search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா
    X
    மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா

    கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை கண்காணிக்க தனி போலீஸ் நியமனம்- மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா பேட்டி

    கல்லூரிகளில் விடுதி கிடைக்காத மாணவர்கள் வெளியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
    கோவை: 

    கோவை மாநகரில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தற்போது கல்லூரி மாணவ-மாணவிகளிடையே போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    இதனை தடுக்க மாநகர போலீஸ் சார்பில் கண்காணிப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா கூறியதாவது:-

    கோவை மாநகரில் ஏராள மான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் விடுதி கிடைக்காத மாணவர்கள் வெளியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் மத்தியில் தற்போது போதை கலாச்சார பழக்கங்கள் அதிகரித்துள்ளது.

    போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் செலவுக்காகவும், மற்றும் ஆடம்பர செலவு செய்வதற்காகவும் செயின் பறிப்பு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை செய்து வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    வெளியே தங்கி படிக்கும் மாணவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாமல் வெளியே தங்கி படிப்பதால் போதைக்கு அடிமையாகி குற்ற சம்பவங்களில் ஈடு-படுவது தெரியவந்துள்ளது. 

    எனவே இதனை தடுக்க மாநகரில் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கல்லூரிகளுக்கு சென்று எத்தனை மாணவர்கள் வெளியே தங்கி படிக்கிறார்கள் என்ற பட்டியலை சேகரித்து வருகின்றனர். 

    மேலும், மாணவர்கள் அறையெடுத்து தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்களிடம் எத்தனை மாணவர்கள் தங்கியுள்ளார்கள். அவர்கள் எந்தெந்த பகுதிகளை சேர்ந்தவர்கள். எங்கே படிக்கிறார்கள். போன்ற தகவல்களை சேகரித்து வருகின்றனர். 

    இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க முடியும்.  மேலும், போதை பழக்கத்திற்கு அடி-மையாகும் மாணவர்களை கண்காணித்து அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×