

    * மனசாட்சியுடன் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
    • தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.

    2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?

    செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை "விடியா ஆட்சி வீட்டு பில்லே சாட்சி" என்று வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?

    இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே. யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.

    "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

    தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.
    • தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

    * மன நிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

    * இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.

    * 1.31 கோடி மகளிருக்கு சிறப்புத்தொகுப்பாக ரூ.5000 வழங்கி விட்டு வந்திருக்கிறேன்.

    * வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக உள்ளேன்.

    * தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

    * உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்துடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

    * மகிழ்ச்சியுடன் பொறுப்புணர்வும் அதிகரித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
    • தன்னம்பிக்கை கொண்ட பெண்களாக மாற்றியுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாக கூறி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே அறிவித்து இருப்பதற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த X தளப் பதிவில் அவர், "மத்திய அரசு மகளிர் உரிமை மானியங்களை தடுக்க இருப்பதாக கூறி, முன்கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பதால் தான், தனது அனைத்து தோல்விகளுக்கும் மத்திய அரசை குறை கூறும் பழக்கம் அவருக்கு உள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட அது தடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மேலும் எந்தவொரு முடிவும் மத்திய அரசிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வர வேண்டும். தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் இதை அறிவிக்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிக எதிர்ப்பு காரணமாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.

    90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒரே இரவில் அதைப் பெற்றதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். இதற்காக ஜன்தன் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவை தொடங்கிய நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்.

    மாண்புமிகு நரேந்திர மோடியின் முத்ரா கடன்கள் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளித்துள்ளன, இது அவர்களை தொழில் முனைவோராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களாகவும் மாற்றியுள்ளது.

    பெண்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்து டாஸ்மாக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு கணக்கெடுப்பு குடிகாரனைக் கொண்ட ஒரு குடும்பம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் மதுபானத்திற்காக செலவிடுவதாகக் கூறுகிறது.

    தமிழ்நாடு அரசு கடன் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 9.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு தமிழரின் கடனை ரூ. 1.4 லட்சமாகவும், வட்டிக்கு 40,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 அறிவித்துள்ளார், அதை தமிழக முதல்வர் இப்போது நகலெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் திமுக அமைச்சரிடம் பொங்கல் ஊக்கத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டபோது, இந்த ஆண்டு கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள், அடுத்த ஆண்டு வழங்குவோம் என்று பதிலளித்தார், அவர்கள் அதைச் செய்தார்கள். இவை அனைத்தும் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அறிவிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப் படுவதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் தான் திமுக அரசு முந்திக் கொண்டு இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் எல்லாம் களைந்து விட்ட நிலையில், தமது நாடகங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில் தான் முதலமைச்சர் வசனம் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது.

    தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் கூட ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பாமரர்களுக்குக் கூட தெரிந்த உண்மை. முதலமைச்சருக்கும் இது தெரியும். ஆனாலும், தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தமாக பணத்தைக் கொடுத்தாவது மக்களின் எதிர்ப்பைக் குறைக்க முடியுமா? என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முயற்சியை செய்திருக்கிறார். என்ன செய்தாலும் மக்களின் கோபம் குறையாது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டு மக்களின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கும் அக்கறை என்னவென்பதையும், அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

    ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவில்லை. அதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,'' வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால், எப்போதிலிருந்து வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்று தேதியை சொன்னோமா?'' என அதிகாரத் திமிரில் திமுக அமைச்சர்கள் வினா எழுப்பியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதை அறிந்து கொண்டு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தை திமுக அரசு அரைகுறையாக செயல்படுத்தியதையும் மக்கள் மறந்துவிடவில்லை.

    அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த திமுக, 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கி விட்டு, மீதமுள்ள 1.10 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தையும் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இன்னும் மறக்கவில்லை.

    பொங்கல் பரிசு வழங்குவதிலும் திமுகவின் அணுகுமுறை மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ, அப்போதெல்லாம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பொங்கல் பரிசு வழங்க மறுப்பதும், தேர்தல் வந்து விட்டால் அந்த ஆண்டில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதும் திமுகவின் கபட நாடகங்கள். இந்த நாடகங்கள் இனியும் தமிழகத்தில் எடுபடாது.

    தமிழ்நாட்டில் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், கிட்டத்தட்ட 150% அளவுக்கு சொத்து வரியும், குடிநீர் வரியும் உயர்த்தப்பட்ட போதும், ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்திய போதும் தமிழ்நாட்டு மக்கள் மீது திமுகவுக்கு வராத அக்கறை இப்போது வந்திருப்பது விந்தை தான். ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது; அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்று பா.ம.க. அறிவித்திருந்தது. இவை தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் நானும் அறிவிப்பை வெளியிடுகிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    உழவர்களுக்கான கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி செயல்படுத்த மறுத்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே வாங்கிக் குவித்திருக்கும் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் போதாதென கூடுதலாக ரூ.6,550 கோடியை கடனாக வாங்கித் தான் இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பதையும், இந்தத் கடனும் தங்கள் தலையில் தான் விழும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கூடுதலாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 லட்சத்தை பறித்துக் கொண்டு ஒரே முறை ரூ.5 ஆயிரத்தை வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள். மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×