என் மலர்
சென்னை
- முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
- தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது.
சென்னை:
முன்னாள் ஒன்றிய உள்துறை மந்திரியும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். பொதுவாழ்வில் அரைநூற்றாண்டுகால அனுபவம் கொண்ட அவர், மக்களவைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தமது கடமையைத் திறம்பட ஆற்றியவர்.
தலைவர் கலைஞர் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய அவரது மறைவு வேதனையைத் தருகிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-ந்தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் சேகர்.
- கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார்.
சென்னையின் 'பறவை மனிதர்' என்று அறியப்படும் ஜோசப் சேகர் (73) புற்றுநோய் பாதிப்பால் நேற்று இரவு காலமானார்.
தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்தவர் ஜோசஃப் சேகர்.
ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் தங்கியிருந்தபோது சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத் தொடங்கினார்.
காலப்போக்கில், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகள் அவரது இல்லத்துக்கு வந்து உணவு உண்டன.
ஆரம்ப காலத்தில் 'கேமரா ஹவுஸ் சேகர்' என்று அழைக்கப்பட்ட அவர் அவரின் அசாதாரண சேவையால் பின்நாட்களில் 'பறவை மனிதர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

வாடகை வீட்டில் வசித்து வந்ததால் உரிமையாளர் ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்ய சொல்லவே கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால் தன் கேமரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து அதனால் வரும் பணத்தில் கட்டடத்தை வாங்கலாம் என்கிற சேகர் நினைத்தார். ஆனால், அது கைகூடவில்லை.

வீட்டை காலி செய்தபின் கடந்த 2 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் அவர் பதிவு செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார். இந்த சூழலில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அன்புமணி சார்பில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
- திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்டத்தில் பங்கேற்குமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு டாக்டர் அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தை அன்புமணி சார்பில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு நேற்று பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பாலு அளித்த பேட்டியில், "த.வெ.க. முதல் மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அமைப்பாக த.வெ.க. இருக்கிறது. திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.
எனவே இந்த போராட்டத்தில் த.வெ.க. கலந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம் என கூறினார்.
இதையடுத்து பா.ம.க. போராட்டத்தில் த.வெ.க. பங்கேற்குமா? என த.வெ.க. தரப்பில் நிர்வாகி ரகுவிடம் கேட்டபோது, பா.ம.க. போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.விற்கு வந்த அழைப்பு கடிதத்தை கட்சி தலைவர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
கட்சி தலைவர் விஜய் பா.ம.க. கடிதம் குறித்து பரிசீலித்து த.வெ.க. பங்கேற்பது பற்றி முடிவு செய்வார் என்று கூறினார்.
- எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வினோத்குமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
- தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.
சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை
தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு - மாவட்டம்
ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி
நீலகிரி டீ - நீலகிரி
விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்
சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்
ஈரோடு மஞ்சள் -ஈரோடு
மதுரை மல்லி - மதுரை
கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்
கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி
ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்
வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்
ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி
கம்பம் பன்னீர் திராட்சை - தேனி
சோழவந்தான் வெற்றிலை - மதுரை
மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி
மதுரை மரிக்கொழுந்து - மதுரை
கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்
பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி
பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி
புளியங்குடி எலுமிச்சை - தென்காசி
சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்
சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்
சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்
ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்
கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி
பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்
மணப்பாறை முறுக்கு - திருச்சி
ஊட்டி வர்க்கி - நீலகிரி
உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி
சேலம் ஜவ்வரிசி - சேலம்
மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி
சேலம் சுங்குடி - சேலம்
காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்
பவானி ஜமக்காளம் - ஈரோடு
மதுரை சுங்குடி - மதுரை
தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்
சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்
நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி
ஆரணி பட்டு - திருவண்ணாமலை
கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்
சேலம் பட்டு - சேலம்
தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்
தோடா பூந்தையல் - நீலகிரி
பத்தமடைப் பாய் - திருநெல்வேலி
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்
செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை
தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்
கண்டாங்கி சேலை - சிவகங்கை
தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்
மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு
அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்
திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்
தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்
சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்
நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி
கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்
கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்
திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்
மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி
மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை
தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை
ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை
நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்
செடிபுட்டா சேலை - திருநெல்வேலி
விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை
தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி
கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்
கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி
உறையூர் பருத்தி சேலை - திருச்சி
கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு
நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்
பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்
அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி
- திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
- நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.
வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த அதே நேரத்தில், வெள்ளி விலையும் அசூர வேகத்தில் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் வரை 'கிடுகிடு'வென உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த மாதம் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது.
அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வருகிறது. வெள்ளி விலையோ, 'டாப் கியர்' போட்டு பறக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது.
நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. தற்போது அதனை தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவை சார்ந்த உலோகமாக அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், சர்மா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
குன்றத்தூர்: திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர், குன்றத்தூர் கோவில் வேவ் , போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், ஏஆர் எடைபாலம், சர்மா நகர், மேத்தா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
- விளையாட்டில் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக அரசின் 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ் சராசரியாக தினந்தோறும் 57 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.888 போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை போன்று பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக சமூக நலத்துறை சார்பில் குறைந்த வாடகையில் நவீன வசதிகளுடன் 'தோழி விடுதி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.
சென்னை, ஓசூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தோழி விடுதி இயங்கி வருகிறது. விளையாட்டிலும் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று பெண்களின் முன்னேற்றத்துக்காக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, கடன் உதவி, பெண் தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
இதில் சமூக சேவகியான 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022-ம் ஆண்டு சீனாவில் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
- குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
- 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.
இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.
இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.






