search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான கணபதி ராஜா
    X
    கைதான கணபதி ராஜா

    பேரையூர் அருகே கர்ப்பிணி மரணத்தில் திருப்பம்- காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்

    காதலித்து திருமணம் செய்த பெண், கர்ப்பிணியாக இருந்த நிலையில் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கணவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம், புல்லலக்கோட்டையைச் சேர்ந்தவர் வைரம். இவரது சகோதரி நாகலட்சுமி (வயது 24). இவர் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள வில்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதிராஜாவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.

    அதன் பிறகு கணவன்-மனைவி இருவரும் சித்தூரில் வசித்து வந்தனர். தற்போது 5 மாத கர்ப்பிணியான நாகலட்சுமி, வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகலட்சுமி பரிதாபமாக இறந்தார். 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த நாகலட்சுமி மாடியில் இருந்து எப்படி விழுந்தார்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதற்கிடையே நாகலட்சுமியின் சகோதரர் வைரமும் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது தங்கை நாகலட்சுமி சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா உத்தரவின்பேரில் வில்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். நாகலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு நடந்த பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நாகலட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கணபதி ராஜாவை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் தான் நாகலட்சுமியை கொலை செய்திருக்ககலாம் என போலீசார் கருதினர். இதனைத் தொடர்ந்து கணபதிராஜாவை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். காதலித்து திருமணம் செய்த பெண், கர்ப்பிணியாக இருந்த நிலையில் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் கணபதிராஜா கூறிய விவரம் வருமாறு:-

    திருமணத்திற்கு பிறகு நாகலட்சுமி வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் இருந்து வந்தார். இதனால் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டது. எனக்கும் நாகலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் துண்டால் நாகலட்சுமி கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் மயங்கினார்.

    எனவே மாடியில் இருந்து விழுந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு நாகலட்சுமி இறந்து விட்டார். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    நாகலட்சுமிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×