
குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிகாலை 4.17 மணிக்கு இடம்பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோப்பணம்-பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள குருபகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர். பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் குருபகவானும், தட்சிணா-மூர்த்தியும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முன்னதாக அதிகாலை கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவான், தட்சிணா-மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜை நடைபெற்றது. குருபெயர்ச்சியில் நன்மை பெறும் ராசிதாரர்களான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.