search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி‌ஷம்
    X
    வி‌ஷம்

    காரமடையில் கணவன்- மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    கணவன், மனைவி 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது45). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி(35) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    சுப்பிரமணி தந்தைக்கு சொந்தமாக அந்த பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரிப்பது தொடர்பாக சுப்பிரமணிக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

    சுப்பிரமணியின் மனைவி லட்சுமி தங்களுக்கு உரிய பங்கை பிரித்து வாங்குமாறு கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், இந்த பிரச்சினையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என தெரிவித்தார்.

    இதன் காரணமாக கணவன், மனைவிக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இது தொடர்பாக பிரச்சினை எழுந்தது.

    சுப்பிரமணி மற்றும் அவரது சகோதரர்கள் நிலம் பிரிப்பது தொடர்பாக பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனவருத்தம் அடைந்த லட்சுமி வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரிடம் விசாரித்த போது சாணிபவுடரை குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியான சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மனைவியின் உடலை பார்த்து சுப்பிரமணி மற்றும் அவரது குழந்தைகள் கதறி அழுதனர்.

    மனைவி இறந்ததால் மனவேதனை அடைந்த சுப்பிரமணி நேராக ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

    அங்கு மதுபாட்டிலை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் மதுவில் சாணிபவுடரை கரைத்து குடித்தார்.

    சிறிது நேரத்தில் அவரும் மயங்கி விழுந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காரமடை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கணவன், மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார், சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்று அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சொத்து தகராறில் தான் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன், மனைவி 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×