search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பயிர் சாகுபடி - உலர் களங்கள், வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்

    வழக்கமாக பாசன காலத்துக்கு முன்பும் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடி பரிந்துரைகள் வழங்கப்படும்.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்ப குதிகளில் வடகிழக்கு பருவமழை, சராசரியை விட கூடுதலாக பெய்துள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    எனவே தண்ணீர் பற்றாக்குறையால் தரிசாக கிடக்கும் விளைநிலங்களிலும், வரும் சீசனில்  சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    வழக்கமாக பாசன காலத்துக்கு முன்பும் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடி பரிந்துரைகள் வழங்கப்படும். அதாவது பாசன காலம், சீதோஷ்ண நிலை, விளைபொருள் விலை முன்னறிவிப்பு அடிப்படையில், மண் வகைகளுக்கு ஏற்ப சாகுபடி பரிந்துரை வழங்கப்படும்.

    தற்போது ஒரு சீசனில் ஒரே வகையான காய்கறி சாகுபடிகளை பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிக உற்பத்திக்கேற்ப விளைபொருளை மதிப்பு கூட்டு செய்வதற்கும் வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.

    வரும் சீசனில் கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் வழக்கத்தை விட தக்காளி, கத்தரி உட்பட சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஒரே சமயத்தில் அறுவடையும் துவங்கும் போது விலை வீழ்ச்சியடைந்து பறிக்கும் கூலிக்குக் கூட கட்டுப்படியாகாமல், தக்காளியை ரோட்டோரத்தில் வீசும் நிலை ஏற்படுகிறது.

    அதிக நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே வேளாண், தோட்டக்கலைத்துறை வாயிலாக மாற்று சாகுபடிகளை மேற்கொள்வதற்கான பரிந்துரை மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதனிடையே உடுமலை சுற்றுப்பகுதியில் சில விவசாயிகள் மலைப்பகுதியில் விளையும் பயிர்களை சாகுபடி செய்தும் வியாபாரத்தை பெருக்கியும் வருகின்றனர். அவ்வகையில், சிலர் அதிகளவில் பீன்ஸ் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பீன்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது. அதனால் 80 நாட்கள் பயிரான பீன்ஸ் செடிகளில் நடவு செய்த 65வது நாளில் இருந்து காய்பறிக்க முடிகிறது.

    இதற்கு நல்ல குளிர், ஈரப்பதம் நிறைந்த காற்று, தண்ணீர் வசதி, முறையான பராமரிப்பு போன்றவை தேவையாகும். பீன்ஸ் செடி, பூ, தண்டு என அனைத்தும் இனிப்புச்சுவை கொண்டவை. இதனால் புழுக்கள் அதிகம் காணப்படும். 

    ரசாயண மருந்துகள் தெளித்தால் செடிகள் வாடிவிடும் என்பதால் புழுக்களை ஒழிக்க மூலிகை, இயற்கை மருந்துகள் தெளிக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை வாயிலாக, தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதால் ஏக்கருக்கு, ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. மாற்றுப்பயிர் திட்டத்தால் ஓரளவு லாபம் பெற முடிகிறது என்றனர்.

    மேலும் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் விளைபொருட்களை காய வைப்பதற்கான உலர் களங்கள், இருப்பு வைப்பதற்கான குடோன்கள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ளன. குறைந்தளவில் சாகுபடி மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகள், உடுமலையிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வர முடிவதில்லை. 

    எனவே விளைநிலங்களின் அருகிலுள்ள பாறைகள் மற்றும் இதர பகுதிகளை உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர். சில கிராமங்களில், நீர்வள நில வள திட்டத்தின் கீழ் உலர் களம் மற்றும் சிறிய குடோன்கள் கட்டித்தரப்பட்டது.

    ஆனால், ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் அமராவதி மற்றும் கல்லாபுரம் கால்வாய் பாசனப்பகுதிகளில் விவசாயிகளுக்கு தேவையான உலர்கள வசதியில்லை. தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ஒவ்வொரு சீசனிலும், நெற்பயிர்களை அறுவடை செய்த பின்னர் அவற்றை அமராவதி பாலத்தின் மீதுள்ள சாலையில் காய வைக்கின்றனர். எனவே சிறு, குறு விவசாயிகள் அதிகமுள்ள பகுதிகளில் உலர் கள வசதியுடன் கூடிய குடோன்கள் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    கல்லாபுரம் பகுதியில் வேளாண் விற்பனை வாரியத்தின் வாயிலாக ஊரகக்கிடங்குகளை அமைக்க வேண்டும். கிடங்கு இல்லாததால் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

    போதிய குடோன் வசதி இல்லாதததால் தற்காலிக நெல் கொள்முதல் மையத்தையும் இப்பகுதியில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே உலர்களம், குடோன் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  
    Next Story
    ×