search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தொடர் மழையின் காரணமாக தருமபுரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

    தருமபுரி மாவட்டத்தில், பரவலாக பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் சின்னாறு, வாணியாறு, வரட்டாறு, தொப்பையாறு, கேசர்குழி, நாகாவதி உள்ளிட்ட அணைகள், ஈச்சம்பட்டி அணைக்கட்டும் உள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது.

     மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால், பெரும்பாலான அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 
    இந்த அணைகளில் இருந்து வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
    இந்நிலையில் மாவட்டத்தில் கோடையில் குறிப்பிடத்தக்க வகையில் பெய்த மழையாலும், முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழையாலும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

    நேற்றைய நிலவரப்படி, 17.35 அடி உயரம் கொண்ட ஈச்சம்பாடி அணைக்கட்டு, அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணைக்கட்டுக்கு வினாடிக்கு வரும் 596 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மொத்தம் 65.27 அடி உயரம் கொண்ட வாணியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கனஅடியாக உள்ளது. 
    அணையின் நீர்மட்டம் 29.85 கனஅடியாக உயர்ந்து உள்ளது. 50 அடி உயரம் கொண்ட சின்னாறு அணைக்கு வினாடிக்கு, 32 கனஅடி நீர்வரத்து உள்ளது. எனவே அணையின் நீர்மட்டம், 20 அடியாக உயர்ந்து உள்ளது.

    மொத்தம் 34.45 அடி உயரம் கொண்ட வரட்டாறு அணையில் தற்போது நீர்மட்டம் 28.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
     24.60 அடி உயரம் கொண்ட நாகாவதி அணையில் தற்போது நீர்மட்டம் 10.3 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 11 கனஅடி நீர் திறந்து உள்ளது. 
    50 அடி உயரம் கொண்ட தொப்பையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 23.66 அடியாக உயர்ந்து உள்ளது. 

    25.2 அடி உயரம் கொண்ட கேசர்குளி அணையில்  தற்போது நீர்மட்டம் 17.6 கனஅடியாக உயர்ந்தள்ளது. 14.76 அடி உயரம் கொண்ட தும்பல ஹள்ளி அணை நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
    மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×