search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கொசுக்கள் தொல்லையால் உடுமலை - மூணாறு சாலையில் உலா வரும் யானைகள்

    அமராவதி அணையில் நீர் இருப்பு 88 அடிக்கு மேலாக நீடித்து வருவதால் வனவிலங்குகள் அணைக்குள் செல்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும் தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் நம்பி உள்ளது.

    இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக வனப்பதியில் காய்ந்திருந்த மரங்கள் மற்றும் செடிகள் துளிர்விட்டு பசுமைக்கு திரும்பியது. இதனால் வனவிலங்குகளுக்கான உணவுத்தேவை பூர்த்தி அடைந்தது.

    அதைத்தொடர்ந்து அடிவார பகுதியில் முகாமிட்டுள்ள யானை, கடமான், காட்டெருமை உள்ளிட்டவை வனப்பகுதிக்கு திரும்பிச்சென்றது. ஆனால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வனவிலங்குகள் தவிர்த்து வந்தன. 

    இதையடுத்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மீண்டும் அடிவாரப்பகுதிக்கு திரும்பி வந்துவிட்டதாக தெரிகிறது. அமராவதி அணையிலும் நீர் இருப்பு 88 அடிக்கு மேலாக நீடித்து வருவதால் வனவிலங்குகள் அணைக்குள் செல்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

    இதனால் அணை அருகே முகாமிட்டுள்ள யானைகள் காலை நேரத்தில் உடுமலை-மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. 

    இதனால் யானைகள் மிரட்சி அடைந்து வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவங்கள் நிகழ்கிறது. 

    இதனால் உடுமலை- மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×