search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட  பூங்கொடி.
    X
    கொலை செய்யப்பட்ட பூங்கொடி.

    வெள்ளகோவிலில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு

    குருநாதன் மனைவியை எதற்காக கொலை செய்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 62). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு சாந்தி, ரேவதி என்ற 2 மகள்கள், விநாயகன் என்ற மகன் உள்ளனர்.  

    ரேவதி கடந்த 2019-ம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். குருநாதன் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

    பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று  வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென பூங்கொடியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது குருநாதன் கடப்பாரையால் பூங்கொடியின் பின் தலையில் அடித்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. 

    இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    பின்னர் பூங்கொடி உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருநாதன் மனைவியை எதற்காக கொலை செய்தார் என்று தெரியவில்லை. 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×