search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உருவார பொம்மை தயாரிக்கும் பணி மும்முரம்
    X

    உருவார பொம்மை தயாரிக்கும் பணி மும்முரம்

    • கோவில் திருவிழாக்களில் பெரிய அளவிலான உருவார பொம்மைகள் தெய்வங்களாக உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
    • தெய்வங்களின் உருவங்கள் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு கோவில்களுக்கு வழிபடுவதற்காக உருவாக்கப்படுகிறது.

    உடுமலை :

    திருப்பூர் குடிமங்கலம் சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு விருகல்பட்டியில் உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உருவார பொம்மைகள் கோவில் திருவிழாக்களில் நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகிறது. கோவில் திருவிழாக்களில் பெரிய அளவிலான உருவார பொம்மைகள் தெய்வங்களாக உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை உள்ளது.காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாகாளியம்மன், பட்டாளத்தம்மன் உள்ளிட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் கோவில் திருவிழாக்களில் வழிபாடு செய்வதற்காக உருவாக்கப்படுகிறது.

    உருவ வழிபாடு தோன்றிய காலத்திலிருந்தே உருவார பொம்மைகளை நேர்த்தி கடனாக செலுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய் குதிரை என பலவகைப்பட்ட உருவங்களை உள்ளடக்கிய உருவார பொம்மைகளை கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

    இதுகுறித்து விருகல்பட்டியை சேர்ந்த மண்பாண்டத்தொழிலாளி அழகிரிசாமி கூறியதாவது:-கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களின் போது தெய்வங்களின் உருவங்கள் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு கோவில்களுக்கு வழிபடுவதற்காக உருவாக்கப்படுகிறது. இதற்காக கொழுமம், கோதவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் களிமண் பயன்படுத்தப்படுகிறது.

    சோமவாரப்பட்டி அருகே மிகவும் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் திருவிழாவில் கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கால்நடைகளின் நோய் தீர உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக உருவார பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தது.கடந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்களே ஆல் கொண்டமால் கோவிலுக்கு வந்தனர்.

    இதன் காரணமாக உருவார பொம்மைகள் தயாரித்து வைத்திருந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.இந்த ஆண்டு கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்த உருவார பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியிலும் புதிதாக உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு ஒரு ஜோடி உருவார பொம்மைகள் ரூ.70 வரை விற்பனையாகும் .இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×