search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பி.ஏ.பி., திட்ட அணைகள் நிரம்பியுள்ளதால் நான்காம் மண்டல பாசனத்திற்கு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறப்பு

    திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பிய நிலையில் காணப்படுவதோடு திருமூர்த்தி அணையிலும், மொத்தமுள்ள 60 அடியில் 56.79 அடி நீர்மட்டம் உள்ளது.
    உடுமலை:

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு 3-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 

    மண்டல பாசன காலமான 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுக்களாக மொத்தம் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்க திட்டமிடப்பட்டது. 

    தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து வட கிழக்கு பருவமழையும் நடப்பாண்டு இயல்பை விட அதிகரித்ததால் பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. 

    நான்காம் மண்டல பாசனத்திற்கு 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 16-ந் தேதி பாசனத்தை நிறைவு செய்யவும், முதல் மண்டலத்தில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு வரும் 25-ந் தேதி முதல் நீர் திறக்க விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அனுமதிக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பிய நிலையில் காணப்படுவதோடு திருமூர்த்தி அணையிலும், மொத்தமுள்ள 60 அடியில் 56.79 அடி நீர் மட்டம் உள்ளது. தொகுப்பு அணைகளில் இருந்து நீர் எடுக்கப்படுவதால் காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 598 கன அடி நீரும், பாலாற்றின் வழியாக 190 கன அடி நீர் என அணைக்கு வினாடிக்கு 598 கன அடி நீர் வரத்து நிலவுகிறது. 

    அணையில் இருந்து பிரதான கால்வாயில் வினாடிக்கு 803 கன அடி நீரும், குடிநீர், இழப்பு என 27 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படாவிட்டால் முதல் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு முன் நிரம்பும் வாய்ப்புள்ளதால் நான்காம் மண்டல பாசன நிலங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மேலும் ஒரு வாரம் கூடுதலாக நீர் திறக்கப்படுகிறது.

    வரும் 23-ந்தேதி வரை நீர் வழங்கவும் முதல் மண்டல பாசனத்திற்கு 25-ல் நீர் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி காணப்படும் நிலையில் நீர் வரத்தும் உள்ளது. 

    அதனால் திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தொடர்ந்து நீர் எடுக்கப்படுகிறது. இந்த அணையும் நிரம்பும் என்பதால் நீர் வீணாவதை தடுக்க 4-ம் மண்டல பாசனத்திற்கு கூடுதல் நீர் வழங்கும் வகையில் பிரதான கால்வாயில் தொடர்ந்து நீர் திறந்து விடப்படுகிறது. 23-ந் தேதி இரவு நீர் நிறுத்தப்பட்டு முதல் மண்டல பாசன கால்வாய்களுக்கான மடைகள் திறக்கும் பணி மேற்கொள்ளப்படும். 25-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். 

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளகோவில், உத்தமபாளையம் கிராமத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 1-ந் தேதி முதல் பி.ஏ.பி.கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 18.50 அடி உயர்ந்துள்ளளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 24.75 அடி உயரம் ஆகும். 

    இதனால் வெள்ளகோவில் மற்றும் வட்டமலை கரை அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்வதால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் நிலை உயர்ந்து வருகிறது. 

    அணைக்கு நீர்வரத்து இருப்பதால் பறவைகள் வர தொடங்கியுள்ளன. 

    விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அணையை பார்வையிட்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. மூலனூர் ரோடு, மடாமேடு, சின்னக்கரை, கரட்டுப்பாளையம் காலனி, தஞ்செல்லியம்மன் கோவில் வழியாக மழைநீர் வழித்தடத்தில் தண்ணீர் சென்று குருக்கபாளையம் அணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது.

    கடந்த 6 மாதமாக தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இந்த அணையில் கட்லா, ரோகு போன்ற மீன்கள் வளர்க்கப்பட்டு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    வெளியூர்களில் இருந்து பறவைகள் வந்து தங்கி செல்கிறது. அணையை ஒட்டிய பகுதிகளில் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. 
    Next Story
    ×